யார் பெரியவர்?

ஆழி வலங்கொண் டயன்மால் இருவரும்
ஊழி வலஞ்செய்ய ஒண்சுட ராதியும்
ஆழி கொடுத்தனன் அச்சுதற்க் கவ்வழி
வாழி பிரமற்கும் வாள்கொடுத் தானே. – (திருமந்திரம் – 349)

விளக்கம்:
பிரமனும் திருமாலும் தமக்குள் யார் பெரியவர் என்கிற போட்டியில், இருவரும் வலிமையுடன் போரிட்டுக் கொண்டார்கள். அவர்கள் முன்பு சிவபெருமான் ஒளிமயமாகத் தோன்றிய போது, இருவரும் தங்கள் தவற்றை உணர்ந்தார்கள். சிவபெருமான் திருமாலுக்கு சக்கரத்தையும், பிரமனுக்கு தண்டாயுதத்தையும் வழங்கி, காத்தல், படைத்தல் ஆகிய செயல்களைச் செய்யும்படிப் பணித்தான்.

தியானத்தின் போது குண்டலினி சக்தி, பிரமன் வசிக்கும் மூலாதாரத்திலும், திருமால் வசிக்கும் மணிப்பூரகத்திலும் நின்று விடாமல், சிரசின் மேல் இருக்கும் சிவனுடைய இடத்தை அடைய வேண்டும். அதுவே உயர்ந்த இடம்!