மாசறு சோதி வகுத்து வைத்தானே!

ஓசையில் ஏழும் ஒளியின்கண் ஐந்தும்
நாசி யினில்மூன்றும் நாவில் இரண்டும்
தேசியும் தேசனுந் தம்மிற் பிரியுநாள்
மாசறு சோதி வகுத்துவைத் தானே – 723

விளக்கம்:
நடுநாடியான சுழுமுனையில் பொருந்தி இருந்து தியானம் செய்து, உச்சந்தலையில் குண்டலினியான சக்தியில் இருந்து சிவன் பிரிந்து சென்று மேல் அமர்வதை உணர்ந்தவர்கள் பெருஞ்செவம் பெற்றவர்கள். அவர்களை ஓசை, காட்சி, வாசனை, ருசி ஆகிய வெளிவுலக விஷயங்கள் பாதிக்காது, எப்போதும் சிவ ஆனந்தத்தில் திளைத்திருப்பார்கள். குற்றங்களை நீக்கும் சோதி வடிவான நம் சிவபெருமான் இவ்வாறு வகுத்து வைத்துள்ளான்.

ஓசையில் ஏழு – சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம், எரித்தல்,சேர்த்தல்
ஒளியின்கண் ஐந்து – சுவை, ஒளி, நாற்றம், வெம்மை, எரித்தல்
நாசியில் மூன்று – நாற்றம், உயிர்ப்பு, உணர்தல்
நாவில் இரண்டு – எடுத்தல், சுவைத்தல்