நான்கு வகையான விஞ்ஞானகலர்!

விஞ்ஞானர் கேவலத் தாரது விட்டவர்
தஞ்ஞானர் அட்டவித் தேசராஞ் சார்ந்துளோர்
எஞ்ஞானர் ஏழ்கோடி மந்திர நாயகர்
மெய்ஞ் ஞானர் ஆணவம் விட்டுநின் றாரே.  – (திருமந்திரம் – 494)

விளக்கம்:
கன்மத்திலும் மாயையிலும் சிக்காத விஞ்ஞானகலரை நான்கு வகையினராகப் பிரிக்கலாம். தஞ்ஞானர், எஞ்ஞானர், மந்திர நாயகர், மெஞ்ஞானர் என நான்கு வகையினில் அவர்கள் வருவார்கள். தஞ்ஞானர் ஆன்ம ஞானம் உடையவர்கள், ஆனால் ஆணவம் முழுமையாக நீங்கப் பெறாதவர்கள். எஞ்ஞானர் அட்ட வித்தியேசுவர நிலையை நாடி இருப்பவர்கள். மந்திர நாயகர் ஏழு கோடி மகாமந்திரங்களில் நாட்டம் உடையவர்கள். தன்னுடைய ஆணவத்தை முழுமையாக விட்டவர்கள் மெஞ்ஞானர் ஆவர்.