நிர்வாகத்திற்கு உதவும் காலண்டர்

ஒரு நல்ல நிர்வாகத்திற்குத் தேவையான பாடங்கள் நமது பழந்தமிழ் இலக்கியமான பழமொழி நானூறு செய்யுள்களில் உள்ளன. அந்தப் பழமொழிகள் இப்போதும் ஒரு வெற்றிகரமான நிர்வாகத்திற்குச் சிறந்த வழிகாட்டியாக உள்ளன. பழமொழி நானூறில் உள்ள சில பாடல்களை காலண்டராக வடிவமைத்திருக்கிறோம். எழுத்தாளர் என். சொக்கன் அவர்கள் பழமொழிச் செய்யுள்களுக்கு எளிமையாகவும் ரசிக்கும்படியாகவும் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் உரை எழுதியிருக்கிறார். இந்தக் காலண்டர்கள் 2014 புது வருட தினம் அன்று தங்கள் நிறுவனம் சார்பில் வாடிக்கையாளர்களுக்கு அன்பளிப்பாக கொடுக்க ஏற்றவையாகும். காலண்டர் தேவைப்படுபவர்கள் sales@scribblers.in க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். தங்கள் நண்பர்களுக்கும் சிபாரிசு செய்யுங்கள். மேலும் விபரங்களுக்கு http://scribblers.in

Calendar_2014
January_2014
July_2014
Page_15


பொருள் கொடுத்து இருள் வாங்கலாமா?

பழமொழி நானூறு பற்றிய என்னுடைய பதிவுகளின் நோக்கம் பழம்பெருமை பேசுவதல்ல, இலக்கியம் பற்றி பேசுவதும் அல்ல. நான் இந்த நூலை சுய முன்னேற்றப் புத்தக வரிசையில், ஒரு சிறந்த நூலாகப் பார்க்கிறேன். நிறைய சுய முன்னேற்ற நூல்கள் ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்க்கப்படுகின்றன, எவ்வளவு சிறப்பான நூலாக இருந்தாலும் அவற்றில் ஒரு அன்னியத் தன்மையை உணர முடியும். ஆனால் இவை நமது மொழியிலேயே எழுதப்பட்டவை, ஆயிரக்கணக்கான வருடங்களாக நமது மக்களின் பேச்சு வழக்கில் இருந்த பழமொழிகள் இவை.

பழமொழி நானூற்றில் உள்ள பொருட் செறிவைப் பற்றி ஆராயும் பொறுப்பை உங்களிடமே விடுகிறேன். பாடலுக்கு நான் எழுதியிருக்கும் விளக்கங்கள் ஒரு சின்ன வழிகாட்டி, அவ்வளவு தான். விளக்கத்தைப் படித்த பின் மறுபடியும் பாடலைப் படித்துப் பாருங்கள், உங்கள் வாழ்க்கை அனுபவத்திற்கு ஏற்ப இன்னும் பல நுணுக்கமான பொருள்கள் விளங்கும். இந்த நூலில் உள்ள நானூறு செய்யுள்களும், நம் முன்னோர்களின் பல ஆயிரம் வருட வாழ்க்கை அனுபவங்களின் சாரம், அதனால் இதன் பொருள் புரியும் போது பாடல்கள் எல்லாம் மனதிற்கு நெருக்கமாகி விடும். கொஞ்சம் மெனக்கெட வேண்டும், அவ்வளவு தான். பலாப்பழத்தை வெட்டி சுளை எடுப்பது கொஞ்சம் கஷ்டம் தான். ஆனால் சுளையின் ருசி?

இந்தக் கட்டுரையில், பழமொழி நானூற்றில் கல்வி என்னும் தலைப்பில் உள்ள பத்து பாடல்களைப் பற்றி பார்க்கிறோம். ‘Empty your cup’ என்று ஒரு ஜென் மொழி உண்டு. கிட்டத்தட்ட அதே பொருளில் ஒரு பழமொழியும் உண்டு – ‘கற்றொறுந்தான் கல்லாத வாறு’. கற்றலின் போது ஏன் அப்படி தமக்கு எல்லாம் தெரியும் என்கிற மனநிலையை விலக்க வேண்டும் என்பதற்கும் பாடலில் விளக்கம் உண்டு. பாடல்களைப் பார்ப்போம் இப்போது.

ஆற்றும் இளமைக்கண் கற்கலான் மூப்பின்கண்
போற்றும் எனவும் புணருமோ - ஆற்றச்
சுரம்போக்கி உல்குகொண்டார் இல்லையே இல்லை
மரம்போக்கிக் கூலிகொண் டார்.

1. ‘சுரம் போக்கி உல்கு கொண்டார் இல்லை.’ 2. ‘மரம் போக்கிக் கூலி கொண்டார் இல்லை.’ – இவை இந்தப் பாட்டில் வந்த பழமொழிகள். இளமையில் கல்வி கல்லாதவன் முதுமையில் கற்பது கடினம்! சுங்கச் சாவடியில் வரும் வண்டிகளை போக விட்ட பிறகு வரி வசூல் செய்ய முடியுமா? ஆற்றைக் கடக்க உதவும் ஓடக்காரன், ஆற்றைக் கடந்த பின் பயணிகளிடம் காசு வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்தால் காசு வந்து சேருமா? இளமை இருக்கும் போதே முடிந்த அளவு கல்வி கற்று விட வேண்டும்.

சொற்றொறும் சோர்வு படுதலால் சோர்வின்றிக்
கற்றொறும் கல்லாதேன் என்று வழியிரங்கி
உற்றொன்று சிந்தித் துழன்றொன் றறியுமேல்
கற்றொறுந்தான் கல்லாத வாறு.

கற்றறிந்த ஆசிரியர் முன்பு, கல்வி கற்கும் மாணவர்கள் நமக்கு எல்லாம் தெரியும் என்ற மனநிலையை தவிர்க்க வேண்டும். தன்னுடைய பாடத்தில் கவனத்தைக் குவித்துப் பொருள் அறிந்து கற்க வேண்டும். ‘கற்றொறுந்தான் கல்லாத வாறு’ என்பது பழமொழி. நிறைய விஷயங்கள் தெரிந்த மாதிரி பெரியவர்களிடம் நாம் பேசினால், அவர்களும் நம்மிடம் அது பற்றி விரிவாக பேசுவார்கள். அப்போது எங்கே ஏதாவது ஏடாகூடமாக பதில் சொல்லி மாட்டிக் கொள்வோமோ என்ற பயமே நமக்கு சோர்வைக் கொடுக்கும். அந்த மனநிலையை தவிர்த்தால் பாடத்தில் கவனமும் குவியும்.

விளக்கு விலைகொடுத்துக் கோடல் விளக்குத்
துளக்கமின் றென்றனைத்தும் தூக்கி விளக்கு
மருள்படுவ தாயின் மலைநாட என்னை
பொருள்கொடுத்துக் கொள்ளா ரிருள்.

விளக்கிற்கு வேண்டிய நெய் முதலியவற்றை விலை கொடுத்து வாங்குவது, அந்த விளக்கு இருள் நீக்கி தெளிவான காட்சி காட்ட வேண்டும் என்பதற்காக. நாம் கற்கும் கல்வி, அறிவு வெளிச்சத்தைத் தருவதாக இருக்க வேண்டும். ‘பொருள் கொடுத்து கொள்ளார் இருள்’ என்பது பழமொழி.  கற்கும் கல்வி நேர்மையான நல்ல விஷயத்தைப் பற்றியதாக இருக்க வேண்டும். யாராவது காசு கொடுத்து இருட்டை வாங்குவார்களா? எளிதாகச் சொல்ல வேண்டும் என்றால், சாஃப்ட்வேர் எழுதுபவர்கள் புரோகிராமும் எழுதலாம், வைரஸும் எழுதலாம். படித்த படிப்பெல்லாம் வைரஸ் எழுதத்தானா?

ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃதுடையார்
நாற்றிசையும் செல்லாத நாடில்லை - அந்நாடு
வேற்றுநா டாகா தமவேயாம் ஆயினால்
ஆற்றுணா வேண்டுவ தில்.

நன்கு கற்ற அறிவுடையவர்கள், உலகில் எந்த நாட்டிற்குச் சென்றாலும், அவர்களின் கல்வி அறிவுக்கு அங்கு நல்ல வரவேற்பிருக்கும். அவர்களுக்கு அங்கு உணவு பற்றிய கவலை தேவையில்லை. கற்றாருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு. ‘ஆற்று உணா வேண்டுவது இல்’ என்பது பழமொழி. நிறைந்த கல்வி கற்றவர்கள் பல நாடுகளுக்குச் சென்று வருவார்கள், அவர்களுக்கு அது வேறு நாடு என்ற தயக்கமெல்லாம் இருக்காது. தம் திறமையினால் நிறைய சம்பாதிக்கவும் செய்வார்கள், அதனால் அவர்களுக்கு உணவு பற்றிய கவலையெல்லாம் கிடையாது.

உணற்கினிய இன்னீர் பிறிதுழிஇல் லென்னும்
கிணற்றகத்துத் தேரைபோல் ஆகார் - கணக்கினை
முற்றப் பகலும் முனியா தினிதோதிக்
கற்றலிற் கேட்டலே நன்று.

கிணற்றில் வாழும் தேரை, இந்தக் கிணறு தவிர வேறு எங்கும் நல்ல நீர் கிடைக்காது என்று நினைக்கும். கல்வி கற்கும் மாணவர்கள், அது போல் இல்லாது, தாம் கற்கும் நூல்களைத் தவிர பிற நூல்களைப் பற்றியும் கேட்டு அறிவதே நல்லது. ‘கற்றலிற் கேட்டலே நன்று’ என்பது பழமொழி. புத்தகங்களை  படிப்பதோடு நின்று விடாமல், விஷயம் தெரிந்தவர்களுடன் உரையாடுவதன் மூலம் அறிவை வளர்த்துக் கொள்வது நல்லது.

உரைமுடிவு காணான் இளமையோன் என்ற
நரைமுது மக்கள் உவப்ப - நரைமுடித்துச்
சொல்லால் முறைசெய்தான் சோழன் குலவிச்சை
கல்லாமல் பாகம் படும்.

‘சிறுவனான இவனுக்கு வழக்கு முடிவு சொல்லத் தெரியாது’ என நினைத்தவர்களுக்கு மத்தியில் நரைமுடியுடன் வயதான வேடத்தில் வந்து வழக்கு தீர்த்தவன் கரிகாற் பெருவளத்தான் என்னும் சோழன். ‘குலவிச்சை கல்லாமல் பாகம் படும்’ என்பது பழமொழி. ஒருவன் கற்கும் கல்வி, தன் குடும்பத்தினரின் தொழில் சம்பந்தப்பட்டதாக இருந்தால் அந்தக் கல்வி மிகவும் எளிதாக இருக்கும்.

புலமிக் கவரைப் புலமை தெரிதல்
புலமிக் கவர்க்கே புலனாம் - நலமிக்க
பூம்புன லூர பொதுமக்கட் காகாதே.
பாம்பறியும் பாம்பின கால்.

சிறந்த கல்வி அறிவுடையவரின் திறனை, பிற அறிஞர்கள் எளிதாக  அடையாளம் கண்டு உணர்வார்கள். ‘பாம்பறியும் பாம்பின் கால்’ என்பது பழமொழி. கல்வியறிவு இல்லாதவர்களுக்கு கற்றவர்களுடைய அறிவின் தன்மை விளங்காது.

நல்லார் நலத்தை உணரின் அவரினும்
நல்லார் உணர்ப பிறருணரார் - நல்ல
மயிலாடு மாமலை வெற்பமற் றென்றும்
அயிலாலே போழ்ப அயில்.

ஒரு இரும்பை இன்னொரு கூர்மையான இரும்பைக் கொண்டுதான் பிளக்க முடியும். அது போல நன்கு கற்ற ஒருவரின் கண்ணோட்டத்தை, அவரை விட நன்கு கற்றவராலேயே உணர முடியும்.  ‘அயிலாலே போழ்ப அயில்’ என்பது பழமொழி. நல்லார் என்பதற்கு கற்றார் என்பது இங்கே பொருள். நலம் என்பதற்கு கண்ணோட்டம் என்றும் பொருள் உண்டு.

கற்றறிந்தார் கண்ட அடக்கம் அறியாதார்
பொச்சாந்து தம்மைப் புகழ்ந்துரைப்பர் - தெற்ற
அறைகல் அருவி அணிமலை நாட!
நிறைகுடம் நீர்தளும்பல் இல்.

முழுமையான கல்வி கற்றவர்கள், தம்மைத் தாமே புகழ்ந்து கொள்ள மாட்டார்கள், அடக்கமாக இருப்பார்கள். முழுமையாகக் கற்காதவர்கள் தான் தம்மைத் தாமே புகழ்ந்து கொள்வார்கள். ‘நிறைகுடம் நீர் தளும்பல் இல்’ என்பது பழமொழி. கற்றவவர்களின் அடக்கத்தின் பின்னால் இருக்கும் திறமைகள், அரைகுறைகளுக்குப் புரியாது.

விதிப்பட்ட நூலுணர்ந்து வேற்றுமை யில்லார்
கதிப்பவர் நூலினைக் கையிகந்தா ராகிப்
பதிப்பட வாழ்வார் பழியாய செய்தல்
மதிப்புறத்துப் பட்ட மறு.

தரம் குறைந்த நூல்களை நாடாமல், நல்ல நெறிகளைப் படித்து உணர்ந்து அதன்படி நடப்பவர்கள் அதிகாரத்துடன் வாழ்வார்கள். அவர்கள் கொஞ்சம் கீழ்த்தரமாக நடந்தால் கூட நிலாவில் உள்ள கறை போலப் பெரிதாகத் தெரியும். ‘மதிப்புறத்துப் பட்ட மறு’ என்பது பழமொழி.


நிர்வாகத்தில் உதவும் பழமொழிகள்

முத்தையா ஒரு செங்கல் வியாபாரம் ஆரம்பித்தான். முதலில் நூறு கல் வித்தாலே பெரிய வியாபாரமா இருந்தது. வேலைக்கு ஆள் வச்சுக்கலை. தனக்கே சம்பள அளவில் ஏதாவது கிடைச்சா போதும்னு நடத்தினான். கொஞ்ச கொஞ்சமா வியாபாரம் கூடிச்சு. செங்கலை லோடாக கேட்க ஆரம்பிச்சாங்க. கொஞ்சம் வருமானம் ஏறுச்சு. வேலைக்கு ஒரு ஆள் வச்சா இன்னும் கொஞ்சம் வியாபாரம் கூட்டலாம்னு நெலமை வந்தது. வர்ற வருமானத்தில சின்ன பங்கு சம்பளமா குடுத்தா என்னன்னு தைரியமா வேலைக்கு ஆள் வச்சான். ஒரு ஆள் பத்து ஆள் ஆச்சு. ஒரு லாரி வாங்கி அதுவும் ஏழெட்டு ஆயிருச்சு. பர பரன்னு எல்லாருமா வேலை பார்த்து பெரிய வியாபாரமா வளர்த்துட்டாங்க.

முத்தையாவுக்கு இப்போ தன்கிட்ட வேலை பார்க்கிற பத்து பதினஞ்சி பேரை சரியா வேலை வாங்கினாலே போதும். வியாபாரம் தன்னால நடக்கும். அவன் ரொம்ப படிச்சிருக்கலைன்னாலும் தன்னோட அனுபவத்தினால யார்கிட்ட என்ன வேலை குடுக்கலாம், எப்படி அவங்களை சோர்வடையாம வேலை வாங்கலாம்னு தெரிஞ்சிகிட்டான். ஒருத்தன வச்சு இன்னொருத்தன கண்காணிக்கிறது எப்படிங்கிறது கூட கத்துகிட்டான்.

Mary Parker Follett என்னும் அமெரிக்க மேலாண்மை ஆலோசகர் (அவர் வாழ்ந்து முடிந்து 80 வருஷம் ஆகுது) ”management is the art of getting things done through people” என்கிறார். இவர் எழுதிய மேலாண்மையப் பற்றிய தத்துவங்கள் முக்கியமானவையாக பேசப்படுகிறது. முத்தையாவுக்கு இதெல்லாம் தெரியாது, ஆனால் இதத்தான் அவன் செஞ்சிகிட்டு இருக்கான்.

மேலாண்மையை ஆறு செயல்பாடுகளாக பிரிக்கிறார்கள்.

  1. Planning
  2. Organizing
  3. Staffing
  4. Leading
  5. Monitoring
  6. Motivation

Planning – திட்டமிடுதல். எவ்வளவு செங்கல் வித்தா எவ்வளவு வருமானம் கிடைக்கும், எவ்வளவு செங்கல் இங்கே விற்க முடியும், நாம் எவ்வளவு கொள்முதல் செய்து இருப்பு வைக்கலாம் என்பதெல்லாம் யோசித்து முடிவு செய்வது. பழமொழி நானூற்றில் உள்ள ஒரு பாடல் இது.

தற்றூக்கித் தன்துணையுந்தூக்கிப் பயன்தூக்கி
மற்றவை கொள்வ மதிவல்லார் - அற்றன்றி
யாதானும் ஒன்றுகொண்டு யாதானும் செய்தக்கால்
யாதானும் ஆகி விடும்.

இதில் உள்ள பழமொழி – ’யாதானும் ஒன்று கொண்டு யாதானும் செய்தக்கால் யாதானும் ஆகிவிடும்’.

இது நம்மால் செய்ய முடியுமா, இதை செய்து முடிக்கும் அளவு நமக்கு துணை உள்ளதா (ஆள் துணை மட்டுமில்லாமல் storage, transportation போன்றவையும் சேர்த்து), இதை முடிப்பதால் நமக்கு போதுமான பயன் உண்டா (வருமானம்) என்பதெல்லாம் யோசித்து அப்புறம் காரியத்தில் இறங்குபவர் வல்லவர்.

Organizing ஒருங்கிணைத்தல். அதாவது செயல்முறை வகுப்பது. செங்கலின் இருப்பை பராமரிக்க ஒருவர், வரவு செலவு எழுதி வைக்க ஒருவர், வசூல் செய்ய ஒருவர், இப்படி வேலைகளை பிரித்து கொடுத்து அவர்களுக்குள் ஒரு நல்ல பிணைப்பை ஏற்படுத்துவது.

முடிந்ததற்கு இல்லை முயற்சி முடியாது
ஒடிந்ததற்கு இல்லை பெருக்கம் வடிந்தற
வல்லதற்கு இல்லை வருத்தம் உலகினுள்
இல்லதற்கு இல்லை பெயர்.

இதில்  ‘வடிந்தற வல்லதற்கில்லை வருத்தம்’ என்று பழமொழி ஆசிரியர் சொல்வது organizing என்பதற்கு பொருத்தமாக உள்ளது. அதாவது எந்த ஒரு வேலையையும், அது எவ்வளவு கடினமானதா இருந்தாலும், தெளிவா ப்ளான் பண்ணி பிரிச்சிகிட்டோம்னா அது நல்லபடியா முடியும்..

Staffing சரியான ஆட்களை வேலைக்கு அமர்த்துவது. அவர்கள் தகுதி தெரிந்து சரியான வேலை கொடுப்பது. பழமொழி  நானூறில் இதற்கு நிறைய பாடங்கள் உள்ளது.

தெற்ற அறிவுடையார்க் கல்லால் திறனிலா
முற்றலை நாடிக் கருமஞ் செயவையார்
கற்றொன் றறிந்து கசடற்ற காலையும்
மற்றதன் பாற்றேம்பல் நன்று.

தெளிந்த அறிவுடையவர் திறன் இல்லாதவனை வேலையில் அமர்த்த மாட்டார். கற்று அறிந்தவரையும் குற்றம் இல்லாதவரையும் வேலைக்கு வைத்துக் கொள்வார்கள். யார் யாரை வேலைக்கு வைத்துக் கொள்ளக் கூடாது என்பதற்கு நிறைய பழமொழிகள் உள்ளன.

Leading வழி நடத்துதல். இது ஒரு மேனேஜரின் வேலை. எந்த சூழ்நிலையிலும் சரியான முடிவெடுக்கும் திறன். உதாரணத்திற்கு வேலை செய்பவர்கள் ஸ்ட்ரைக் செய்தால் அவர்களை வழிக்கு கொண்டு வர தெரிந்திருக்க வேண்டும். வாடிக்கையாளர்க்கு சப்ளை பாதிக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

செந்நீரார் போன்று சிதைய மதிப்பார்க்கும்
பொய்ந்நீரார் போன்று பொருளை முடிப்பார்க்கும்
அந்நீர் அவரவர்க்குத் தக்காங் கொழுகுபவே
வெந்நீரின் தண்ணீர் தெளித்து.

சிலரிடம் தன்மையாக நடந்து கொண்டால் தான் வேலை வாங்க முடியும். வேறு சிலரிடம் கடுமை காட்டினால் தான் வேலை நடக்கும். குளிக்கும் போது தேவைக்கேற்ப தண்ணீரில் வெந்நீர் கலப்பது போல அவரவர் தன்மைக்கேற்ப வேலை வாங்க வேண்டும். ஒரு மேனேஜருக்கு உபயோகமான பாடம் இது.

Monitoring – கண்காணித்தல். அவரவர் வேலையை பிரித்து ஒப்படைத்து விட்டாலும், அவர்கள் நல்லவர் ஆனாலும் வல்லவர் ஆனாலும் அவர்களிடம் வேலையின் நடப்பு நிலை பற்றி தொடர்ந்து விசாரித்து வர வேண்டும். இதற்கு ரொம்பவே பொருத்தமான பாடல் ஒன்று உண்டு.

விட்டுக் கருமம் செயவைத்த பின்னரும்
முட்டா தவரை வியங்கொளல் வேண்டுமால்
தொட்டக்கால் மாழ்கும் தளிர்மேலே நிற்பினும்
தட்டாமல் செல்லா துளி.

தொட்டாலே துவளும் துளிரின் மேல் உளியை வைத்தாலும், அந்த உளியை தட்டினால் ஒழிய அது தளிரை வெட்டாது. அது போல பிறரிடம் ஒரு காரியத்தை ஒப்படைத்தால் தொடர்ந்து அவரிடம் அது என்னாயிற்று என்று விசாரித்து வர வேண்டும்.

Motivation ஊக்கப்படுத்துதல். வேலை பார்ப்பவர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும், கொஞ்சம் ஊக்கம் சேர்த்து கொடுத்தால் அங்கே வேலை நன்றாக நடக்கும். எல்லாருமே ஒரு அங்கீகாரத்திற்காக ஏங்குபவர்கள் தான். இங்கே ஒரு ஊக்கம் தரும் பாடல்.

வீங்குதோட் செம்பியன்சீற்றம் விறல்விசும்பில்
தூங்கும் எயிலும் தொலைத்தலால் - ஆங்கு
முடியும் திறத்தால் முயல்கதாம் கூரம்
படியிழுப்பின் இல்லை யரண்.

கூர்மையான அம்பை வில்லில் பொருத்தி அதன் அடியை இழுத்தால் எதிரே இருக்கும் எந்த தடையும் பொடி பொடியாகி விடும். நம்முடைய முயற்சி அந்த வகையில் இருந்தால் எவ்வளவு கடினமான காரியத்தையும் சாதிக்கலாம்.

மேலே சொன்ன செய்யுள்கள் பழங்காலத்தில் எழுதப்பட்டதால் புரிவதற்கு கொஞ்சம் கடினமாக இருக்கும். ஆனால் அதன் பொருள் உணர்ந்து பார்க்கும் போது இப்போதுள்ள மேலாண்மைக்கும் அது பொருத்தமாகவே உள்ளது. பழமொழி நானூறு மொத்தம் நானூறு பாடல்கள் கொண்டது. இந்நூல் பதினெண் கீழ்க்கணக்கில் வருகிறது. இதன் ஆசிரியர் முன்றுறையரையனார். இதன் காலம் ஐந்தாம் நூற்றாண்டு என கருதப்படுகிறது. தற்சிறப்பு பாயிரத்தில் ‘பண்டைப் பழமொழி நானூறும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ஐந்தாம் நூற்றாண்டிலேயே இந்தப் பழமொழிகள் பழமையானது என்றால் அவை வழக்கத்தில் தோன்றிய காலத்தை யோசித்துப் பார்த்தால் அதன் தொன்மை புரியும்.

பழமொழி நானூறு பல விஷயங்கள் பற்றி பேசுகிறது. கல்வி, ஒழுக்கம், பொருள், முயற்சி, நட்பு, அரசியல், நன்றி, காரியம் முடிக்கும் சாதுர்யம், இல்வாழ்க்கை, இப்படி அது தொட்டுச் செல்லும் தலைப்புகள் அதிகம். பகைவனை எப்படி சமாளிப்பது என்று கூட பாடல்கள் உண்டு. இதோ ஒரு உதாரணம்.

இயற்பகை வெல்குறுவான் ஏமாப்ப முன்னே
அயற்பகை தூண்டி விடுத்தோர் - நயத்தால்
கறுவழங்கிக் கைக்கெளிதாய்ச் செய்க அதுவே
சிறுகுரங்கின் கையாற் றுழா.

தனது பகைவனை வெல்ல நினைப்பவன், முதலில் தனது பகைவனுக்கு எதிராக இன்னொரு பகையை வெளியே இருந்து தூண்டி விட்டு ஒரு குழப்ப நிலையை உருவாக்கி, தமது பகை தீர்ப்பதற்கு சாதகமான நிலையை உருவாக்கலாம். பெரிய குரங்கு வேகின்ற கூழை சிறிய குரங்கின் கையாயால் கிளறி விடுவது போல. ’சிறுகுரங்கின் கையாற் றுழா’ என்பது பழமொழி. பகையைப் பற்றிய வகையில்  இந்த பழமொழி வந்தாலும், இதை வணிகத்தில், செய்யும் தொழிலில், போட்டியாளர்களை சமாளிக்கும் விஷயத்தில் பொருத்திப் பார்க்கலாம்.

இந்த பழமொழியெல்லாம் இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்பே பேச்சு வழக்கில் இருந்துள்ளது. சிக்கலான நிர்வாக தத்துவமெல்லாம் சர்வ சாதாரணமா பழமொழியா பேசியிருக்காங்க. வரலாற்றில் படிச்சிருக்கோம், பழங்காலத்தில் தமிழர்கள் வாணிபத்தில் வல்லவராய் இருந்தார்கள், கடல் கடந்து வாணிபம் செய்து நிறைய பொருள் சம்பாதித்தார்கள் என்று. இந்த நிர்வாகத் தெளிவு கூட ஒரு காரணமாக இருந்திருக்கலாம். அதுதான் இன்றைக்கும் முத்தையா மாதிரி வியாபாரிகளுக்கு இரத்தத்திலேயே ஊறியிருக்கு போல.