நம் உடல் கொழுந்து போல் மென்மையாகும்!

பொழிந்த இருவெள்ளி பொன்மண் ணடையில்
வழிந்துள் ளிருந்தது வான்முத லங்குக்
கழிந்தது போகாமற் காக்கவல் லார்க்குக்
கொழுந்தது வாகுங் குணமது தானே – 815

விளக்கம்:
கேசரியோகத்தின் போது, பராசக்தி தானும் தன் பங்குக்கு மேலும் அமுதத்தை பொழிவாள் என்பதை முந்தைய பாடலில் பார்த்தோம். சிவபெருமான் பொழியும் அமுதம், பராசக்தி பொழியும் அமுதம் என இரு அமுதங்களை நாம் பெறுகிறோம். பொழியும் அவ்வமுதங்களை வீணாகாதவாறு தேக்கி வைத்து தாரணை செய்ய நாம் பயில வேண்டும். நம் உடலினுள் பொன் போன்ற ஒரு கரை எழுப்பி, சகசிரதளத்தில் இருந்து பொழியும் அவ்வமுதங்களை தேக்கி வைத்துக் காப்போம். அவ்வாறு காத்தால் நம் உடல் கொழுந்து போல் மென்மையாகும்.

கேசரியோகத்தின் தன்மை நம் உடலைக் கொழுந்து போல் ஆக்குவதும் ஆகும்.

இருவெள்ளி – இரண்டு அமுதங்கள், ஒன்று சிவபெருமான் பொழிவது, இன்னொன்று பராசக்தி பொழிவது, மண்ணடை – உடலினுள் கரை கட்டுதல், வான் – சகசிரதளம்