உடலுக்குள்ளே ஒரு சமையல் நடக்குது

துடுப்பிடு பானைக்கும் ஒன்றே அரிசி
அடுப்பிடு மூன்றிற்கும் அஞ்செரி கொள்ளி
அடுத்தெரி யாமற் கொடுமின் அரிசி
விடுத்தன நாள்களும் மேற்சென் றனவே.  – (திருமந்திரம் – 193)

விளக்கம்:
நாம் உணவு சமைக்க தேவையான பொருட்கள் – அரிசி, பானை, அகப்பை மற்றும் நெருப்பு. அது போலவே நம் உடல் இயக்கத்திலும் ஒரு சமையலே நடக்கிறது. நம் உயிரே அரிசி, உடல் பானை, நாம் விடும் மூச்சுக்காற்றே அகப்பை ஆகும். உயிர்க்காற்று, மலக்காற்று, தொழிற் காற்று, ஒலிக்காற்று, நிரவுகாற்று என்னும் ஐந்தும் நெருப்புகள் உள்ளன. இவ்வாறு தொடர்ந்து நடக்கும் சமையலே நாம் உயிர் வாழ்வதாகும். நம்முடைய வாழ்நாள் வீணாக கழிந்து கொண்டிருக்கின்றன. சுடுகாட்டில் நம் உடல் எரிவதற்கு முன்பாக, நம் உயிர் என்னும் அரிசியை சமைக்கும் பொறுப்பை அந்த ஈசனிடம் ஒப்படைப்போம். அதாவது நாம் உயிருள்ள போதே அந்த ஈசனை சரணடைந்திருந்தால், நமக்கு மறுபிறவி என்பது கிடையாது.

துடுப்பு – அகப்பை

எல்லாமே கொஞ்ச நேரம்தான்

மாறு திருத்தி வரம்பிட்ட பட்டிகை
பீறும் அதனைப் பெரிதுணர்ந் தாரிலை
கூறும் கருமயிர் வெண்மயி ராவது
ஈறும் பிறப்புமொ ராண்டெனும் நீரே.  – (திருமந்திரம் – 192)

விளக்கம்:
சிக்கல் நீக்கி பார்த்து பார்த்து நெய்யப்பட்ட பட்டாடை ஒரு நாள் கிழிந்து போகும். இந்த அழியும் தன்மையை நாம் அறிந்து கொள்வதில்லை. அதே போல் நாம் பெருமை பட்டுக் கொள்ளும் நம்முடைய கருமயிர் வெண்மயிராக மாறும் கால அளவும், நம்முடைய பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே உள்ள கால அளவும் மிகவும் குறைவானதே. இதை நாம் உணர்வோம்.

நம் வாழ் நாள் மிகவும் குறைவானதே. அதனால் காலத்தை வீணாக்காமல் நாம் அந்த இறைவனின் திருவடியை நாடி இருப்போம்.

(பட்டிகை – பட்டாடை,  பீறும் – கிழிந்து விடும்,  ஈறு – இறப்பு)

எங்கும் எதிலும் பரவி இருக்கிறான்

சென்றுணர் வாந்திசை பத்துந் திவாகரன்
அன்றுணர் வால் அளக் கின்ற தறிகிலர்
நின்றுண ரார்இந் நிலத்தின் மனிதர்கள்
பொன்றுணர் வாரிற் புணர்க்கின்ற மாயமே.  –  (திருமந்திரம் – 191)

விளக்கம்:
சூரியன் தனது ஒளியை பத்து திசைகளிலும் பரவவிட்டு, இந்த உலகில் உள்ள அனைத்தையும் உணர்கிறான். ஆனால் நம் தலைவனான சிவபெருமான், இந்த உலகில் சூரியன் படைக்கப்படுவதற்கு முன்பிருந்தே இந்த உலகில் உள்ள அனைத்தையும் தன்னுடைய உணர்வாலே அளக்கிறான். அவன் உணராத பொருள் இல்லை இவ்வுலகத்தில். இந்த உலகின் மனிதர்களாகிய நாம் இந்த உண்மையை உணர்வதில்லை. இந்த உடல் அழியக்கூடியது, நம்முடைய உயிர் நிலையானது இல்லை என்பதைப் புரிந்தவர்கள், அந்த ஈசனை உணர்ந்து, அந்த உணர்விலே கலந்திருப்பார்கள்.

பத்து திசைகள் – எட்டு திசைகள் + மேலே + கீழே

பொன்று – இறத்தல், நிலையாமை

வெந்து அழியக்கூடியது இந்த உடல்

வேங்கட நாதனை வேதாந்தக் கூத்தனை
வேங்கடத் துள்ளே விளையாடும் நந்தியை
வேங்கடம் என்றே விரகுஅறி யாதவர்
தாங்கவல் லாருயிர் தாமறி யாரே.  –  (திருமந்திரம் – 190)

விளக்கம்:
உடல்கள் வேகின்ற சுடுகாட்டில் ஆடும் அந்த ஈசனை, வேதங்களை நமக்களித்த அந்தக் கூத்தனை நாம் அறிந்து கொள்ளவில்லை. வெந்து அழியக்கூடிய இந்த உடலுக்குள்ளே நின்று விளையாடும் நந்திபெருமானையும் நாம் அறியவில்லை. இந்த உடல் வெந்து அழியக்கூடியது என்பதை அறியாதவர்களால், இந்த உடலை தாங்கி நிற்கும் அந்த ஆருயிரான ஈசனையும் தெரிந்து கொள்ள முடியாது.

வேங்கடநாதன் – வேம் + கடம் + நாதன் – வேகின்ற சுடுகாட்டுக்கு நாதன்
வேங்கடத்துள்ளே – வேம் + கடம் + உள்ளே – வேகக்கூடிய உடலின் உள்ளே

இரு வகையான தாளங்கள்

மத்தளி ஒன்றுள தாளம் இரண்டுள
அத்துள்ளே வாழும் அரசனும் அங்குளன்
அத்துள்ளே வாழும் அரசன் புறப்பட்டால்
மத்தளி மண்ணாய் மயங்கிய வாறே.  –  (திருமந்திரம் – 189)

விளக்கம்:
மண்ணால் ஆகிய கோயில் நம்முடைய உடல். இதன் உள்ளே நாம் இழுக்கும் மூச்சுக்காற்றை பூரகம் எனவும், வெளியே விடும் மூச்சை இரேசகம் எனவும் சொல்கிறோம். இந்த பூரகம், இரேசகம் ஆகியவை இரண்டு தாளங்களாக உள்ளன. நம்முடைய உயிர் என்னும் அரசனும் இந்த மண்ணால் ஆகிய கோயிலுக்குள் வாழ்கிறான். அந்த அரசன் ஒருநாள் வெளியே கிளம்பி விட்டால், இந்த உடல் வெறும் மண்ணாகி விடும்.

மத்தளி – மண் + தளி

ஐம்புலன்களுக்கு வரும் ஓலை

ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது
ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள்
ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால்
ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே.  –  (திருமந்திரம் – 188)

விளக்கம்:
நம் உடலை ஐம்புலன்களான மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவை செயல்படுத்துகின்றன. ஒவ்வொரு புலன்களுக்கும் ஒரு வேலைப்பொறுப்பு இருக்கிறது. ஐம்புலன்களுக்கும் நாயகனாகிய உருத்திரனிடம் இருந்து ஓலை வரும் நேரம், ஐம்புலன்களும் தமது பொறுப்பில் இருந்து விலகிக் கொள்ளும். அதனால் புலன்கள் நன்றாக இருக்கும் காலத்திலேயே அந்த ஈசனின் திருவடியை நாடி இருப்போம்.

திருவடியிலே வாடாத பூக்களாய் இருக்கலாம்

தழைக்கின்ற செந்தளிர்த் தண்மலர்க் கொம்பில்
இழைக்கின்ற எல்லாம் இறக்கின்ற கண்டும்
பிழைப்பின்றி எம்பெரு மானடி ஏத்தார்
அழைக்கின்ற போதுஅறி யாரவர் தாமே.  –  (திருமந்திரம் – 187)

விளக்கம்:
குளிர்ச்சியான மலர்கள் பூத்துக் குலுங்கும்  தளிரான கிளையைப் பார்க்கும் போது நமக்கு மகிழ்வாக இருக்கிறது. ஆனால் சில நாட்களில் அந்தக் கிளையில் உள்ள இலைகளும் மலர்களும் சருகாகி விடுவதைப் பார்க்கிறோம். இதைப் பார்க்கும் போது எந்த உயிரும் நிலையானது இல்லை என்னும் உண்மையை நாம் உணர்வதில்லை. இதை உணர்ந்து நாம் உலகியல் விஷயங்களைத் தவிர்த்து அந்த ஈசனின் திருவடியைத் துதித்து இருப்போம். ஈசனின் திருவடியை நாடாதவர்கள், அந்த ஈசன் தன்னை விரும்பி அழைப்பதை உணர மாட்டார்கள்.

மேதகு மேனேஜர்

“ஸார்! டீக்கடை ஓனர கூட்டிட்டு வந்துட்டேன். உள்ள வரச் சொல்லவா?”

“வேணாம். அப்படியே நம்ம கான்ஃபரன்ஸ் ஹாலுக்கு கூட்டிட்டு வந்துருங்க!”ன்னு சொல்லிய மேனேஜர், தனது உதவியாளரை ஃபோனில் கூப்பிட்டார். “ஹாஃப் அன் அவர் எந்த காலையும் எனக்கு கனெக்ட் பண்ணாதம்மா. அந்த யூ எஸ் க்ளயண்ட் கூப்பிட்டான்னா, நான் ஒரு முக்கியமான மீட்டிங்க்ல இருக்கேன்னு சொல்லிரு”ன்னார்.

“எக்ஸெல் ஷீட் ரெடி பண்ணிட்டியா பார்த்திபா?”

“எல்லாம் ரெடி ஸார். நீங்க வந்தீங்கன்னா சரியா இருக்கும்”.

மேனேஜர் விறுவிறுப்பாக கான்ஃபரன்ஸ் ஹாலில் நுழைந்த போது, அங்கு கூடி இருந்த முக்கிய பொறுப்பாளர்கள் எல்லாம் தூக்கத்தை உதறி நிமிர்ந்து உட்கார்ந்தார்கள். டீக்கடை ஓனர் சுற்றிச் சுற்றிப் பார்த்தார். அது ஒரு குளிரூட்டப் பட்ட 14 x 30 ஹால். நடுவே ஒரு நீள மேஜை, அதைச் சுற்றி பத்து நாற்காலிகள். அவற்றின் உயர்ந்த தரம் டீக்கடை ஓனரை உட்காரத் தயக்கியது. பாட்டிலில் அடைக்கப் பட்ட தண்ணீர் நிறைய வைக்கப் பட்டிருந்தன.

“உட்காருங்க ஸார்! இந்த மீட்டிங் எதுக்குன்னு தெரியும்ல?” என்று கேட்ட மேனேஜரை பயத்துடன் பார்த்தார். ‘தெரியலன்னு சொன்னா கோவிச்சுக்குவாரோ?’ன்னு ஓடிய அவருடைய மைண்ட் வாய்ஸ் அவருக்கு எதிரே அமர்ந்திருந்த மணிகண்டனுக்கு மட்டும் கேட்டது. பார்த்திபன் தான் தயார் செய்து வைத்திருந்த எக்ஸெல் ஷீட்டை அங்கிருந்த 52 இன்ச் LED டிஸ்ப்ளேயில் தெரியச் செய்தார். அந்நேரம் உள்ளே வந்த கம்பெனி முதலாளி பாலாஜிநாதன் தன்னுடைய ஐஃபோனை தடவியபடியே வந்து தன் இருக்கையில் உட்கார்ந்தார். தலை நிமிரக்கூட நேரமில்லாத அளவுக்கு  அவருக்கு ஒரு முக்கியமான வேலை. தன்னுடைய ஃபேஸ்புக்கில் திருப்பதி பெருமாள் படத்தை தன்னுடைய தொடர்பில் இருக்கும் 684 பேருக்கும் தனித்தனியாக பகிர்ந்து கொண்டிருந்தார். மொத்தமாக ஷேர் செய்தால் பலன் கிடையதாம்.

மேனேஜர் தன்னுடைய மீட்டிங்கை ஆரம்பித்தார். “ஸார் இதப் பாருங்க” என்று டீக்கடை அதிபரை அழைத்து தன்னுடைய ரிப்போர்ட்டை காண்பித்தார்.

“இதுல தேதி வாரியா டீ வாங்கின விவரம் எல்லாத்தையும் டேட்டா எடுத்து வச்சுருக்கோம். அத அனலைஸ் பண்ணி பார்க்கும் போது தான்  முக்கியமான ஒரு விஷயம் தெரிய வந்தது. உங்க கடைல QC உண்டா இல்லையா?”

“ஈஸியா? அது ஏர்டெல்லுக்கும் வோடஃபோனுக்கும் வச்சுருக்கோம்” உளறுகிறோம் என்பதை தெரிந்தே செய்தார் டீக்கடை அதிபர்.

“இந்த பதினெட்டாந் தேதிய பாருங்க. அன்னைக்கு தான் உங்க டீ நல்லாருந்ததா எல்லாரும் ரிப்போர்ட் பண்ணிருக்காங்க. இருபத்திரெண்டாம் தேதி பாருங்க, நாலு பேரு டீய கீழ ஊத்திருக்காங்க. இருபத்தி நாலாம் தேதி லேடீஸுக்கு மட்டும் டீ பிடிச்சிருக்கு. மறுநாள் முப்பது வயசுக்கு மேல உள்ளவங்க எல்லாம் டீ சுமார்ன்னு சொல்லியிருக்காங்க. இப்போ எங்க கம்பெனிக்கு தெரிய வேண்டியது என்னன்னா ஏன் டீயோட டேஸ்ட் இப்படி மாறிக்கிட்டே இருக்கு? குவாலிட்டில ஒரு கன்ஸிஸ்டன்ஸி இல்ல. என்ன செய்யலாம் இத சரி பண்ண? அதுக்கு தான் மீட்டிங். எங்ககிட்ட இருக்கிற டேட்டா எல்லாத்தையும் தாரோம். நீங்க ஒரு வாரத்துக்குள்ள ஒரு ரிப்போர்ட் சப்மிட் பண்ணிடுங்க. இந்த விவரமெல்லாம் பத்தாதுன்னா சொல்லுங்க. பார்த்திபா ஒரு பவர் பாய்ண்ட் ப்ரசெண்டேஷன் ரெடி பண்ணிரலாமா?”

“பண்ணிரலாம் ஸார்!” பார்த்திபன் வேகமாக தன்னுடைய கணினியில் செயல்பட ஆரம்பித்தார்.

டீக்கடை அதிபர் பரிதாபமாக பாலாஜிநாதனையே பார்த்தார். அப்போது தான் தன்னுடைய ஐஃபோனில் இருந்து தலை நிமிர்ந்த பாலாஜிநாதன் “என்ன காளியப்பா? இங்க என்ன செய்ற?” என்றபடி மேனேஜர் காண்பித்த புள்ளி விவரத்தைப் பார்த்தார்.

“காளியப்பா! ஒன் டீ ஒன்னும் வாய்ல வைக்க வெளங்கல. டீ நல்லா இருந்தாத் தான் துட்டு. புரியுதா?”ன்னு ஒரு அதட்டல் போட்டார்.

“சரிங்க மொதலாளி” நன்றி பெருக்கெடுத்து ஓடியது டீக்கடை அதிபரின் குரலில்.

“இனிம யாராவது கூப்டு விட்டாங்கன்னா, நீ வராத. கடப்பசங்கள அனுப்பி வை” முன்னூற்று முப்பதாவது பெருமாள் ஷேரிங் செய்தபடி சொன்னார் பாலாஜிநாதன்.

பராசக்தியின் துணையைப் பெறலாம்

செய்த இயம நியமஞ் சமாதிசென்
றுய்யப் பராசக்தி உத்தர பூருவ
மெய்த கவச நியாசங்கள் முத்திரை
எய்த வுரைசெய்வன் இந்நிலை தானே.  –  (திருமந்திரம் – 550)

விளக்கம்:
சமாதி நிலை ஈடேற இயம நியம ஒழுக்கங்கள் அவசியம். இயம நியமங்களைச் சரியாகக் கடைபிடிக்கும் நிலையில் பராசக்தி நம் முன்னே தோன்றுவாள். மேலும் கவசமாகிய நியாசங்கள் (நெஞ்சு, தலை, கண், கை முதலிய உறுப்புக்களைச் சிவனது உடைமையாக நினைத்துத் தொடுதல்) செய்யும் முறையையும், முத்திரைகளையும் அறிந்து யோகத்தைச் செய்யலாம்.

அட்டாங்க யோகத்திற்கு இயமமும், நியமமும் அவசியம். அதாவது தீய பழக்கங்களை விட்டு விட்டு ஒழுக்க நெறியில் நிற்க வேண்டும்.

இயமம் – தீது அகற்றல், நியமம் – ஒழுக்க நெறியில் நிற்பது,  உத்தரம் – பின் நிகழ்வது,  பூருவம் – முன்பு

மரண நேரத்தில் பயமில்லாமல் இருக்கலாம்

எய்திய நாளில் இளமை கழியாமை
எய்திய நாளில் இசையினால் ஏத்துமின்
எய்திய நாளில் எறிவ து அறியாமல்
எய்திய நாளில் இருந்துகண் டேனே. – (திருமந்திரம் – 186)

விளக்கம்:
நம்முடைய இறுதி நாள் என்பது நம் முதுமைக் காலத்தில் தான் வரும் என்று எந்தக் கணக்கும் கிடையாது. மரணம் எந்த நேரத்திலும் வரலாம், அப்போது நம் இளமை இன்னும் மிச்சம் இருக்கலாம். அதனால் நாம் நம் இளமைக் காலத்தில் இருந்தே அந்த ஈசனைப் புகழ்ந்து பாடி வணங்குவோம். அந்நேரத்தில் மரணம் வந்தால் கூட, நம்மை இந்த உலகத்தில் இருந்து யாரோ தூக்கி எறிவது போன்ற உணர்வு தோன்றாது. மரண நேரத்தில் என்ன நடக்கிறது என்பதை பயமில்லாமல் பார்க்கலாம்.