மூச்சு சீராக இருந்தால் உள்ளே பயமோ நடுக்கமோ ஏற்படாது

உதித்து வலத்திடம் போகின்ற போது
அதிர்த்தஞ்சி ஓடுத லாம்அகன் றாரும்
உதித்தது வேமிக ஓடிடு மாகில்
உதித்த இராசி யுணர்ந்துகொள் உற்றே – 794

விளக்கம்:
முந்தைய வாரசரம் பற்றிய பாடல்களில் சொன்னபடி, வெள்ளி, திங்கள், புதன் ஆகிய கிழமைகளில் சுவாசம் இடநாடி இயங்கும். சனி, ஞாயிறு, செவ்வாய் ஆகிய கிழமைகளில் மூச்சு வலநாடி வழியாக இயங்கும். வளர்பிறையில் வரும் வியாழக்கிழமைகளில் இடநாடி வழியாகவும், தேய்பிறையில் வரும் வியாழக்கிழமைகளில் வலநாடி வழியாகவும் மூச்சு இயங்கும்.

வலது நாசி பக்கம் உதிக்க வேண்டிய மூச்சுக்காற்று இடது நாசி பக்கம் உதிக்கும் போது, மூச்சு இயல்பாக இயங்காமல் சிறிது அதிர்வதும், தனது பாதையை விட்டு விலகி பிறகு தனது நேரான பாதையில் வந்து சேருவதுமாகவும் இருக்கும். இதுவே வாரசரத்தில் சொன்னபடி மூச்சு இயல்பாக இயங்கினால், சிறிதும் அதிர்வில்லாமல், ஒரு ஒழுங்கு முறையுடன் இயங்கும். மூச்சை சீராக உற்று கவனித்து வந்தால் இந்த உண்மையை உணரலாம்.

வாரசரத்தின் படி நமது மூச்சு இயங்கினால், நமக்குள்ளே பயமோ அதிர்வோ ஏற்படாது.

உதித்து வலத்திடம் – வலப்பக்கம் உதிக்க வேண்டிய மூச்சுக்காற்று இடப்பக்கம் உதிக்கும் போது, அகன்றாரும் – அகன்று ஆரும் (அகன்று சேர்தல்), இராசி – வரிசை, ஒழுங்கு


Also published on Medium.