உலக வாசனை தெரியும் வயது!

முட்டை பிறந்தது முந்நூறு நாளினில்
இட்டது தானிலை ஏதேனும் ஏழைகாள்
பட்டது பார்மணம் பன்னிரண்டி ஆண்டினில்
கெட்டது எழுபதில் கேடறி யீரே.  – (திருமந்திரம் –163)

விளக்கம்:
நாம் நமது தாயின் வயிற்றில் கருவாக இருந்து, முந்நூறு நாட்களுக்குப் பிறகு பிறக்கிறோம். இதை நம் வாழ்வின் தொடக்கம் என்று நினைக்கிறீர்களா? அது அறியாமை ஆகும். பன்னிரெண்டு வயதில் நமக்கு உலக விஷயங்களின் வாசனை தோன்றுகிறது. பிறகு எழுபது வயதில் நாம் சாகும் வரை அழிவை நோக்கித் தான் சென்று கொண்டிருக்கிறோம். இதைத் தெரிந்து கொள்ளுங்கள்.


தேடிய தீயினில் தீய வைத்தார்கள்

கூடம் கிடந்தது கோலங்கள் இங்கில்லை
ஆடும் இலையமும் அற்றது அறுதலும்
பாடுகின் றார்சிலர் பண்ணில் அழுதிட்டுத்
தேடிய தீயினில் தீயவைத் தார்க்களே.  – (திருமந்திரம் –162)

விளக்கம்:
விதி முடிந்து இறந்து போனவனுடைய உடல், பொலிவை இழந்த கூடம் போலக் கிடந்தது.  அவன் இருதயத்தின் சீரான லயம் நின்று துடிப்பும் அடங்கியது. அங்கே சிவனடியார்கள் திருமுறைகளைப் பாடுகிறார்கள். உறவினர்கள் ஒப்பாரி வைத்து அழுகிறார்கள். பிறகு அந்த உடலை சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்று தகனத்துக்குத் தேவையான பொருட்களைத் தேடிக் கொண்டு வந்து தீய வைத்தார்கள்.


சிவபெருமான் கட்டித் தரும் வெள்ளிக் கோயில்

மேலும் முகடில்லை கீழும் வடிம்பில்லை
காலும் இரண்டு முகட்டலக் கொன்றுண்டு
ஓலையான் மேய்ந்தவர் ஊடு வரியாமை
வேலையான் மேய்ந்ததோர் வெள்ளித் தளிகையே.  – (திருமந்திரம் –161)

விளக்கம்:
பிரமனால் கட்டப்பட்ட நம்முடைய இந்த உடல் என்னும் வீடு, சரியான கட்டுமானம் இல்லாதது. இந்த வீட்டிற்கு மேலே கூரை இல்லை. கீழே கூரை தாங்கும் விளிம்பும் இல்லை. ஒப்புக்கு இரண்டு கால்களும், ஒரு முதுகுத்தண்டும் இருக்கின்றன. அவைதான் நம்மை நடமாட வைக்கின்றன. ஆனால் சிவபெருமான் ஒரு சிறந்த வேலையான். அவன் நமக்காக ஒரு வெள்ளிக் கோயிலையே கட்டித்தருகிறான். நாம் இந்த உடலின் மீது பற்று வைக்காமல், அவன் திருவடியையே நாடி இருந்தால், அழிவில்லாத அந்த வெள்ளிக் கோயிலில் குடியிருக்கலாம்.


அத்திப்பழமும் அறைக்கீரை விதையும்

அத்திப் பழமும் அறைக்கீரை நல்வித்தும்
கொத்தி உலைபெய்து கூழட்டு வைத்தனர்
அத்திப் பழத்தை அறைக்கீரை வித்துண்ணக்
கத்தி எடுத்தவர் காடுபுக் காரே.  – (திருமந்திரம் –160)

விளக்கம்:
இந்தப் பாடலில் நம் உடலை அத்திப்பழத்துடனும், நம் உயிரை அறைக்கீரை விதையுடனும் ஒப்பிட்டு எழுதியிருக்கிறார் திருமூலர்.

அத்திப்பழமாகிய உடலையும், அறைக்கீரை விதையான உயிரையும் அந்த இறைவன் சமைத்து, நம்மை இந்த உலகில் பிறக்கச் செய்தான். நாம் உயிர் விடும்போது,  நம்முடைய உடல் தன்னுடைய வினைப்பயனை எல்லாம் உயிரிடம் கொடுத்து விடுகிறது. (இதைத்தான் அத்திப்பழத்தை அறைக்கீரை வித்து உண்டது என்கிறார்.) பிறகு இறந்த உடலை அழுகை ஒலியுடன் உறவினர்கள் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்வார்கள்.

இறப்பு நம் உடலுக்குத் தான்.  நம்முடைய பாவ, புண்ணியங்கள் நம்மை விட்டு விலகாது.


உடல் வெந்த பிறகு உயிரின் நிலை என்ன?

ஐந்து தலைப்பறி ஆறு சடையுள
சந்தவை முப்பது சார்வு பதினெட்டுப்
பந்தலும் ஒன்பது பந்தி பதினைந்து
வெந்து கிடந்தது மேலறி யோமே.  – (திருமந்திரம் –159)

விளக்கம்:
நம் உடலில் மிகவும் முக்கியமானவை ஐம்பொறிகள். அவை கண், காது, மூக்கு, நாக்கு, தோல் ஆகியவை. மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆஞ்ஞை ஆகியவை ஆறு ஆதார மையங்களாக உள்ளன. எலும்பின் இணைப்புகள் முப்பது, நுண்ணுடம்பு எட்டு, வாயுக்கள் பத்து, தசை நார்கள் ஒன்பது, எலும்புகளின் வரிசை பதினைந்து. இவை அனைத்தும் ஒரு நாள் சுடுகாட்டில் வெந்து சாம்பலாகும். அதற்குப் பிறகு இந்த உயிரின் நிலை என்னவாக இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது.


குடம் உடைந்தாலும் பயன்படும் ஆனால் இந்த உடல்?

வளத்திடை முற்றத்தோர் மாநிலம் முற்றுங்
குளத்தின் மண்கொண்டு குயவன் வனைந்தான்
குடமுடைந் தால் அவை ஓடென்று வைப்பர்
உடலுடைந் தால்இறைப் போதும் வையாரே.  – (திருமந்திரம் –158)

விளக்கம்:
வளம் மிகுந்த முற்றம் போன்றது இந்த உலகம். பிரமன் என்னும் ஒரு குயவன் தன் குளத்தின் மண்ணைக் கொண்டு வந்து இந்த முற்றம் முழுவதும் உயிர்களைப் படைக்கிறான். மனிதன் செய்யும் குடம் உடைந்தால் அதன் ஓடு வேறு எதற்காவது பயன்படும் என்று பாதுகாத்து வைப்போம். ஆனால் பிரமன் செய்யும் இந்த உடல் என்னும் குடம் உடைந்தால் அதை கொஞ்ச நேரம் கூட வைத்திருக்க மாட்டோம். சுடுகாட்டில் கொண்டு போய் வைத்து எரித்து விடுவோம்.


நிலையில்லாதது இந்த வாழ்க்கை

ஆர்த்தெழு சுற்றமும் பெண்டிரும் மக்களும்
ஊர்த்துறைக் காலே ஒழிவர் ஒழிந்தபின்
வேர்த்தலை போக்கி விறகிட்கு எரிமூட்டி
நீர்த்தலை மூழ்குவர் நீதியி லோரே.  – (திருமந்திரம் –157)

விளக்கம்:
வாழ்க்கை சொல்லும் நீதி புரியாதவர்களே! இதைக் கேளுங்கள். ஒருவன் தன் விதி முடிந்து இறந்தவுடன், அவனுடைய மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் எல்லாம் ஆரவாரத்துடன் அழுது புலம்புவார்கள். பிறகு அவர்கள் ஊருக்கு வெளியே உள்ளே நீர்த்துறைக்கு வந்து திரும்புவார்கள்.  இறந்தவனுடைய உடல் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, மரத்தின் வேரும் நுனியும் நீக்கப்பட்ட விறகினை அடுக்கித் தீ மூட்டுவார்கள். தகனம் முடிந்தவுடன் நீரில் மூழ்கி எழுவார்கள்.

நாம் வாழும் வாழ்க்கை நிலையில்லாதது.


மரணத்தை பார்த்தும் நாம் கற்பதில்லை

வைச்சகல் வுற்றது கண்டு மனிதர்கள்
அச்சக லாதென நாடும் அரும்பொருள்
பிச்சது வாய்ப்பின் தொடர்வுறு மற்றவர்
எச்சக லாநின் றிளைக்கின்ற வாறே.  – (திருமந்திரம் –156)

விளக்கம்:
முந்தைய பாடலில் சொன்னது போல, இறந்து போன ஒருவனைச் சுடுகாட்டில் கொண்டு போய் வைப்பதைப் பார்த்த பிறகும், நாம் நம் உயிரும் ஒருநாள் இப்படி அகன்று விடும் என்பதை நினைத்துப் பார்ப்பதில்லை. நாம் விரும்புகின்ற பொருளையே அரிய பொருளாக நினைத்து, அதன் பின்னாலேயே மயக்கத்தோடு திரிகிறோம். இப்படியே நிலையில்லாத பொருட்களின் பின்னால் அலைந்து திரிந்து, நம் மேன்மையை இழந்து சோர்வு அடைகின்றோம்.


யாரால் என்ன செய்ய முடியும்?

மதுவூர் குழலியும் மாடும் மனையும்
இதுவூர் ஒழிய இதணம் தேறிப்
பொதுவூர் புறஞ்சுடு காடது நோக்கி
மதுவூர வாங்கியே வைத்தகன் றார்களே.  – (திருமந்திரம் –155)

விளக்கம்:
தேன் நிறைந்த பூக்களை தலையில் சூடிக்கொள்ளும் மனைவி, பாடுபட்டு சம்பாதித்த செல்வங்கள், வெகு நாட்களாக வசித்து வரும் வீடு, இவை அனைத்தையும்  விட்டு ஒரு நாள் நீங்க வேண்டியிருக்கும். நம் உயிர் பிரியும் நாள் தான் அது. உயிர் நம் உடலை விட்டு பிரிந்தவுடன், இந்த உடலை ஊருக்குப் பொதுவாக உள்ள சுடுகாட்டுக்குப் பாடையில் வைத்து எடுத்துப் போவார்கள். அங்கே உறவினர் எல்லாம் தம் உள்ளத்தில் அன்பு பெருக, உடலை மயானத்தில் வைத்து விட்டுச் செல்வார்கள்.


உடல் என்னும் கோயில்

முப்பதும் முப்பதும் முப்பத் தறுவரும்
செப்ப மதிளுடைக் கோயிலுள் வாழ்பவர்
செப்ப மதிலுடைக் கோயில் சிதைந்தபின்
ஒப்ப அனைவரும் ஓட்டெடுத் தார்களே.  – (திருமந்திரம் –154)

விளக்கம்:
நம்முடைய இந்த உடல் செம்மையான கோட்டைச் சுவர் கொண்ட கோயிலாகும். இந்த கோயிலுக்குள் தொண்ணூற்றாறு தத்துவங்கள் வாழ்கின்றன. இந்தக் கோயில் சிதைவடையும் போது, அதாவது நம் உயிர் உடலை விட்டு நீங்கும் போது, அந்த தொண்ணூற்றாறு தத்துவங்களும் ஓட்டம் எடுத்து விடும்.