இவனும் சிவனே என தேவர்கள் வாழ்த்துவார்கள்

சேருறு காலந் திசைநின்ற தேவர்கள்
ஆரிவன் என்ன அரனாம் இவனென்ன
ஏருறு தேவர்கள் எல்லாம் எதிர்கொள்ளக்
காருறு கண்டனை மெய்கண்ட வாறே.  –  (திருமந்திரம் – 636)

விளக்கம்:
நாம் சிவகதி அடையும் காலத்தில் சிவலோகத்தின் காவலர்கள் ”யார் இவன்?” என தேவர்களிடம் விசாரிப்பார்கள். அப்போது அந்த அழகு மிக்க தேவர்கள் “அட்டாங்கயோகத்தில் நின்ற இவனும் சிவனே ஆவான்!” என வாழ்த்தி வரவேற்பார்கள். அந்த உலகத்தில் நம் இறைவனாம் திருநீலகண்டப் பெருமானைக் காணலாம்.


அட்டாங்கயோகத்தால் வானுலகில் வரவேற்பு கிடைக்கும்

செம்பொற் சிவகதி சென்றெய்துங் காலத்துக்
கும்பத் தமரர் குழாம்வந் தெதிர்கொள்ள
எம்பொற் றலைவன் இவனா மெனச்சொல்ல
இன்பக் கலவி இருக்கலு மாமே.  –  (திருமந்திரம் – 635)

விளக்கம்:
அட்டாங்கயோகத்தில் தொடர்ந்து நின்று யோகப் பயிற்சிகளைச் செய்பவர்கள், செம்பொன் ஒளியுடைய சிவகதியை அடையும் காலத்தில் வானவர்கள் பூரண கும்பத்துடன் வந்து எதிர்கொண்டு ‘நம் தங்கத் தலைவன் இவன்’ என வாழ்த்தி வரவேற்பார்கள்.  அந்த வானவர்களின் சேர்க்கை கிடைக்கப் பெற்று அவ்வுலத்தில் இன்பமாய் இருக்கலாம்.


தவத்தினால் தேவருலகின் செல்வன் ஆகலாம்

வருந்தித் தவஞ்செய்து வானவர் கோவாய்த்
திருந்தம ராபதிச் செல்வன் இவனெனத்
தருந்தண் முழவங் குழலும் இயம்ப
இருந்தின்பம் எய்துவர் ஈசன் அருளே.  –  (திருமந்திரம் – 634)

விளக்கம்:
அட்டாங்கயோகத்தில் நின்று, தன் மெய் வருத்தி ஆசனத்தில் அமர்ந்து தவம் செய்பவர்களை ’இவன் தேவர் உலகின் செல்வன்’ என தேவர்களின் தலைவர் இயம்புவார். அந்நேரம் முரசுகள் முழங்கும், புல்லாங்குழல் இசைக்கும். அந்த தேவர் உலகத்திலே ஈசன் அருளாலே நாம் இன்ப வாழ்வு பெறலாம்.


அட்டாங்கயோகத்தினால் மனத்தெளிவு பெறலாம்

பற்றிப் பதத்தன்பு வைத்துப் பரன்புகழ்
கற்றிருந் தாங்கே கருது மவர்கட்கு
முற்றெழுந் தாங்கே முனிவர் எதிர்வரத்
தெற்றுஞ் சிவபதஞ் சேரலு மாமே.  –  (திருமந்திரம் – 633)

விளக்கம்:
அட்டாங்கயோகத்தின் வழியில் சென்று, சிவபெருமானின் திருவடியைப் பற்றி, அவன் புகழைப் பாடி, நம் சிந்தையெல்லாம் அவன் திருவடியையே நாடி இருக்கச் செய்வோம். அப்படிச் சிந்தித்திருப்பவரை முனிவரெல்லாம் எதிர் கொண்டு அழைப்பர். மனத்தெளிவு பெற்று சிவபதம் அடைவது உறுதி.


அட்டாங்கயோகத்தின் பலன்

போதுகந் தேறும் புரிசடை யானடி
யாதுகந் தாரம ராபதிக் கேசெல்வர்
ஏதுகந் தானிவன் என்றருள் செய்திடு
மாதுகந் தாடிடு மால்விடை யோனே.  –  (திருமந்திரம் – 632)

விளக்கம்:
சிவபெருமானுக்கு நாம் சூடும் மலர்கள் அவன் திருவடியை விரும்பிச் செல்கிறது. அது போல நம்முள்ளே வசிக்கும் குண்டலினி விருப்பத்துடன் சகசிரதளம் ஏறி சிவனடி சேரும் தன்மையுடையது. அட்டாங்க யோகம் அனைத்தையும் விரும்பி அதன் வழியில் நடப்பவர்கள் விண்ணுலகை அடைவார்கள். அவர்கள் விரும்பியதை எல்லாம் உமையுடன் மகிழ்ந்து நடனம் செய்பவனும், காளையை ஊர்தியாகக் கொண்டவனுமான நம் சிவபெருமான் அருள்வான்.

அட்டாங்கயோகத்தில் இருப்பவர்களுக்கு அந்தச் சிவபெருமான் வேண்டியதை எல்லாம் அருள்வான்.


சமாதியில் அறுபத்து நான்கு சித்திகள் கைகூடும்

சமாதிசெய் வார்க்குத் தகும்பல யோகஞ்
சமாதிகள் வேண்டாம் இறையுட னேகிற்
சமாதிதா னில்லை தானவ னாகிற்
சமாதியில் எட்டெட்டுச் சித்தியும் எய்துமே.  –  (திருமந்திரம் – 631)

விளக்கம்:
சமாதியில் இருப்பவர்களுக்குப் பல விதமான யோகங்கள் கைகூடும். அவர்கள் அறுபத்து நான்கு சித்திகள் கிடைக்கப் பெறுவார்கள். யோக நெறியில் நின்று இறைவனை அடைந்து விட்டவர்களுக்கு பிறகு எந்தப் பயிற்சியும் தேவையில்லை. ஏனென்றால் இறைவனை அடைந்தவர்கள் தாமும் சிவமாகி விடுவார்கள்.


சமாதி நிலையில் சிவன், சக்தி, ஆன்மா எல்லாம் ஒன்றே!

சோதித் தனிச்சுட ராய்நின்ற தேவனும்
ஆதியும்  உள்நின்ற சீவனு மாகுமால்
ஆதிப் பிரமன் பெருங்கடல் வண்ணனும்
ஆதி அடிபணிந் தன்புறு வாரே.  –  (திருமந்திரம் – 630)

விளக்கம்:
சமாதி நிலையில் நம்முடைய ஆன்மா,  நிகரில்லாத ஒளியாய் விளங்கும் சிவபெருமானோடும், ஆதி பராசக்தியோடும் ஒன்றாகக் கலந்து விடும். அந்நிலையில் படைப்புக்கு முதல்வனான பிரமனும், கடல் போன்ற நீல நிற மேனியுடைய திருமாலும் ஆதிக்கடவுளான சிவபெருமானிடம் அடி பணிந்து அன்பு செலுத்துவதை நாம் உணரலாம்.


Eyes Wide Shut – ஒரு ரசனைப் பார்வை

Eyes-wide-shut_2

கணவன் மனைவி உறவில் உள்ள சிக்கல்கள்  உலகமயமானவை. உடைகள் மாறினாலும், பழக்க வழக்கங்கள் மாறினாலும், எல்லா நாட்டிலும் திருமண உறவு, அடிப்படையில், ஒரே மாதிரியே இயங்குகிறது. Eyes Wide Shut படம் பார்த்தால் இதை இன்னும் புரிந்து கொள்ளலாம். பிரபல மருத்துவர் பில் ஹார்ஃபோர்ட், அவரது மனைவி அலிஸ். இவர்களது தாம்பத்திய வாழ்க்கையில் ஏற்படும் மனச்சிக்கல்களை தெளிவாக அலசும் படம் இது. ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள மிகுதியான அன்பு அவ்வப்போது சலிப்பை ஏற்படுத்துகிறது, அதனால் நிகழும் சில தடுமாற்றங்கள், அவை ஏற்படுத்தும் வலிகள் ஆகியவற்றை சுவாரசியாமான சம்பவங்களாக தொகுத்திருக்கிறார்கள்.

பில்லும் அலிஸும் ஒரு மது விருந்துக்குக் கிளம்புவதில் கதை ஆரம்பிக்கிறது. விருந்தில் கிடைத்த அனுபவங்களை இருவரும் மறுநாள் தங்கள் படுக்கையறையில் போதையின் துணையுடன் பகிர்ந்து கொள்ளும் போது மன உரசல்கள் ஏற்படுகின்றன. தான் ஒருமுறை வழியில் பார்த்த கப்பல்படை அதிகாரியிடம் தன் மனத்தை பறிகொடுத்ததாக அலிஸ் சொல்கிறாள். “ஒரு வேளை அந்த அதிகாரி என்னைக் கூப்பிட்டிருந்தால் என்னுடைய கணவனாகிய நீ, நம் குழந்தை, எதிர்கால வாழ்க்கை ஆகிய எதைப் பற்றியும் யோசிக்காமல் அவனுடன் போயிருப்பேன். நல்ல வேளை! அதற்கப்புறம் அவனைப் பார்க்கவில்லை” பில்லின் பெருந்தன்மை அலிஸை வெளிப்படையாக பேச வைக்கிறது. ஆனால் பில் உள்ளுக்குள் குமைய ஆரம்பிக்கிறான்.

குடும்ப நண்பர் ஒருவரின் மரணச்செய்தி கேட்டு, அந்த இரவு நேரத்தில் பில் துக்க வீட்டுக்கு போக வேண்டியதாகிறது. அந்த ஒரு இரவில் பில்லுக்கு பல விதமான அனுபவங்கள் ஏற்படுகின்றன. இறந்து போன குடும்ப நண்பரின் மகள் பில்லிடம் தன்னுடைய காதலை ஏற்றுக்கொள்ளச் சொல்கிறாள். அவளை சமாதானப்படுத்தி விட்டு ஒரு வழியாக வெளியே வருகிறான். சாலையில் எதிர்ப்படும் ஒரு விபச்சாரம் செய்யும் பெண் பில்லை தன் வீட்டுக்கு அழைக்கிறாள். அவளை நெருங்கும் சமயம் அலிஸிடம் இருந்து வரும் ஃபோன், பில்லை அந்த சூழ்நிலையில் இருந்து விடுவிக்கச் செய்கிறது. பிறகு ஆர்வக் கோளாறினால், உறுப்பினர்களைத் தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லாத ஒரு ரகசிய கூட்டத்துக்கு பொய் சொல்லி உள்ளே போகிறான். அங்கே மாட்டிக்கொண்ட அவனை ஒரு பெண் தன் உயிரை பலி கொடுத்துக் காப்பாற்றுகிறாள்.

ஒரே இரவில் ஏற்பட்ட சம்பவங்கள் தந்த கலவையான உணர்வுகளைத் தாங்க முடியாமல், நடந்த எல்லாவற்றையும் அலிஸிடம் சொல்லி அழுகிறான். மறுநாள் மகளுக்காக கிறிஸ்துமஸ் பரிசு வாங்க  கடைக்குச் செல்கிறார்கள். அங்கே பில் அலிஸிடம், நாம இப்போ என்ன செய்வது என்று குற்றவுணர்வோடு கேட்கிறான். அதற்கு அலிஸ் சொல்லும் பதில் தான் படத்தில் முக்கியமான விஷயம். இந்தப் படத்தைப் பற்றி என்னை எழுதத் தூண்டியது இந்த விஷயம் தான். “எப்படியோ இத்தனைச் சூழ்நிலைகளையும் சமாளித்து, அதிலிருந்து தப்பி வாழப் பழகியிருக்கிறோம். இது எவ்வளவு பெரிய விஷயம்?” வாழ்க்கை பற்றிய தெளிவான பார்வையுடன் அலிஸ் சொல்லும்  இந்த நிதானமான பதிலைக் கேட்டு பில் ஆச்சரியப்படுகிறான். “அப்போ இனிமேல் எப்பவுமே இப்படி சமாளித்து விடுவோமா” எனக் கேட்க ஆரம்பித்த பில்லை அலிஸ் தடுத்துச் சொல்கிறாள் “அதைப் பற்றி இப்போது எதுவும் பேச வேண்டாம். நினைத்தாலே பயமாக இருக்கிறது!”.

ஸ்டான்லி குப்ரிக்கின் இயக்கத்தில் எனக்கு மிகவும் பிடித்த படம் இது. படத்தின் இயக்கத்தை செய்நேர்த்தி என்று  நான் சுருக்கமாகச் சொன்னாலும், அவருடைய மேதா விலாசம் சுருக்கமான விஷயம் இல்லை. பில்லாக டாம் க்ரூஸும் அலிஸாக நிக்கோல் கிட்மனும் தங்கள் நடிப்பை  அநாயாசமான கொடுத்திருக்கிறார்கள். சிறு வயதினர்க்கு இது கொஞ்சம் கூட ஏற்ற படம் இல்லை. படத்தின் கதை ஓட்டத்தில் கலந்து விட்ட எனக்கு சில காட்சிகளில் வரும் நிர்வாணங்கள் உறைக்கவில்லை, மற்றவர்களுக்கு எப்படியோ தெரியவில்லை.

நேற்று இந்தப் படத்தை எத்தனையாவது முறையாகவோ பார்த்தேன். இன்னும் எத்தனை முறை பார்ப்பேன், இதன் கதையை இன்னும் எத்தனை பேருக்குச் சொல்லி கழுத்தறுப்பேன் என்பது எனக்கே தெரியவில்லை.


குண்டலினி வசப்பட்டால் கோபம் அகலும்

தலைப்பட் டிருந்திடத் தத்துவங் கூடும்
வலைப்பட் டிருந்திடும் மாதுநல் லாளுங்
குலைப்பட் டிருந்திடுங் கோபம் அகலுந்
துலைப்பட் டிருந்திடுந் தூங்கவல் லார்க்கே.  –  (திருமந்திரம் – 629)

விளக்கம்:
நம் சிரசின் மேல் உள்ள சகசிரதளத்தில் நாட்டம் செலுத்தி தியானித்திருந்தால் சமாதி நிலை கைகூடும். சமாதி நிலையில் ஆன்மாவைப் பற்றிய தத்துவங்கள் நன்கு விளங்கும், மெய்ப்பொருளை உணரலாம். குண்டலினி சக்தி வசப்படும். இத்தனை வருடங்களாக நாம் சேர்த்து வைத்திருக்கும் மிகுதியான கோபங்கள் அகலும். எதிலும் நடுவு நிலையோடு இருக்க இயலும்.


சிவனுடன் கலந்து விடும் நிலை சமாதி

கற்பனை யற்றுக் கனல்வழி யேசென்று
சிற்பனை எல்லாஞ் சிருட்டித்த பேரொளிப்
பொற்பினை நாடிப் புணர்மதி யோடுற்றுத்
தற்பர மாகத் தகுந்தண் சமாதியே.  –  (திருமந்திரம் – 628)

விளக்கம்:
மனத்தில் தோன்றும் கற்பனைகளை எல்லாம் நிறுத்தி விட்டு, நமது நாட்டத்தை குண்டலினியிலே செலுத்தி, அந்தக் குண்டலினியை சுழுமுனை வழியாக மேலே சகசிரதளத்திற்குக் கொண்டு செல்வோம். அங்கே இந்த உலகையும், எல்லா உலகையும் படைத்த அந்த சிற்பனை அழகிய பேரொளி வடிவில் காணலாம். அவனை நாடி அந்த பரம்பொருளுடன் கலந்து நாமும் சிவமாகவே மாறுவோம். இந்த நிலையே குளிர்ச்சி தரும் சமாதியாகும்.

சிற்பன் – உலகை படைத்தவன்,   பொற்பு – அழகு,  தற்பரம் – பரம்பொருள்