ஆறு ஆதாரங்களில் அமிர்தம் ஊறும்

ஆறுஅது கால்கொண்டு இரதம் விளைத்திடும்
ஏழுஅது கால்கொண்டு இரட்டி இறக்கிட
எட்டுஅது கால்கொண்டு இடவகை ஒத்தபின்
ஒன்பது மாநிலம் ஒத்தது வாயுவே. – (திருமந்திரம் – 703)

விளக்கம்:
மூலாதாரம் முதலான ஆறு ஆதாரங்களுக்கும் மேல் உள்ள ஏழாவது ஆதாரமான சகசிரதளத்தில், நமது மூச்சுக்காற்றை ஏற்றி இறக்கி பிராணாயாமம் செய்யும் போது, ஆறு ஆதாரங்களிலும் அமிர்தம் ஊறும். எட்டாவது ஆதாரமாகச் சொல்லப்படும் உச்சந்தலையில் இருந்து பன்னிரெண்டு அங்குலம் உயரத்தில் மனம் நிறுத்தி பிராணாயாமம் செய்யும் போது, சுழுமுனையும் சுழுமுனை தவிர்த்த மற்ற ஒன்பது நாடிகளும் ஒரே அளவில் பிராண வாயு பெற்று வளம் பெறும்.

தசநாடிகள் எனச் சொல்லப்படும் பத்து நாடிகள் இவை – பிங்கலை, இடங்கலை, சுழுமுனை, சிகுவை, காந்தாரி, புருடன், அத்தி, அலம்புடை, சங்கினி, குரு என்பதாகும்.