கருவில் உயிரைக் காப்பவன்!

ஆக்குகின் றான்முன் பிரிந்த இருபத்தஞ்
சாக்குகின் றானவ னாதிஎம் ஆருயிர்
ஆக்குகின் றான்கர்ப்பக் கோளகை யுள்ளிருந்
தாக்குகின் றான்அவன் ஆவ தறிந்தே.  – (திருமந்திரம் – 451)

விளக்கம்:
ஓர் உயிரைக் கர்ப்பப்பையில் தோற்றுவிப்பவன் நம் சிவபெருமான். அந்த உயிர் தனது முந்தைய பிறவியில் விட்டுப் பிரிந்த இருபத்தைந்து தத்துவங்களையும் மறுபடியும் தோற்றுவிக்கிறான். அந்தத் தத்துவங்களை கருவில் உள்ள உயிருடன் சேர்க்கிறான். உயிரை உருவாக்கிய நம் சிவபெருமான் அந்த உயிருடன் கலந்திருந்து, அந்த உயிருக்குத் தேவையானவற்றைச் செய்து அருள்கிறான்.

இருபத்தைந்து தத்துவங்கள் – ஐம்பூதங்கள், ஐந்து தன்மாத்திரைகள், ஐந்து ஞானேந்திரியங்கள், ஐந்து கர்மேந்திரியங்கள், நான்கு அந்தக்கரணங்கள், ஒரு புருடன்.