குருவை நிந்திப்பவர் நந்தியின் தண்டனைக்கு ஆளாவர்!

பத்தினி பத்தர்கள் தத்துவ ஞானிகள்
சித்தங் கலங்கச் சிதைவுகள் செய்தவர்
அத்தமும் ஆவியும் ஆண்டொன்றில் மாண்டிடும்
சத்தியம் ஈது சதாநந்தி ஆணையே.  –  (திருமந்திரம் – 532)

விளக்கம்:
கற்புடைய பெண்கள், சிவபக்தர்கள், தத்துவ ஞானம் கொண்ட குருக்கள் ஆகியோரை மனம் கலங்கச் செய்பவர்கள், ஒரு வருடத்திற்குள் தங்கள் செல்வத்தையும் உயிரையும் இழப்பார்கள்.  இது நந்தி தேவனின் ஆணை.


குருவை நிந்திப்பவர்கள் நாயாகப் பிறப்பார்கள்

ஓரெழுத்து ஒருபொருள் உணரக் கூறிய
சீரெழுத் தாளரைச் சிதையச் செப்பினோர்
ஊரிடைச் சுணங்கனாய்ப் பிறந்தங் குஓர்உகம்
பாரிடைக் கிருமியாய் மாய்வர் மண்ணிலே.  –  (திருமந்திரம் – 531)

விளக்கம்:
ஓரெழுத்தான பிரணவத்தை மனம் உணரும் விதமாகக் கற்றுக்கொடுத்த குரு மதிப்புக்கு உரியவர் ஆவார். அவரை வாழ்த்தி வணங்க வேண்டுமே அன்றி அவர் மனம் நோகும்படியாக எதுவும் பேசி விடக்கூடாது. மதிப்பிற்குரிய குருவை மனம் நோகப் பேசுபவர்கள் தங்களது அடுத்தப் பிறவியில் ஊருக்குள்ளே சுற்றி வரும் தெருநாயாகப் பிறப்பார்கள். அவர்களது வாழ்நாள் இங்கே ஒரு யுகமாகக் கழியும். கடைசியில் ஒரு புழுவைப் போல மண்ணோடு மண்ணாகப் போவார்கள்.