நிகழும் தன்மை அவன்

ஆகின்ற தன்மையில் அக்கணி கொன்றையன்
வேகின்ற செம்பொனின் மேலணி மேனியன்
போகின்ற சீவன் புகுந்துட லாய்உளன்
ஆகின்ற தன்மைசெய் ஆண்டகை யானே. – (திருமந்திரம் – 395)

விளக்கம்:
கடவுள் எங்கே? ‘ஆகின்ற தன்மையில்’ என்கிறார் திருமூலர். நிகழும் யாவற்றிலும் அந்த நிகழும் தன்மையாக இருக்கிறான், எலும்புகளை அணிந்து கொன்றை மலரைச் சூடியிருக்கும் சிவபெருமான். உருகுகின்ற தங்கம் போன்ற மினுமினுப்பான உடல் கொண்டவன் அவன். ஆயுள் முடிந்த உடன் நீங்கிவிடும் நம்முடைய சீவனுக்கு அவன் துணையாக வருவான். நம்முடைய அடுத்த பிறவி நிகழும் தன்மையிலும் அவனே துணையாக இருப்பான்.