பிராணாயாமத்தினால் கபம், வாதம், பித்தம் நீங்கும்

அஞ்சனம் போலுடல் ஐஅறும் அந்தியில்
வஞ்சக வாதம் அறும்மத்தி யானத்தில்
செஞ்சிறு காலையிற் செய்திடில் பித்தறும்
நஞ்சறச் சொன்னோம் நரைதிரை நாசமே – 727

விளக்கம்:
மனத்தூய்மையோடு பிராணாயாமம் செய்து வந்தால் மனமும் உடலும் குளுமை என்னும் மந்திரமை கிடைக்கப்பெறும் என்பதை முந்தைய பாடலில் பார்த்தோம். அக்குளுமையுடன் மாலை நேரத்தில் பிராணாயாமம் செய்து வந்தால், உடலில் உள்ள கபம் நீங்கும். மதிய நேரம் பிராணாயாமம் செய்து வந்தால், வஞ்சகம் கொண்ட வாதம் நீங்கும். செம்மையான விடியற்காலை நேரத்தில் பிராணாயாமம் செய்து வந்தால், உடலில் உள்ள பித்தம் அகலும். கபம், வாதம், பித்தம் ஆகியன அகலும் போது, இந்த உடலுக்கு நரை, மூப்பு ஆகியன இல்லாது போகும்.

ஐ – கபம்
செஞ்சிறு காலை – செம்மையான விடியற்காலை