இருள் சூழ்ந்த இப்பிறவியை அறுப்பவன்!

செந்தா மரைவண்ணன் தீவண்ணன் எம் இறை
மைந்தார் முகில்வண்ணன் மாயஞ்செய் பாசத்தும்
கொந்தார் குழலியர் கூடிய கூட்டத்தும்
அந்தார் பிறவி அறுத்துநின் றானே. – (திருமந்திரம் – 405)

விளக்கம்:
சிவபெருமானே செந்தாமரை மலரில் வசிக்கும் பிரமனாக இருக்கிறான். அவனே தீயின் நிறம் கொண்ட உருத்திரனாக இருக்கிறான். மேகம் போன்ற கரிய நிறம் கொண்ட திருமாலாகவும் நம் சிவபெருமானே இருக்கிறான். பூங்கொத்துக்களைச் சூடி இருக்கும் பெண்களை ஆடவர் நாடுவதற்குக் காரணமான மாயையாக இருப்பவனும் சிவபெருமான் தான். இருள் சூழ்ந்த இந்தப் பிறவியை அறுக்கக் கூடியவனும் நம் சிவபெருமானே!