அமுதத்தில் நீந்தலாம்

ஆய்ந்துரை செய்யில் அமுதநின் றூறிடும்
வாய்ந்துரை செய்யும் வருகின்ற காலத்து
நீந்துரை செய்யில் நிலாமண் டலமதாய்ப்
பாய்ந்துரை செய்தது பாலிக்கு மாறே – 802

விளக்கம்:
தொடர்ந்து கேசரியோகப் பயிற்சி செய்து வந்தால், சுழுமுனையுடன் நாம் உரையாடும் நிலை வாய்க்கும். சுழுமுனையில் கவனத்தை நிறுத்தி, அதனுடன் உரையாடல் செய்யும் போது அங்கே அமுதம் சுரக்கத் தொடங்கும். அமுதம் ஊறும் இடம் சந்திரமண்டமாய் மாறும், அவ்வமுதத்திலே நாம் நீந்தலாம். யோகநிலையில் அமுதம் நின்று ஊறினால், அதுவே நம் சிவபெருமான் அருள் பாலிப்பதாகும். இதைவிட வேறென்ன வேண்டும் நமக்கு?

இரண்டாம் அடியை முதலிலும், முதல் அடையை இரண்டாம் இடத்திலும் வைத்துப் படிக்க வேண்டும்.

ஆய்ந்துரை செய்யில் – ஆராய்ந்து பார்த்தால், பாலிக்கு மாறே – அருள் பாலிக்கும்


Also published on Medium.