யோகம் செய்பர்களின் பத்து இயல்புகள்

அணங்கற்ற மாதல் அருஞ்சனம் நீவல்
வணங்குற்ற கல்விமா ஞான மிகுதல்
சிணுங்குற்ற வாயர்தம் சித்தி தாம்கேட்டல்
நுணங்கற் றிருத்தல்கால் வேகத்து நுந்தலே – 705

மரணஞ் சரைவிடல் வண்பர காயம்
இரணஞ் சேர்பூமி இறந்தோர்க் களித்தல்
அரனன் திருவுரு வாதல்மூ வேழாங்
கரனுறு கேள்வி கணக்கறிந் தோனே – 706

விளக்கம்:
பிராணாயாமத்தின் கணக்கறிந்து தொடர்ந்து அப்பயிற்சி செய்பவர்கள் இவ்வாறான பத்து இயல்புகளைப் பெறுவார்கள்.

1. பெண்ணாசையைத் துறப்பார்கள்.
2. சுற்றத்தினரின் உலக விஷயப் பேச்சுக்களில் இருந்து விலகி இருப்பார்கள்.
3. சிவவழிபாடு பற்றிய நூல்களைப் படித்து ஞானம் பெறுவார்கள்.
4. சதா சிவமந்திரத்தை முணுமுணுக்கும் சித்தர்களின் பெருமைகளைக் கேட்டு அறிவார்கள்.
5. எந்தச் சூழ்நிலையிலும் மனம் துவளாது இருப்பார்கள்.
6. பிராணாயாமத்தை எளிதாகச் செய்யும் அளவிற்கு பயிற்சி பெற்று இருப்பார்கள்.
7. மூப்பு, இறப்பு ஆகியவற்றைக் கடந்து எப்போதும் இளமையாக உணர்வார்கள்.
8. சிவ அருள் வெளியில் கலந்து இருப்பார்கள்.
9. தமது நல்ல செய்கைகளால் முன்னோர்களை நற்கதி பெறச் செய்வார்கள்.
10. சிவனது திருவுருவைத் தான் பெறுவார்கள்.


Also published on Medium.