சிவபெருமான் கட்டித் தரும் வெள்ளிக் கோயில்

மேலும் முகடில்லை கீழும் வடிம்பில்லை
காலும் இரண்டு முகட்டலக் கொன்றுண்டு
ஓலையான் மேய்ந்தவர் ஊடு வரியாமை
வேலையான் மேய்ந்ததோர் வெள்ளித் தளிகையே.  – (திருமந்திரம் –161)

விளக்கம்:
பிரமனால் கட்டப்பட்ட நம்முடைய இந்த உடல் என்னும் வீடு, சரியான கட்டுமானம் இல்லாதது. இந்த வீட்டிற்கு மேலே கூரை இல்லை. கீழே கூரை தாங்கும் விளிம்பும் இல்லை. ஒப்புக்கு இரண்டு கால்களும், ஒரு முதுகுத்தண்டும் இருக்கின்றன. அவைதான் நம்மை நடமாட வைக்கின்றன. ஆனால் சிவபெருமான் ஒரு சிறந்த வேலையான். அவன் நமக்காக ஒரு வெள்ளிக் கோயிலையே கட்டித்தருகிறான். நாம் இந்த உடலின் மீது பற்று வைக்காமல், அவன் திருவடியையே நாடி இருந்தால், அழிவில்லாத அந்த வெள்ளிக் கோயிலில் குடியிருக்கலாம்.