யோகத்தின் போது மனம் ஒருமித்து இருக்க வேண்டும்

நந்தி முதலாக நாமேலே யேறிட்டுச்
சந்தித் திருக்கில் தரணி முழுதாளும்
பந்தித் திருக்கும் பகலோன் வெளியாகச்
சிந்தித் திருப்பவர் தீவினை யாளரே – 806

விளக்கம்:
நந்தியம்பெருமானின் வழிகாட்டுதலின் படி, குண்டலினியின் நாவு மேலே நோக்கிச் செல்லுமாறு கேசரியோகப் பயிற்சி செய்வோம். குண்டலினி சக்தியை மேலே ஏற்றியவர்களுக்கு இந்த உலகமே வசப்படும். கேசரியோகத்தின் போது, மனத்தை ஒருமுகப்படுத்தி, உடலில் சுரக்கும் அமுதத்தை தேக்க வேண்டும். உலக விஷயங்களில் மனத்தை அலைய விட்டு, கவனம் சிதறி, உள்ளே ஊறும் அமுதத்தை வெளியேறும் முச்சுக்காற்றில் போக விட்டால், அதுவும் தீவினையே ஆகும்.

தரணி – பூமி, பந்தித்திருக்கும் – கட்டுண்டு இருக்கும், பகலோன் – சூரியகலை எனப்படும் பிங்கலை