உண்மையான பூணூல் எது?

நூலும் சிகையும் நுவலிற் பிரமமோ
நூலது கார்ப்பாசம் நுண்சிகை கேசமாம்
நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்
நூலுடை அந்தணர் காணும் நுவலிலே.  – (திருமந்திரம் – 230)

விளக்கம்:
அந்தணர்கள் அணிகின்ற நூலும் குடுமியுமே பிரம்மம் ஆகிவிடுமா? அவர்கள் அணியும் பூணூல் என்பது வெறும் பருத்திப்பஞ்சாகும். குடுமி என்பது கொஞ்சம் தலைமுடி, அவ்வளவுதான். ஆனால் உண்மையான பூணூல் என்பது வேதாந்தத்தின் நுண்மையான நெருப்பாகிய ஞானமாகும். அந்த உண்மையான பூணூலை அணிந்திருக்கும் அந்தணர்கள் பிரம்மத்தைக் காண்பது வேதங்களின் சொற்களிலே!

நுவல் – சொல்,  கார்ப்பாசம் – பருத்திப்பஞ்சு,  நூல் – பூணூல்