தூர தரிசனம் பெறலாம்!

சொல்லலு மாயிடு மாகத்து வாயுவுஞ்
சொல்லலு மாகு மண்ணீர்க் கடினமுஞ்
சொல்லலு மாகும் இவையஞ்சுங் கூடிடிற்
சொல்லலு மாந்தூர தெரிசனந் தானே – 822

விளக்கம்:
கேசரியோகப் பயிற்சி செய்யும் போது நம் உடலில் வாயு இயங்கும் முறையை உணரலாம். கடினம் தான் என்றாலும், இன்னும் சிறிது முயற்சி செய்தால், நம் உடலின் உள்ளே நிலத்தையும் நீரையும் உணரலாம். இன்னும் கடுமையாக யோகப்பயிற்சி செய்தால், ஐம்பூதங்களின் தன்மையையும் நம் உடலின் உள்ளே அறிந்து உணரலாம். அகத்தினுள் ஐம்பூதங்களின் இயக்கத்தை உணர்ந்தால், இந்த உலகம் இயங்கும் முறையையும் அறியலாம்.

கேசரியோகத்தினால் ஐம்பூதங்களின் இயல்பை, செயல்படும் முறையை தூரதரிசனத்தில் அறிந்து கொள்ளலாம்.

ஆகம் – உடல், தூர தரிசனம் – தூரத்தில் உள்ளவற்றை இங்கிருந்தே பார்க்கும் திறன்