மூன்று வகையான சகலர்

பெத்தெத்த சித்தொடு பேண்முத்தச் சித்தது
ஒத்திட் டிரண்டிடை யூடுற்றார் சித்துமாய்
மத்தது மும்மலம் வாட்டுகை மாட்டாதார்
சத்தத் தமிழ்ந்து சகலத்து ளாரே.  – (திருமந்திரம் – 496)

விளக்கம்:
ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று மலங்களையும் விடாத சகலர்களில் வெகு சிலர் மட்டுமே பக்குவம் அடைவார்கள். அவர்கள் பெத்தத்த சித்தான தனது ஆன்மாவை, முத்தத்து சித்தான சிவத்தோடு பொருந்தச் செய்து சீவன்முத்தர் ஆவார்கள். சகலரில் இரண்டாவது வகையில் வருபவர்கள் சீவன் முத்தர் ஆகும் முயற்சியில் சாதகம் செய்பவர்கள். இவர்கள் தமது முயற்சியில் முத்தி அடைய முடியாவிட்டாலும் மும்மலத்தினால் ஏற்படும் துன்பத்தில் இருந்து தப்பித்துக் கொள்வார்கள். மூன்றாவது வகையினர் எந்தவித முயற்சியும் இல்லாமல் ஆரவாரமான உலக விஷயங்களில் மூழ்கி இருந்து தமது வாழ்நாளை வீணாக்குவார்கள்.