ஞானியை நாடினால் தீவினை தீரும்

ஞானியை நிந்திப் பவனும் நலன் என்றே
ஞானியை வந்திப் பவனுமே நல்வினை
யான கொடுவினை தீர்வார் அவன்வயம்
போன பொழுதே புகுஞ்சிவ போகமே. –  (திருமந்திரம் – 538)

விளக்கம்:
சிவஞானிகளை நிந்திப்பவர்கள், இதுவரை தாம் சேர்த்து வைத்த நல்வினைகளின் பலனை இழப்பார்கள். நன்மையை நாடி ஞானிகளை வணங்குபவர்கள், தம்முடைய தீவினைகள் எல்லாம் நீங்கப்பெறுவார்கள். சிவஞானிகளுக்கு அடியவர் ஆனவர்கள் சிவனருளில் திளைப்பார்கள்.


சிவனடியாரை இகழாதீர்!

ஆண்டான் அடியவர் ஆர்க்கும் விரோதிகள்
ஆண்டான் அடியவர் ஐயமேற் றுண்பவர்
ஆண்டான் அடியரை வேண்டாது பேசினோர்
தாம்தாம் விழுவது தாழ்நர காகுமே. –  (திருமந்திரம் – 537)

விளக்கம்:
சிவனடியார்கள் யாருக்கு விரோதமாக இருக்க முடியும்? ஆனால் அனைவரும் சிவனடியார்களை விரோதிகளாகவே பார்க்கிறார்கள். சிவனடியார்கள் பிச்சை எடுத்து உண்பவர்கள், யாருடைய வம்புக்கும் அவர்கள் போவதில்லை. தானுண்டு சிவனுண்டு என இருக்கும் அடியாரை இகழ்ந்து பேசக்கூடாது. அப்படி சிவனடியாரை இகழ்பவர்கள் கீழான நரகத்தை அடைவார்கள்.