கடவுள் ஸார்!

ஸார்! கடவுள் ஸார்! நாம் கூப்பிடுறது கேட்கலையா ஸார்?

“கேக்குது சேதனன் ஸார். சொல்லுங்க ஸார். என்ன வேணும்?”

“ஸார், ஒரு வரம் வேணும் ஸார்”

“தயங்காம கேளுங்க ஸார்”

“ஒரு ஞாயிறு சாயங்காலம் என்னோட இருக்கணும்”

“என்ன புரோகிராம் சேதனன் ஸார்?”

“நான் எழுதின சில கதைகள நீங்க வாசிக்கணும் கடவுள் ஸார்”

“வாசிச்சா?”

“ஒரு வடையும் டீயும் வாங்கித் தருவேன் ஸார்”

“நல்ல மசாலா டீயா இருக்கட்டும் சேதனன் ஸார்”

“ஆனா ஒரு கண்டிஷன் ஸார். படிக்கும் போது கொஞ்சமும் முகம் சுளிக்கக் கூடாது. சுளிச்சா வடைய பிடுங்கிருவேன்”

“ம்ம். அடுத்த புரோகிராம் என்ன ஸார்?”

“ஒரு சினிமாவுக்கு போறோம் கடவுள் ஸார்”

“என்ன படம் ஸார்?”

“பரதேசி ஸார்”

“ஓ! விகடன் கூட நிறைய மார்க் போட்டிருக்கு. போலாம் ஸார்”

“ஒரு சின்ன விண்ணப்பம் கடவுள் ஸார்”

“சொல்லுங்க ஸார்”

“படம் பார்த்துட்டு ஒரு விமர்சனம் எழுதித் தரணும் ஸார். அதுல யாருமே யோசிக்காத கோணமெல்லாம் இருக்கணும் ஸார்”

“ஓண்ணும் ப்ரச்சனை இல்ல ஸார், சத்யம் சினிமாஸ்ல என்னோட ஆத்துக்காரிக்கும் சேர்த்து டிக்கட் புக் பண்ணிருங்க. போக வர என் டி எல் டாக்ஸிக்கு சொல்லிருங்க”

“ஸார்…”

“ஏன் சேதனன் ஸார் தலைய சொறியுறீங்க?”

“கடவுள் ஸார்! இதுக்கெல்லம் நீங்க காசு கொடுப்பீங்களா? என்கிட்ட வடையும் டீயும் வாங்கத்தான் காசு இருக்கு. நீங்க தான் நெறைய காசு வச்சுருப்பீங்களே ஸார்”

“சேதனன் ஸார்! காசில்லாதவனுக்கு எதுக்கு ஸார் பரதேசியும் விமர்சனமும்? போய் பொழப்பப் பாருங்க ஸார்”

________________________________________________________________________________________________________________________

Note to self – நாளைலருந்து ஒழுங்கா பொழப்பப் பாக்கணும்.


சிலப்பதிகாரத்தில் ஒரு சின்ன கைகலப்பு

நம்ம வீட்டில பூஜை நேரத்தில போடப்படும் சாம்பிராணிப் புகையை கவனிச்சு பார்த்திருக்கிறீங்களா? சின்ன வயசுல ரொம்ப நுணுக்கமாவே பார்த்திருப்போம். வளர வளர நம்ம observation கொறஞ்சு போயிருதே! அந்தப் புகைகள் ஒண்ணோட ஒண்ணு கலந்து அப்படியே மேல போறது எவ்வளவு அருமையான காட்சி! அப்படித்தான் கோவலனும் கண்ணகியும் ஒண்ணாக் கலந்து தன்ன மறந்து போனாங்களாம். மன்மதனும் ரதியும் கலந்து இருந்தாப் போல அவன் ஆற்றல் முழுசையும் கண்ணகிட்ட காட்ட, அவளும் தன் ஆற்றல் அத்தனையும் கோவலன் கிட்ட காட்ட, இப்படி ரெண்டு பேர் ஆற்றலும் அங்க கலந்து இருந்துச்சாம். அதுல அவங்களுக்கு ஏற்பட்ட நெறைவு கொஞ்சம் கூட கொறையலையாம்.  நெலயில்லாத இந்த வாழ்க்கைல முடிஞ்ச வரைக்கும் எல்லாத்தையும் அனுபவிச்சிரணும்கிற மாதிரி இருந்ததாம் அவங்க நெலம.

தூமப் பணிகளொன்றித் தோய்ந்தா லெனவொருவார்
காமர் மனைவியெனக் கைகலந்து-நாமந்
தொலையாத இன்பமெலாந் துன்னினார் மண்மேல்
நிலையாமை கண்டவர்போல் நின்று.

(தூமம் – நறும்புகை, பணி – பரவுதல்,  கை – ஆற்றல்,  நாமம் – நிறைவு)

இங்கே கை கலந்து என்பது வலிமை அல்லது ஆற்றல் கலந்து என பொருள்படுகிறது.