சுத்த மாயையில் தோன்றியவை!

ஆதித்தன் சந்திரன் அங்கிஎண் பாலர்கள்
போதித்த வானொலி பொங்கிய நீர்ப்புவி
வாதித்த சத்தாதி வாக்கு மனாதிகள்
ஓதுற்ற மாயையின் விந்துவின் உற்றதே. – (திருமந்திரம் – 410)

விளக்கம்:
இந்திரன், அக்கினி, இயமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகியோர் எட்டுத்திசைகளுக்கான காவலர் ஆவார்கள். இந்த எட்டுத்திசைக் காவலர்கள், சூரியன், சந்திரன், போதனை தரும் நாதம் நிரம்பிய வானம், நீர், நிலம் ஆகிய அனைத்தும் சுத்த மாயையின் விந்துவில் இருந்து தோன்றியவை.  சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்னும் ஐந்து தன்மாத்திரைகளும் சித்தம், மனம், அகங்காரம், புத்தி ஆகியவையும் அதே சுத்த மாயையில் இருந்து தோன்றியவையே!