தனிக்கூத்து கண்ட திருமூலர்

செப்புஞ் சிவாகமம் என்னும்அப் பேர்பெற்றும்
அப்படி நல்கும் அருள்நந்தி தாள்பெற்றுத்
தப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின்
ஒப்பில் எழுகோடி யுகமிருந் தேனே. – (திருமந்திரம் – 74)

திருமூலர் சொல்கிறார் – ”நான் சொல்லும் இந்த திருமந்திரம் சிவாகமம் என்னும் பேர் பெற்றது, அந்த ஆகமத்தை எனக்கு அருளிய நந்தி பெருமானின் திருவடியை நான் பெற்றதாலேயே! தில்லையம்பலத்தில் அந்த சிவபெருமானின் ஒப்பற்ற நடனத்தை கண்டபின் ஒப்பளவில் ஏழு கோடி யுகம் இருந்தேன்”.


திருமந்திரம் என்னும் ஆகமம்

நந்தி திருவடி நான்தலை மேற்கொண்டு
புந்தியின் உள்ளே புகப்பெய்து போற்றிசெய்
தந்தி மதிபுனை அரனடி நாள்தொறும்
சிந்தைசெய் தாகமம் செப்பலுற் றேனே. – (திருமந்திரம் – 73)

என் குருநாதரான நந்தி பெருமானின் திருவடிகளை என் தலை மேற்கொண்டு புத்தியில் நிறுத்தி வணங்குகிறேன். மாலைச் சந்திரனை தன் தலையில் சூடியுள்ள சிவபெருமானின் திருவடிகளை நாள்தோறும் நினைத்து தியானம் செய்து இந்த திருமந்திரம் என்னும் ஆகமத்தை சொல்லத் தொடங்குகிறேன் என திருமூலர் சொல்கிறார்.


மழை பெய்தாலும் கடமை தவறக்கூடாது

எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையுஞ்
செழுந்தண் நியமங்கள் செய்யுமின் என்றண்ணல்
கொழுந்தண் பவளக் குளிர்சடை யோடே
அழுந்திய நால்வர்க்கு அருள்புரிந் தானே. – (திருமந்திரம் – 72)

தன் குளிர்ந்த சடையில் பவளம் சூடியுள்ள சிவபெருமான் நிறைந்த அருள் தருபவன். அந்த சிவபெருமான் தன்னிடம் மிகுந்த அன்பு வைத்திருக்கும் சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் ஆகிய நால்வருக்கும் செய்த உபதேசம் என்னவென்றால் எட்டுத் திசையிலும் பெரிய மழை பெய்தாலும் நியமங்களைத் தவறாமல் செய்ய வேண்டும் என்பதே!


இந்துவும் பானுவும்

இந்துவும் பானுவும் இருவரும் உயரமாய்
பந்தென ஆடுவார் பளிச்சிடும் ஒளியுடன்!
இந்துவந் தாடுவாள் இரவிலே குளிர்ச்சியாய்
முந்திடு பானுவை, முன்னெழு தினமே!

(இந்து – நிலா, பானு – சூரியன். அதிகாலையில் சூரியன் உதிக்கும் முன் எழ வேண்டும் என்பதே இந்த பாடலின் பொருள்)


சிவபெருமானிடன் உபதேசம் பெற்றவர்கள்

மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன்
ஒழிந்த பெருமை இறப்பும் பிறப்பும்
செழுஞ்சுடர் மூன்றொளி யாகிய தேவன்
கழிந்த பெருமையைக் காட்டகி லானே. – (திருமந்திரம் – 71)

பிறப்பு, இறப்பு ஆகிய இரண்டுமே இல்லாத பெருமை உடையவன் சிவபெருமான். அவன் தனது கடந்த கால பெருமையை வெளியே காட்டிக் கொள்வதில்லை. சந்திரன், சூரியன், அக்கினி ஆகிய மூன்று வடிவாகவும் உள்ள சிவபெருமான் சிவயோக முனிவர், பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஆகிய மூவர்க்கும், சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் ஆகிய நால்வருக்கும் உபதேசம் அருளினான்.


மேன்மை பெற்ற குருநாதர்கள்

நால்வரும் நாலு திசைக்கொன்று நாதர்கள்
நால்வரும் நானா விதப்பொருள் கைக்கொண்டு
நால்வரும் யான்பெற்ற தெல்லாம் பெறுகென
நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே. – (திருமந்திரம் – 70)

நந்தி பெருமானின் அருள் பெற்ற குருநாதர்களான சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் ஆகிய நால்வரும் நான்கு திசைகளுக்கு ஒருவராக சென்று தாம் பெற்ற அனுபவங்களை எல்லாம் மற்றவர்களுக்கு எடுத்துச் சொன்னார்கள். தம்முடைய ஆன்மிக அனுபவங்களை பிறர்க்கு பகிர்ந்ததால் மேன்மையானவர் ஆனார்கள்.


திருமூலரிடம் உபதேசம் பெற்ற ஏழு பேர்

மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்
இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன்
கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோடு
இந்த எழுவரும் என்வழி யாமே. – (திருமந்திரம் – 69)

திருமூலரிடம் திருமந்திரத்தை உபதேசமாகப் பெற்றவர்கள் ஏழு பேர். 1. மாலாங்கன், 2. இந்திரன், 3. சோமன், 4. பிரமன், 5. உருத்திரன், 6. காலாங்கி, 7. கஞ்சமலையன்.

(கந்துரு – கட்டுத்தறி. கட்டுத்தறி போல அசையாதிருந்து யோகம் செய்யும் காலாங்கி)


நந்தி அருள் பெற்ற எட்டு பேர்

நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர்
என்றிவர் என்னோ டெண்மரு மாமே. – (திருமந்திரம் – 67)

நந்தி பெருமான் அருள் பெற்ற குருநாதர்கள் யார் யாரெல்லாம் என்று பார்த்தால் சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் ஆகிய நால்வர். இவர்களுடன் சிவயோக முனிவர், பதஞ்சலி, வியாக்கிரமர், திருமூலர் ஆகிய நால்வருடன் சேர்த்து மொத்தம் எட்டு பேருமாகும்.


இனித்தாய் எங்கும்

புதிதாய்த் திருமணம் ஆன தம்பதி அவர்கள். மிகவும் சந்தோஷமாக இருந்த நேரத்தில் தலைவன் தலைவியிடம் சொன்னான்.

இனித்தாய் அங்கும் இங்கும் எங்கும்
இனித்தாய் கடிந்தால்சொல் வந்து.

இதைக் கேட்டு மனம் புண்பட்ட தலைவி மென்மையாகக் கடிந்தாள்.

இனித்தேன் இனிப்பேன் இனியும் நீங்குவேன்
இனித்தாய் தனைபழித் தால்.

பந்தங்களிலிருந்து விடுபடும் முறை

அவிழ்கின்ற வாறும் அதுகட்டு மாறும்
சிமிட்டலைப் பட்டுயிர் போகின்ற வாறும்
தமிழ்ச்சொல் வடசொல் எனும்இவ் விரண்டும்
உணர்த்தும் அவனை உணரலு மாமே. – (திருமந்திரம் – 66)

சிவபெருமான் பந்தங்களிலிருந்து பற்றை நீக்கும் முறையையும், இறைவனின் திருவடியில் பற்று வைக்கும் விதத்தையும் ஆகமங்களின் மூலமாக நமக்கு அருளினான். மேலும் அவ்வாகமங்கள் கண் இமைத்தல் ஒழித்து உயிர் போகின்ற முறையையும் சொல்லித் தருகின்றன. தமிழ் மொழி மற்றும் வடமொழி ஆகியவற்றில் உள்ள இந்த ஆகமங்கள் மூலமாக நாம் இறைவனை உணரலாம்.