அவரவர் அணுகுமுறைக்கு ஏற்ப அருள் செய்வான்

தீவினை யாளர்த்தஞ் சென்னியி லுள்ளவன்
பூவினை யாளர்த்தம் பொற்பதி யானவன்
பாவினை யாளர்த்தம் பாகவத் துள்ளவன்
மாவினை யாளர்த்தம் மதியிலுள் ளானே – 812

விளக்கம்:
யோகப்பயிற்சி செய்பவர்களுக்கு சிவபெருமான் அவரவர் அணுகுமுறைக்கு ஏற்ப அருள் செய்வான். மூலாதாரத்தில் இருக்கும் அக்னியை மேலே எழுப்பிப் பயிற்சி செய்பவர்களின் தலை உச்சியில் சிவபெருமான் விளங்குவான். சகசிரதளத்தில் கவனம் செலுத்தி யோகம் பயில்பவர்களுக்கு, சிவபெருமான் தலைவனாக வந்து ஆட்கொள்வான். சிவபெருமானின் அருள் குறித்த பாடல்களைப் பாடி யோகப் பயிற்சி செய்பவர்களின் கருத்திலே, நினைவிலே சிவபெருமான் நிறைந்து நிற்பான். மாபெரும் யோகமான கேசரி யோகம் பயில்பவர்களின் அறிவிலே, அந்த சிவபெருமான் பிரகாசித்து விளங்குவான், சாதகர் தெளிவான அறிவு கொண்டவராக இருப்பார்.

தீவினையாளர் – குண்டலினி என்னும் அக்னியை எழுப்பி பயிற்சி செய்பவர், பூவினையாளர் – சகசிரதளத்தில் இருக்கும் ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப் பூவை நோக்கி யோகம் செய்பவர், பாவனையாளர் – சிவனைப் பற்றிப் பாடல்கள் பாடி யோகம் செய்பவர், பாவகம் – கருத்து, மாவினையாளர் – மாபெரும் யோகமான கேசரியோகம்.