சுத்த மாயையில் தோன்றியவை!

ஆதித்தன் சந்திரன் அங்கிஎண் பாலர்கள்
போதித்த வானொலி பொங்கிய நீர்ப்புவி
வாதித்த சத்தாதி வாக்கு மனாதிகள்
ஓதுற்ற மாயையின் விந்துவின் உற்றதே. – (திருமந்திரம் – 410)

விளக்கம்:
இந்திரன், அக்கினி, இயமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகியோர் எட்டுத்திசைகளுக்கான காவலர் ஆவார்கள். இந்த எட்டுத்திசைக் காவலர்கள், சூரியன், சந்திரன், போதனை தரும் நாதம் நிரம்பிய வானம், நீர், நிலம் ஆகிய அனைத்தும் சுத்த மாயையின் விந்துவில் இருந்து தோன்றியவை.  சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்னும் ஐந்து தன்மாத்திரைகளும் சித்தம், மனம், அகங்காரம், புத்தி ஆகியவையும் அதே சுத்த மாயையில் இருந்து தோன்றியவையே!


8400000 உயிரினங்கள்!

அப்பரி செண்பத்து நான்குநூ றாயிரம்
மெய்ப்பரி செய்தி விரிந்துயி ராய்நிற்கும்
பொய்ப்பரி செய்திப் புகலும் மனிதர்கட்
கிப்பரி சேஇருள் மூடிநின் றானே. – (திருமந்திரம் – 409)

விளக்கம்:
ஊர்வன, பறப்பன, நீரில் வாழ்வன, விலங்குகள், மனித இனம், தாவரங்கள் ஆகிய எல்லாம் சேர்த்து, உலகின் மொத்த உயிரின வகைகளின் எண்ணிக்கை எண்பத்து நான்கு நூறாயிரம் (8400000) ஆகும். இவை அனைத்திலும் பரவியிருக்கும் சிவபெருமானே நமக்குத் தக்க புகலிடம் தருவான். அவனைத் தஞ்சம் அடைவதே நமக்குக் கிடைக்கும் உண்மையான பரிசாகும். வாழ்வில் நமக்குக் கிடைக்கும் பொருள், புகழ் போன்ற மற்ற எதுவும் பொய்யான பரிசாகும். பொய்யான அவற்றை உண்மை என்று நம்பினால், நாம் ஆணவம் என்னும் இருளில் மூழ்கி விடுவோம்.


நன்மையும் தீமையும் சேர்ந்தது தான் உலகம்!

நாதன் ஒருவனும் நல்ல இருவருங்
கோது குலத்தொடுங் கூட்டிக் குழைத்தனர்
ஏது பணியென் றிசையும் இருவருக்
காதி இவனே அருளுகின் றானே. – (திருமந்திரம் – 408)

விளக்கம்:
நன்மைகளையும் தீமைகளையும் கூட்டிக் குழைத்து உருவாக்கப்பட்டது தான் இந்த உலகம். நன்மை தீமைகளைக் கூட்டிக் குழைப்பவர்கள் தலைவனாகிய சிவபெருமான், பிரமன், திருமால் ஆகியோர் ஆவர். பிரமனும் திருமாலும் ‘எனக்கு அடுத்து என்ன வேலை?’ என்று சிவபெருமானிடம் கேட்டு ஆர்வத்தோடு தமது தொழிலைச் செய்கிறார்கள். நமது ஆதிக்கடவுளும் அவர்கள் இருவரையும் வழி நடத்துகிறார்.


சிவசக்தியரின் தலைமை கொண்ட அமைப்பு!

ஓராய மேஉல கேழும் படைப்பதும்
ஓராய மேஉல கேழும் அளிப்பதும்
ஓராய மேஉல கேழுந் துடைப்பதும்
ஓராய மேஉல கோடுயிர் தானே. – (திருமந்திரம் – 407)

விளக்கம்:
சிவசக்தியரின் தலைமையில் பிரமன், திருமால், உருத்திரன் ஆகியோரைக் கொண்ட அமைப்புத் தான் உலகின் அனைத்துக்கும் காரணமாகும். ஏழு உலகங்கள் தோன்றுவது இந்த அமைப்பினால் தான். ஏழு உலகங்களும் காக்கப்படுவதும் இந்த அமைப்பினால் தான். உலகேழும் அழிக்கப்படுவதும் இந்த சிவசக்தியரின் தலைமை கொண்ட அமைப்பினால் தான். உலகின் சீவன்களுக்கெல்லாம் உயிர்களைப் பொருத்துவது இந்த அமைப்புத் தான்.


எங்கேயும் போய் தேட வேண்டியதில்லை!

தேடுந் திசைஎட்டுஞ் சீவன் உடல்உயிர்
கூடும் பிறவிக் குணஞ்செய்த மாநந்தி
ஊடும் அவர்தம் துள்ளத்துள் ளேநின்று
நாடும் வழக்கமும் நான்அறிந் தேனே. – (திருமந்திரம் – 406)

விளக்கம்:
நம் உடலும் உயிரும் இசைந்திருக்க ஒரு தன்மை தேவை. அந்தத் தன்மையைக் கொடுக்கும் நந்தியம்பெருமானை நாம் எட்டுத் திசைகளிலும் தேடுகிறோம். நம் பெருமான் நம் மனத்துள்ளே தான் வசிக்கிறான். வெளியே எங்கேயும் தேட வேண்டியதில்லை. நம் மனத்துள் வசிக்கும் பெருமானை நோக்கி அக வழிபாடு செய்வதை நாம் வழக்கமாகக் கொள்வோம்.


இருள் சூழ்ந்த இப்பிறவியை அறுப்பவன்!

செந்தா மரைவண்ணன் தீவண்ணன் எம் இறை
மைந்தார் முகில்வண்ணன் மாயஞ்செய் பாசத்தும்
கொந்தார் குழலியர் கூடிய கூட்டத்தும்
அந்தார் பிறவி அறுத்துநின் றானே. – (திருமந்திரம் – 405)

விளக்கம்:
சிவபெருமானே செந்தாமரை மலரில் வசிக்கும் பிரமனாக இருக்கிறான். அவனே தீயின் நிறம் கொண்ட உருத்திரனாக இருக்கிறான். மேகம் போன்ற கரிய நிறம் கொண்ட திருமாலாகவும் நம் சிவபெருமானே இருக்கிறான். பூங்கொத்துக்களைச் சூடி இருக்கும் பெண்களை ஆடவர் நாடுவதற்குக் காரணமான மாயையாக இருப்பவனும் சிவபெருமான் தான். இருள் சூழ்ந்த இந்தப் பிறவியை அறுக்கக் கூடியவனும் நம் சிவபெருமானே!


எல்லாமாய் இருப்பவன் ஒருவனே!

ஒருவனு மேஉல கேழும் படைத்தான்
ஒருவனு மேஉல கேழும் அளித்தான்
ஒருவனு மேஉல கேழுந் துடைத்தான்
ஒருவனு மேஉல கோடுயிர் தானே. – (திருமந்திரம் – 404)

விளக்கம்:
ஏழு உலகங்களையும் படைத்தவன் ஆதிக்கடவுளான சிவபெருமான் ஆவான். தான் படைத்த உலகங்களைக் காப்பவனும் அவனே. உலகின் அனைத்து உயிர்களையும் அழிப்பவனும் மறுபடியும் படைப்பவனும் அவனே! அவனே உலகமாகவும் உள்ளான். அவனே உலகில் வாழும் உயிர்களாகவும் உள்ளான்.


நின்றது தானாய் நிறைந்த மகேசுரன்!

நின்றது தானாய் நிறைந்த மகேசுரன்
சென்றங் கியங்கும் அரந்திரு மாலவன்
மன்றது செய்யும் மலர்மிசை மேலயன்
என்றிவ ராக இசைந்திருந் தானே. – (திருமந்திரம் – 403)

விளக்கம்:
தானாய் நின்று நிறைந்தவன் மகேசுரன். அவனது ஆணைக்கிணங்க சென்று இயங்கும் உருத்திரன், திருமால், வாசனை நிறைந்த தாமரை மலரில் வசிக்கும் பிரமன் ஆகியோரின் செயல்களிலெல்லாம் மகேசுரன் பொருந்தி இருக்கிறான்.


மனோன்மணி மங்கலி!

வாரணி கொங்கை மனோன்மணி மங்கலி
காரணி காரிய மாகக் கலந்தவள்
வாரணி ஆரணி வானவர் மோகினி
பூரணி போதாதி போதமு மாமே. – (திருமந்திரம் – 402)

விளக்கம்:
கச்சினை அணிந்த கொங்கைகளை உடைய மனோன்மணி மங்கலமானவள். உலகில் அனைத்துக் காரியங்களுக்கும் அவளே காரணமாக இருக்கிறாள். அந்தக் காரியங்களில் கலந்தும் இருக்கிறாள். அவளே வேதப்பொருளாக இருக்கிறாள். வானவர்களும் மயங்கும் மாயையாக இருக்கிறாள். முழுமையான சக்தி கொண்ட அவள் நம் அறிவினில் ஞானமாக விளங்குகிறாள்.


திரிபுரை அனைத்திலும் நிறைந்திருக்கிறாள்

அளியார் முக்கோணம் வயிந்தவந் தன்னில்
அளியார் திரிபுரை யாமவள் தானே
அளியார் சதாசிவ மாகி அமைவாள்
அளியார் கருமங்கள் ஐந்துசெய் வாளே. – (திருமந்திரம் – 401)

விளக்கம்:
திருவருள் நிறைந்தவள் சக்தி. அவளே திரிபுரையாகவும் விளங்குகிறாள். அவள் சதாசிவனுடன் நீங்காதிருந்து ஐந்தொழில்களிலும் துணையாக இருக்கிறாள். சுத்தமாயையின் காரியமாகிய பரவிந்து, அபர நாதம், அபரவிந்து என்னும் மூன்று நிலைக்களங்களிலும் அவள்  இருக்கிறாள்.