ஆனந்த யோகம் பெறலாம்

ஆதார யோகத் ததிதே வொடுஞ்சென்று
மீதான தற்பரை மேவும் பரனொடு
மேதாதி யீரெண் கலைசெல்ல மீதொளி
ஓதா அசிந்தம்ஈ தானந்த யோகமே – 709

விளக்கம்:
மூலாதாரம் முதல் ஆக்கினை (புருவ மத்தி) வரை உள்ள ஆறு ஆதாரச் சக்கரங்களைக் கடந்து, அங்கே வீற்றிருக்கும் கடவுளர்களைத் தியானித்து, இன்னும் உயரே சென்று தியானித்தால் அங்கே சிவசக்தியரைக் காணலாம். அங்கே மேதை முதலான பன்னிரெண்டு சந்திரகலைகளைக் கடந்து மேல் ஏறினால், சிரசில் இருந்து பன்னிரெண்டு அங்குலத்துக்கு மேலே மனம் நிலைத்து, வாக்கும் மனமும் இறந்து ஆனந்த யோகம் பெறலாம்.