விளையும் வேதசக்தி!

ஆகுஞ் சனவேத சத்தியை அன்புற
நீகொள்ளின் நெல்லின் வளர்கின்ற நேர்மையைப்
பாகு படுத்திப்பல் கோடி களத்தினால்
ஊழ்கொண்ட மந்திரந் தன்னால் ஒடுங்கே – 739

விளக்கம்:
ஆகுஞ்சனம் என்னும் ஆசனத்தில் அமர்ந்து யோகப்பயிற்சி செய்து, அதில் விளையும் வேதசக்தியை அன்போடு ஏற்றுக்கொள்வோம். விளைந்த நெல்லை விதைநெல்லாக பயன்படுத்தி பல இடங்களில் நெல் விளைவிப்பதைப் போல, யோகத்தினால் விளையும் யோகசக்தியைப் பயன்படுத்தி இன்னும் பல உள்ளார்ந்த யோகங்களைப் பயிற்சி கொள்ளலாம். இதனால் பழமையான மந்திரங்கள் வெளிப்படுவதை உள்ளே உணரலாம், அந்த மந்திரங்களில் லயித்து அமைதியாய் இருக்கலாம்.

ஆகுஞ்சனம் – பத்மாசனத்தில் அமர்ந்து மடியில் இரண்டு கைகளையும் ஒன்றன் மேல் ஒன்றாய் வைத்து, எருவாயை (குதம்) மேல் ஏற்றி நிற்றல்.
ஊழ் – பழமை


Also published on Medium.