எல்லாம் வெற்றிடத்தில் இருந்து தோன்றியவை!

பாழே முதலா எழும்பயிர் அப்பயிர்
பாழாய் அடங்கினும் பண்டைப்பாழ் பாழாகா
வாழாச்சங் காரத்தின் மாலயன் செய்தியாம்
பாழாம் பயிராய் அடங்கும்அப் பாழிலே.   – (திருமந்திரம் – 429)

விளக்கம்:
முதலில் ஒரு வெற்றிடம் இருந்தது. அந்த வெற்றிடத்தில் இருந்து உலகம் தோன்றி பலவாறாய் வளர்ந்தது. பேரழிவின் போது இந்த உலகம் அழிந்து போனாலும், அந்தப் பழைய வெற்றிடம் அழியாது. உலகம் தோன்றுவதற்கும் அழிவதற்கும் இடையே உள்ள காலம் மட்டும் தான் பிரமன், திருமால் ஆகியோருக்குத் தொழில் இருக்கிறது. உலகம் அழியும் போது அவர்களது தொழிலும் அழிந்து விடும்.

பாழ் – வெற்றிடம், அழிதல்
செய்தி – தொழில்