அவிழ்கின்ற ஆக்கை இது!

மகிழ்கின்ற செல்வமும் மாடும் உடனே
கவிழ்கின்ற நீர்மிசைச் செல்லும் கலம்போல்
அவிழ்கின்ற ஆக்கைக்கோர் வீடுபே றாகச்
சிமிழொன்று வைத்தமை தேர்ந்தறி யாரே. – (திருமந்திரம் – 173)

விளக்கம்:
அளவில்லாத பொன்னையும், செல்வத்தையும் கண்டால் நாம் மகிழ்ச்சி அடைகிறோம். ஆனால் அவையெல்லாம் வெள்ளம் வந்தால் கவிழ்கின்ற படகைப் போல அழியக்கூடியவை. நம் உடலையும், உயிரையும் பிணைத்துள்ள கட்டு ஒருநாள் அவிழ்ந்து விடும்.  மனத்தில் தெளிவில்லாதவர்கள், அழியப்போகிற இந்த உடலுக்கு செல்வம் சேர்த்து வைப்பதையே வீடு பேறாக நினைக்கிறார்கள்.

கலம் – படகு,    ஆக்கை – உடல்


தெளியுங்கள்! தெளிந்த பின் கலங்காதீர்கள்!

தேற்றத் தெளிமின் தெளிந்தீர் கலங்கன்மின்
ஆற்றுப் பெருக்கிற் கலக்கி மலக்காதே
மாற்றிக் களைவீர் மறுத்துங்கள் செல்வத்தைக்
கூற்றன் வருங்கால் குதிக்கலு மாமே. – (திருமந்திரம் – 172)

விளக்கம்:
செல்வம் நிலையானதில்லை என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். தெளிந்த பின் மீண்டும் மனக்குழப்பம் அடையாதீர்கள். ஆற்று வெள்ளம் போல செல்வம் வந்து சேர்ந்தாலும் மனம் மயங்கி விடாதீர்கள். பணத்தினால் ஏற்படக் கூடிய மனமாற்றத்தை மறுத்தால் மனம் தெளியும். மேலும் நம் வாழ்நாளின் இறுதியில், எமன் வந்து கூப்பிடும் போது செல்வத்தின் மேல் உள்ள பற்றை கடந்து செல்ல முடியும்.

பணத்து மேல ரொம்ப ஆசை வச்சுட்டா, கடைசியில சாவு ரொம்ப துன்பமானதா இருக்கும்.

கலங்கன்மின் – மனக்குழப்பம் அடையாதீர். கலக்கி மலக்காதே – குழம்பி மயங்காதே. குதித்தல் – கடந்து விடுதல்.


அதிக செல்வம் ஆபத்தானது

ஈட்டிய தேன்பூ மணங்கண் டிரதமும்
கூட்டிக் கொணர்ந்தொரு கொம்பிடை வைத்திடும்
ஓட்டித் துரந்திட்டு அதுவலி யார்கொளக்
காட்டிக் கொடுத்தது கைவிட்ட வாறே. – (திருமந்திரம் – 171)

விளக்கம்:
தேன் இருக்கும் மலரை அதன் வாசனையைக் கொண்டு அறிந்து கொள்ளும் வண்டு. அப்படி வாசனை பிடித்து மலர்களில் உள்ள தேனைக் கொண்டு வந்து மரக்கிளையில் சேர்த்து வைக்கும். அந்தத் தேனின் அளவு மிகும்போது அது வலிமையுடைய வேடர்களின் கவனத்தை ஈர்க்கும். அவர்கள் தேனை எடுத்துச் செல்ல முயலும் போது, வண்டுகள் வேறு வழியில்லாமல் விட்டுக்கொடுத்து தான் ஆக வேண்டியுள்ளது. நாம் தேடி வைக்கும் செல்வத்தின் நிலையும் அதுதான். ஒருவனிடம் அதிகமான செல்வம் இருந்தால், பகைவர்கள் தங்கள் சூழ்ச்சியாலும், வலிமையாலும் அதை அபகரிக்க நினைப்பார்கள்.

இரதம் – இரசம், தேன்         கொம்பு – மரக்கிளை


நம்முடைய நிழல் கூட நமக்கு உதவாது

தன்னது சாயை தனக்குத வாதுகண்டு
என்னது மாடென்று இருப்பர்கள் ஏழைகள்
உன்னுயிர் போம்உடல் ஒக்கப் பிறந்தது
கண்ணது காணொளி கண்டுகொ ளீரே. – (திருமந்திரம் – 170)

விளக்கம்:
நம்முடைய நிழல் கூட நமக்கு உதவாது என்பதை நாம் முதலில் உணர வேண்டும். அப்படி இருக்கும் போது, நம்மிடம் இருக்கும் செல்வமெல்லாம் நமக்குச் சொந்தமானது என்று நினைப்பது அறியாமை ஆகும். உடலும் உயிரும் ஒன்றாகப்  பிறந்தாலும் உயிர் போகும் போது உடல் அழிந்து விடும். அதனால் உயிர் உள்ள போதே அகக்கண்ணில் உள்ள பேரொளியை கண்டு உணர்வோம்.

சாயை – நிழல்,   மாடு – செல்வம்,   ஏழை – அறியாமையில் இருப்பவர்கள்


செல்வ மழையில் நனையலாம்!

இயக்குறு திங்கள் இரும்பிழப்பு ஒக்கும்
துயக்குறு செல்வத்தைச் சொல்லவும் வேண்டா
மயக்கற நாடுமின் வானவர் கோனைப்
பெயற்கொண்டல் போலப் பெருஞ்செல்வ மாமே. – (திருமந்திரம் – 169)

விளக்கம்:
வானத்தில் அவ்வளவு பிரகாசமாக உலவும் நிலவு கூட மாதத்தில் ஒரு நாள் தன் ஒளி இழந்து இருளாகிறது. அப்படி இருக்கும் போது துக்கத்தையே தரும் செல்வத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. இன்றிருக்கும் செல்வம் நாளை இல்லாமல் போகலாம்.  நாம் நம் மனமயக்கம் நீங்கி வானவர் தலைவனான சிவபெருமானை நாடி நிற்போம். அவன் திருவருளாகிய செல்வமழையில் நனையலாம்.

சிவபெருமானின் அருளே பெருஞ்செல்வமாகும்.


செல்வம் வேண்டாம், செல்வன் போதும்.

அருளும் அரசனும் ஆனையும் தேரும்
பொருளும் பிறர்கொள்ளப் போவதன் முன்னம்
தெருளும் உயிரொடும் செல்வனைச் சேரின்
மருளும் பினையவன் மாதவ மன்றே.  – (திருமந்திரம் – 168)

விளக்கம்:
மக்களுக்குத் தேவையானதை அருளக்கூடிய அரசபதவி, யானைப்படை, தேர்ப்படை மற்றும் அளவில்லாத பொன் பொருள், இவை யாவுமே நிலையானவை கிடையாது. இவை எல்லாவற்றையும் ஒருநாள் பகைவன் வந்து அபகரித்துக் கொள்ளும் அபாயம் உண்டு. நாம் உயிருடன் இருக்கும் காலத்திலேயே, நிலையான செல்வத்தை உடைய ஈசன் அடியைச் சேர்ந்து இருந்தால் தெளிவான அறிவைப் பெறலாம். நம் துன்பமெல்லாம் மறைந்து போகும். ஈசன் திருவடியைச் சேர்ந்திருப்பதே சிறந்த தவமாகும்.

பொருட்செல்வத்தை விட அருட்செல்வமே நிலையானது. அச்செல்வத்தை நமக்கு அருளும் செல்வன் ஈசன் ஆவான்.

தெருள் – தெளிவான அறிவு


இறந்த பிறகு உடலைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை!

காக்கை கவரிலென் கண்டார் பழிக்கிலென்
பாற்றுளி பெய்யிலென் பல்லோர் பழிச்சிலென்
தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டுங்
கூத்தன் புறப்பட்டுப் போன இக்கூட்டையே.  – (திருமந்திரம் – 167)

விளக்கம்:
உயிர் இல்லாத நிலையில், நம்முடைய இந்த உடல் வெறும் தோல்பை ஆகும். இந்த உடலினுள்  நின்று உயிர் கொடுத்து உடல் இயக்கத்திற்கு காரணமாய் இருப்பவன் கூத்தன் என்று அழைக்கப்படும் ஈசன். அவன் இந்த உடலை விட்டு நீங்கிய பிறகு, அதாவது நாம் செத்துப் போன பிறகு, இந்த உடலை காக்கை வந்து கொத்தி தின்றால் என்ன? பார்ப்பவர் இகழ்ந்தால் என்ன? தகனம் செய்து பால் ஊற்றினால் என்ன? பலரும் பழித்துப் பேசினால் என்ன? உயிர் இல்லாத இந்த வெறும் கூட்டைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை.

தொழில் அறச் செய்து – இந்த உடல் நம்முடைய முயற்சி எதுவும் இல்லாமல் தானாக இயங்குகிறது.


சுற்றி எத்தனை படை இருந்தாலும், போகும் உயிரை தடுக்க முடியாது

குடையும் குதிரையும் கொற்றவா ளுங்கொண்டு
இடையும்அக் காலம் இருந்தது நடுவே
புடையு மனிதனார் போக்கும்அப் போதே
அடையும் இடம்வலம் ஆருயி ராமே.  – (திருமந்திரம் –166)

விளக்கம்:
நாடாளும் மன்னர்கள் வெண்கொற்றக் குடையும், வெற்றி தரும் வாளும் கொண்டு குதிரையில் வலம் வரும் காலஅளவு மிகச் சொற்பமானதாகும். அவரைச் சுற்றி அவருடைய படைகளும், மக்களும் சூழ்ந்து இருந்தாலும், அந்த மன்னரின் பிராணன் இட வலம்  மாறி உயிர் பிரிந்தால் அதை யாராலும் தடுக்க முடியாது.


ஏழு நரகங்கள்!

மடல்விரி கொன்றையன் மாயன் படைத்த
உடலும் உயிரும் உருவந் தொழாமல்
இடர்ப்படந்து ஏழா நரகிற் கிடப்பர்
குடர்ப்பட வெந்தமர் கூப்பிடு மாறே.  – (திருமந்திரம் –165)

விளக்கம்:
மடல் விரிந்த கொன்றை மலரை அணிந்த சிவபெருமான், தன்னை வெளிப்படுத்தாமல் நம்மிடம் ஒளிந்து விளையாடுகிறான். நம்முடைய உடலும், உயிரும் ஒன்றாக இருக்கும் காலத்தில், அதாவது நாம் உயிருடன் இருக்கும் காலத்திலேயே அந்த சிவபெருமானை வணங்கி இருப்போம். பிற உலக விஷயங்களிலேயே தனது வாழ்நாளைச் செலவிடுபவர்கள், யமதூதர் வரும் நேரம், குடல் நடுங்குவார்கள், ஏழு வகையான நரகங்களையும் அனுபவித்து வருந்துவார்கள்.

அள்ளல், ரௌரவம், கும்பீபாகம், கூடசாலம், செந்துத்தானம், பூதி, மாபூதி ஆகியவை ஏழு வகையான நரகங்கள் ஆகும்.


விளக்கு இங்கே! ஒளி எங்கே?

இடிஞ்சில் இருக்க விளக்கெரி கொண்டான்
முடிஞ்ச தறியார் முழங்குவர் மூடர்
விடிஞ்சுஇரு ளாவது அறியா உலகம்
படிஞ்சு கிடந்து பதைக்கின்ற வாறே.  – (திருமந்திரம் –164)

விளக்கம்:
விளக்கில் எண்ணெய் விடும் பகுதி இடிஞ்சில் எனப்படும். இந்த உடல் என்னும் விளக்கை இங்கேயே விட்டு விட்டு உயிர் என்னும் தீபஒளியை அந்த இயமன் எடுத்துச் செல்கிறான். விளக்கின் எண்ணெய் தீர்ந்து விட்டது என்பதை புரிந்து கொள்ளாதவர்கள் அழுது புலம்புகிறார்கள். காலையில் விடியும் ஒரு நாள் பொழுதில் மாலை இருள் வந்தே தீரும். நம் வாழ்நாளும் அப்படித்தான் என்பதை நாம் புரிந்து கொள்வதில்லை. நாம் நம் உடலை நிலையானதாக நினைத்து அதையே பற்றிக் கொள்கிறோம். ஒருநாள் உயிர் உடலை விட்டுப் பிரியும் நிலை வரும்போது பதறுகிறோம்.