உள்ளே ஊறும் தீர்த்தம்

உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்
மெள்ளக் குடைந்துநின் றாடார் வினைகெடப்
பள்ளமும் மேடும் பரந்து திரிவரே
கள்ள மனமுடைக் கல்வியி லோரே.  –  (திருமந்திரம் – 509)

விளக்கம்:
மூலாதாரம் முதல் சகஸ்ரதளம் வரை உள்ள ஆதாரங்களில் எல்லாம் தீர்த்தங்கள் உள்ளன. தியானத்தில் நின்று ஆதாரங்களில் கவனம் செலுத்தினால், அங்கே உள்ள தீர்த்தங்களில் புனித நீராடலாம். அத்தீர்த்தங்கள் நம்முடைய தீயவினைகளை அழிக்கும். நம்முள்ளே உள்ள இந்தத் தீர்த்தங்களைப் பற்றி அறியாத கள்ள மனமுடையவர்கள் தீர்த்தங்களைத் தேடிப் பள்ளமும் மேடும் நடந்து அலைகின்றனர்.

நம்முடைய பாவங்களைக் கழுவும் தீர்த்தங்கள் நம் உள்ளேயே இருக்கின்றன. தியானத்தினால் அவற்றைக் கண்டு அடையலாம். புற உலகில் தீர்த்தங்களைத் தேட வேண்டியதில்லை.