நந்தியம்பெருமானின் குறிப்பு நம் உடலில் ஏறும்

பிறப்பது சூழ்ந்த பெருந்தகை நந்தி
குறிப்பது கூடிய கோலக் குரம்பைப்
பழப்பதி யாவது பற்றறும் பாசம்
அழப்படி செய்வார்க் ககலும் மதியே – 789

விளக்கம்:
நாம் பிறப்பு, இறப்பு என்னும் தொடர்ச்சியில் சிக்கிக் கிடக்கிறோம். தொடர்ந்த யோகப்பயிற்சியால், பெருந்தகையாளரான நந்தியம்பெருமானின் யோகக்குறிப்புகள் நம் உடலில் ஏறுகிறது. இதனால் நம் உடல் அழகு பெற்று சிவபெருமானைப் போல விளங்குகிறது. நம் மனத்தில் இருந்து பற்று, பாசம் அறுகிறது. பற்றும் பாசமும் அறும்போது, அடுத்து பிறப்பு என்பது இல்லாமல் போகும். இதை நம் அறிவு புரிந்து கொள்ள வேண்டும்.

குறிப்பது – குறிப்பு + அது, கோலக்குரம்பை – அழகிய உடல், பழப்பதி – பழமை வாய்ந்த சிவபெருமான்.