பொதுமகளிரிடம் ஏமாறாதீர்கள்

இயலுறும் வாழ்க்கை இளம்பிடி மாதர்
புயலுறும் புல்லின் புணர்ந்தவ ரேயினும்
மயலுறும் வானவர் சாரஇரும் என்பார்
அயலுறப் பேசி அகன்றொழிந் தாரே.  – (திருமந்திரம் – 206)

விளக்கம்:
ஒருவனது வாழ்க்கை நிலை நன்றாக இருக்கும் போது, பெண் யானையைப் போன்ற அழகிய இளம் பெண்கள் மழையில் புல் நனைந்திருப்பதைப் போல் வந்து கலந்திருப்பார்கள். அந்தப் பெண்கள் அவனை விட வசதியான இன்னொருவனைப் பார்த்து மயங்கி விட்டால், முதலாமவனை காத்திருக்கச் சொல்லித் தவிர்ப்பார்கள். மேலும் அவனை தனியாக அழைத்து ஏதாவது பேசி வழி அனுப்பி வைக்கப் பார்ப்பார்கள்.

பொதுமகளிரின் தன்மை அறியாமல், அவர்களைத் தேடி வாழ்நாளை வீணாக்க வேண்டாம். அவர்கள் இன்னும் தகுதியான ஒருவன் கிடைத்து விட்டால், அவனோடு ஒட்டிக் கொள்வார்கள்.

பிடி என்னும் சொல்லுக்கு பேய் என்றும் அகராதி அர்த்தம் சொல்கிறது. அந்த அர்த்தமும் இங்கே பொருத்தமாகவே உள்ளது.

இயல் – தகுதி, பெருமை,   பிடி – பெண் யானை,   மயல் – மயக்கம்,   அயல் – அருகிடம்