உதடும் உயிரும் கரைந்ததே

இனிப்புச் சாரலென வந்து ஒட்டும்
மகிழ்ச்சித் தீண்டலில்
கரைந்ததென் உதடும் உயிரும்.

ஒவ்வொரு துளியிலும்
ஆயிரமாயிரம் நுண்மைகள்.
ஒன்று விடாமல்
ரசித்தேன்
ருசித்தேன்.

இன்னும் கொஞ்சம்
இன்னும் கொஞ்சம்
என கேட்டு வாங்கியும்
வெட்கம் விட்டு கேட்காமலே
எடுத்து அள்ளியும்
ஆசை அடங்குவதாயில்லை.
நானும் விடுவதாயில்லை.

இதையெல்லாம் ஒரு கவிதை
என்று நீங்கள் நம்பினால்
ஐஸ்கிரீம் என்று
தலைப்பிட்டுக் கொள்ளுங்கள்.


குருவருள் இருந்தால் பிராணாயாமம் வசப்படும்

ஆரிய னல்லன் குதிரை இரண்டுள
வீசிப் பிடிக்கும் விரகறி வாரில்லை
கூரிய நாதன் குருவின் அருள்பெற்றால்
வாரிப் பிடிக்க வசப்படுந் தானே.   – (திருமந்திரம் – 565)

விளக்கம்:
நம்முடைய உடலில் பிராணன், அபானன் என இரண்டு குதிரைகள் ஓடுகின்றன. அறிவுடைய நம் மனம் நல்லவனாக இருந்தாலும், அக்குதிரைகளை இழுத்துப் பிடிக்கும் வழிமுறையை நாம் அறிந்து கொள்ளவில்லை. அறிவு நுட்பம் கொண்ட குருநாதரின் அருள் பெற்றால் அக்குதிரைகளை நம் வசப்படுத்தலாம்.

குருவருள் பெற்றால் பிராணாயாமப் பயிற்சியின் சூட்சுமம் வசப்படும்.

ஆரியன் – அறிவுடையவன்,    விரகு – வழிமுறை