ஞானாசிரியரை குருவாக ஏற்க வேண்டும்

கைப்பட்ட மாமணி தானிடை கைவிட்டு
மெய்ப்பட்ட கல்லைச் சுமப்போன் விதிபோன்றும்
கைப்பட்ட நெய்பால் தயிர்நிற்கத் தானறக்
கைப்பிட்டுண் பான்போன்றுங் கன்மிஞானிக் கொப்பே. –  (திருமந்திரம் – 536)

விளக்கம்:
முன்வினைகளைச் சுமப்பவர்கள் கன்மிகள். அவர்களை குருவாக ஏற்றுக் கொள்ளக்கூடாது. ஞானாசிரியர்களை விட்டு கன்மிகளை குருவாக ஏற்கும் செயல், கையில் உள்ள மாணிக்கத்தை எறிந்து விட்டு காலில் அகப்படும் சாதாரணக் கல்லைத் தூக்கிச் சுமப்பவனின் விதி போன்றதாகும். கையில் உள்ள நெய், பால், தயிர் ஆகியவற்றை விட்டு விட்டு ஒன்றுக்கும் உதவாத மாவை எடுத்து சாப்பிடுவது போன்றதாகும், கன்மிகளை நாடி குருவாக ஏற்றுக்கொள்ளும் செயல்.


ஞானகுருவுக்கு அவதூறு நேரக்கூடாது

சன்மார்க்க சற்குருச் சந்நிதி பொய்வரின்
நன்மார்க்க மும்குன்றி ஞானமும் தங்காது
தொன்மார்க்க மாய துறையும் மறந்திட்டுப்
பன்மார்க்க மும்கெட்டுப் பஞ்சமும் ஆமே. –  (திருமந்திரம் – 535)

விளக்கம்:
நமக்கெல்லாம் ஞானவழியைக் காண்பிக்கும் குருவை நோக்கி பொய்யான குற்றச்சாட்டுக்கள் வரக்கூடாது, அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அந்நாட்டில் நன்னெறியும் ஞானமும் தங்காது. நெடுங்காலமாக விளங்கி வரும் பல்வேறு துறைகளின் திறமைகள் எல்லாம் அழியும். நாடு பலவழிகளிலும் கெட்டு பஞ்சமும் வந்து சேரும்.


சிவனடியார்க்கு தீமை செய்யக்கூடாது

ஈசன் அடியார் இதயம் கலங்கிடத்
தேசமும் நாடும் சிறப்பும் அழிந்திடும்
வாசவன் பீடமும் மாமன்னர் பீடமும்
நாசமது ஆகுமே நம்நந்தி ஆணையே. –  (திருமந்திரம் – 534)

விளக்கம்:
சிவனடியார்கள் மனம் கலங்கும்படியான நிலை ஒரு நாட்டில் ஏற்படக்கூடாது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அந்நாடும் அந்நாட்டின் சிறப்பும் அழிந்திடும். இந்திரனின் ஆட்சிப் பீடமும், நாட்டின் மன்னரின் ஆட்சிப் பீடமும் நாசமாகும். இது நம் நந்தியம்பெருமானின் ஆணை!


குருவுக்கு தீமையிழைக்கக் கூடாது!

மந்திரம் ஓரெழுத்து உரைத்த மாதவர்
சிந்தையில் நொந்திடத் தீமைகள் செய்தவர்
நுந்திய சுணங்கனாய்ப் பிறந்து நூறுரு
வந்திடும் புலையராய் மாய்வர் மண்ணிலே.  –  (திருமந்திரம் – 533)

விளக்கம்:
ஓர் எழுத்து மந்திரமான பிரணவத்தை உபதேசம் செய்த தவஞானியான குருவின் மனம் நோகும்படியான செயல் எதையும் நாம் செய்யக்கூடாது. குருவின் மனம் நோகும்படியான தீமைகளைச் செய்தவர்கள் நூறு பிறவிகள் நாயாகப் பிறந்து கீழான வாழ்வு பெற்று மண்ணோடு மண்ணாவார்கள்.


குருவை நிந்திப்பவர் நந்தியின் தண்டனைக்கு ஆளாவர்!

பத்தினி பத்தர்கள் தத்துவ ஞானிகள்
சித்தங் கலங்கச் சிதைவுகள் செய்தவர்
அத்தமும் ஆவியும் ஆண்டொன்றில் மாண்டிடும்
சத்தியம் ஈது சதாநந்தி ஆணையே.  –  (திருமந்திரம் – 532)

விளக்கம்:
கற்புடைய பெண்கள், சிவபக்தர்கள், தத்துவ ஞானம் கொண்ட குருக்கள் ஆகியோரை மனம் கலங்கச் செய்பவர்கள், ஒரு வருடத்திற்குள் தங்கள் செல்வத்தையும் உயிரையும் இழப்பார்கள்.  இது நந்தி தேவனின் ஆணை.


குருவை நிந்திப்பவர்கள் நாயாகப் பிறப்பார்கள்

ஓரெழுத்து ஒருபொருள் உணரக் கூறிய
சீரெழுத் தாளரைச் சிதையச் செப்பினோர்
ஊரிடைச் சுணங்கனாய்ப் பிறந்தங் குஓர்உகம்
பாரிடைக் கிருமியாய் மாய்வர் மண்ணிலே.  –  (திருமந்திரம் – 531)

விளக்கம்:
ஓரெழுத்தான பிரணவத்தை மனம் உணரும் விதமாகக் கற்றுக்கொடுத்த குரு மதிப்புக்கு உரியவர் ஆவார். அவரை வாழ்த்தி வணங்க வேண்டுமே அன்றி அவர் மனம் நோகும்படியாக எதுவும் பேசி விடக்கூடாது. மதிப்பிற்குரிய குருவை மனம் நோகப் பேசுபவர்கள் தங்களது அடுத்தப் பிறவியில் ஊருக்குள்ளே சுற்றி வரும் தெருநாயாகப் பிறப்பார்கள். அவர்களது வாழ்நாள் இங்கே ஒரு யுகமாகக் கழியும். கடைசியில் ஒரு புழுவைப் போல மண்ணோடு மண்ணாகப் போவார்கள்.

 


குருநிந்தனை கூடாது!

பெற்றிருந் தாரையும் பேணார் கயவர்கள்
உற்றிருந் தாரை உளைவன சொல்லுவர்
கற்றிருந் தார்வழி உற்றிருந் தாரவர்
பெற்றிருந் தார்அன்றி யார்பெறும் பேறே.  –  (திருமந்திரம் – 530)

விளக்கம்:
ஞானம் பெற்ற உயர்ந்த சிந்தனை கொண்டவகளை குருவாக ஏற்று வணங்க வேண்டும். குரு ஸ்தானத்தில் உள்ளவர்களை மதிக்காதவர்கள் கீழ் மக்கள் ஆவார்கள். இவர்கள் உடன் இருப்பவரையும் மனம் நோகும்படி பேசி வருந்தும்படிச் செய்வார்கள். கற்று அறிந்தவரைத் தேடிச் சென்று, அவரைச் சார்ந்து இருந்து அவரிடம் இருந்து ஞானம் பெறுபவர் அடையும் பயன் அளவில்லாதது.