அறிவும் உடலும் பிரகாசிக்கும்

மதியி னெழுங்கதிர் போலப் பதினாறாய்ப்
பதிமனை நூறுநூற் றிருபத்து நாலாய்க்
கதிமனை யுள்ளே கணைகள் பரப்பி
எதிர்மலை யாமல் இருந்தனன் தானே – 813

விளக்கம்:
மாவினையான கேசரியோகம் பயில்பவர்களின் அறிவிலே, அந்த சிவபெருமான் பிரகாசித்து விளங்குவான் என்பதை முந்தையப் பாடலில் பார்த்தோம். கேசரியோகப் பயிற்சியினால், மதியினிலே பதினாறு அறிவுக்கதிர்கள் எழுந்து இந்த உடலிலே பதியும். அந்தப் பதினாறு கதிர்கள் இருநூற்று இருபத்து நான்கு கதிர்களாய் விரிந்து, நம்முடைய புகலிடமான இந்த உடலில் பரவும். மதியில் இருந்து பரவும் அந்த இருநூற்று இருபத்து நான்கு கதிர்களும் உடலில் அம்பெனப் பாய்ந்து பரவும், இந்த உடலும் அவற்றைத் தடுக்காமல் ஆசையுடன் உள்வாங்கி ஒளி பெறும்.

கேசரியோகத்தால் அறிவு பிரகாசித்து இந்த உடலும் ஒளி பெறும்.

பதி – பதிதல், கதிமனை – புகலிடமான உடல், கணை – அம்பு, எதிர்மலையாமல் – எதிர்த்து நிற்காமல்


Also published on Medium.