அமுதைப் பொழியும் பராசக்தியே!

இருந்தனள் சத்தியு மக்கலை சூழ
இருந்தனள் கன்னியு மந்நடு வாக
இருந்தனள் மானேர் முகநில வார
இருந்தனள் தானும் அமுதம் பொழிந்தே – 814

விளக்கம்:
கேசரியோகம் பயிலும் போது அறிவு சுடர் விடும். அந்த அறிவுச்சுடரில் பராசக்தியும் சூழ்ந்து இருப்பாள். என்றும் இளமையாக இருக்கும் பராசக்தி, சுழுமுனையில் நடுவாக இருப்பாள். கேசரியோகத்தில் நம்முள்ளே அமுதம் ஊறும் போது, அவ்வமுதம் மான் போன்ற அந்த சக்தியின் நிலவு முகத்திலும் பொழியும். தன் மேல் அமுதம் பொழியும் போது, தானும் தன் பங்குக்கு மேலும் அமுதத்தை பொழிவாள் நம் பராசக்தி.

கேசரியோகத்தில் பராசக்தியும் அமுதைப் பொழிவாள்.

சத்தி – பராசக்தி, கன்னி – என்றும் இளமையாக இருப்பவள், மானேர் முகநில வார – மான் ஏர் (போன்ற) முக நிலவு ஆர