தியானத்தினால் மன இருள் நீங்கும்

இளைக்கின்ற நெஞ்சத் திருட்டறை உள்ளே
முளைக்கின்ற மண்டலம் மூன்றினும் ஒன்றித்
துளைப்பெரும் பாசந் துருவிடு மாகில்
இளைப்பின்றி மார்கழி ஏற்றம தாமே.  –  (திருமந்திரம் – 614)

விளக்கம்:
அறியாமையினால் நமது நெஞ்சம் இளைத்து இருட்டறையாகிறது. அந்த இருள் நீங்க, தியானத்தின் போது தோன்றும் மூன்று மண்டலங்களிலும் பொருந்தி இருந்து, அன்புடன் முதுகுத்தண்டு வழியாக குண்டலினியை மேலே ஏற்றி குற்றம் நீங்கப் பெறுவோம். அப்படிச் செய்தால் சோர்வு நீங்கப் பெற்று மனத்தின் இருள் நீங்கி ஏற்றம் பெறலாம்.

மண்டலம் மூன்று – சூரியன், சந்திரன், அக்கினி,     பாசம் – அன்பு,    துரு – குற்றம்,    மார்கழி – மா கழிதல், இருள் கழிதல்