குருவே சரணம்

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே.  – (திருமந்திரம் –139)

விளக்கம்:
குருவை நேரில் பார்த்தால் நமக்கு மனத்தில் தெளிவு உண்டாகும். குருவின் பெயரை உச்சரித்தாலும் தெளிவு உண்டாகும். குரு சொல்லும் வார்த்தைகள் தெளிவு தரக்கூடியவை. குருவின் உருவத்தை நினைத்துப் பார்த்தால் கூட தெளிவு கிடைக்கும்.


சிவலோகம் அவன் திருவடியில்

திருவடி யேசிவ மாவது தேரில்
திருவடி யேசிவ லோகஞ்சிந் திக்கில்
திருவடி யேசெல் கதியது செப்பில்
திருவடி யேதஞ்சம் உள்தெளி வார்க்கே.  – (திருமந்திரம் –138)

விளக்கம்:
ஆராய்ந்து பார்த்தால், சிவனின் திருவடியே சிவம் என்பது நமக்குப் புரியும். இன்னும் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் திருவடியே சிவலோகம் என்பதும் புரியும். சொல்லப் போனால் திருவடியே மோட்சத்திற்குரிய வழியாகும். உள்ளம் தெளிந்தவர்க்கு சிவனின் திருவடியே புகல் இடம் ஆகும்.

(தேரில் – ஆராய்ந்தால்)


திருவடியை உறுதியாகப் பற்றுவோம்

அடங்குபேர் அண்டத்து அணுஅண்டம் சென்றங்கு
இடங்கொண்டது இல்லை இதுவன்றி வேறுண்டோ
கடந்தொறும் நின்ற உயிர்க்கரை காணில்
திடம்பெற நின்றான் திருவடி தானே. – (திருமந்திரம் – 137)

விளக்கம்:
சிறு அணுவாகிய நாம், படைப்பு அனைத்தையும் தன்னுள்ளே கொண்டுள்ள அந்த சிவபெருமானின் திருவடியைக் கண்டாலும், அங்கே நிலை கொண்டு தங்குவதில்லை. நமக்கு அவன் திருவடியை விட்டால் வேறு போக்கிடம் ஏது?   தன் உடலில் நிற்கும் உயிர் கடைசியாகச் சேரும் இடம் எதுவென்று உணர்ந்து கொள்பவர்கள், இறைவனின் திருவடியை  உறுதியாகப் பற்றிக் கொள்வார்கள்.

https://www.youtube.com/watch?v=xL9omtbwqcw


நாமெல்லாம் உப்பு பொம்மைகள்

அப்பினில் கூர்மை ஆதித்தன் வெம்மையால்
உப்பெனப் பேர்ப்பெற்று உருச்செய்த அவ்வுரு
அப்பினிற் கூடிய தொன்றாகு மாறுபோல்
செப்பினிற் சீவன் சிவத்துள் அடங்குமே. – (திருமந்திரம் – 136)

விளக்கம்:
கடல் நீரில் உள்ள உப்புத் தன்மை சூரியனின் வெப்பத்தினால் உப்பு என்கிற பெயருள்ள உருவம் பெறுகிறது. அந்த உப்பு மறுபடியும் நீரில் கலக்கும் போது நீரோடு நீராக மாறி விடும். அது போலவே நம்முடைய சீவனும் சிவத்தினில் இருந்து உருவம் பெற்று வந்துள்ளது. நமது ஆயுள் முடியும் போது, நாம் மறுபடியும் சிவத்தினுள் கலந்து விடுவோம் .


நமக்கு வேறு போக்கிடம் கிடையாது

சத்தமுதல் ஐந்துந் தன்வழித் தான்சாரில்
சித்துக்குச் சித்தன்றி சேர்விடம் வேறுண்டோ
சுத்த வெளியிற் சுடறிற் சுடர்சேரும்
அத்தம் இதுகுறித் தாண்டுகொள் அப்பிலே.   – (திருமந்திரம் – 135)

விளக்கம்:
பஞ்ச பூதங்களால் ஆன நம்முடைய உடல், ஐந்து தன்மாத்திரைகளான சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகியவற்றைச்  சார்ந்திருக்கின்றன. ஆனால் நமது ஆன்மாவிற்கு பரமாத்மாவான சிவனை விட்டால் சேர்விடம் வேறு ஏது? சுத்தமான பரவெளியில் நம்முடைய ஆன்மா என்னும் சுடர், பேரொளியாகிய அந்த சிவனைச் சேரும். இதைப் புரிந்து கொண்டு, அந்த சிவனது அருட்கடலில் நாம் கலந்திருப்போம்.

நம்முடைய உடல் தன்னுடைய மூலமான ஐம்பூதங்களைச் சார்ந்திருக்கிறது. அது போல நம்முடைய ஆன்மா, தன்னுடைய மூலமான பரமாத்மாவை சார்கிறது.


உபதேசம் பெற தெளிந்த மனம் அவசியம்

புரைஅற்ற பாலினுள் நெய்கலந் தாற்போல்
திரைஅற்ற சிந்தைநல் ஆரியன் செப்பும்
உரையற்று உணர்வோர் உடம்பிங்கு ஒழிந்தால்
கரையற்ற சோதி கலந்தசத் தாமே.   – (திருமந்திரம் – 134)

விளக்கம்:
குற்றம் இல்லாத பாலில் நெய் கலந்திருப்பதைப் போல, அலையற்ற மனத்தில், குருவாகிய ஆசிரியர் சொல்லும் உபதேசம் பேதமில்லாமல் நிறைந்து நிற்கும். பேச்சற்ற மவுன நிலையில் நாம் அதை உணரலாம். உபதேசப் பொருளை உணர்ந்தோர்க்கு உடம்பு இங்கு அழிந்தாலும், கரையற்ற சோதியாம் மெய்ப்பொருளில் கலந்து விடலாம்.

குழப்பம் இல்லாத தெளிந்த மனத்தில் குருவின் உபதேசம் நன்றாக பதியும். உபதேசப் பொருளை நன்கு உணர்ந்தவர்கள் தன் வாழ்நாள் இறுதியில் மெய்ப்பொருளாம் சிவசோதியோடு கலந்து விடுவார்கள்.

(புரை – குற்றம்,   திரை – அலை,   ஆரியன் – குரு, ஆசிரியர்,    உரையற்று – பேச்சற்று,   சத்து – மெய்ப்பொருள்)


ஒருமையுள் ஆமை போல!

பெருமை சிறுமை அறிந்தெம் பிரான்போல்
அருமை எளிமை அறிந்தறி வார்ஆர்
ஒருமையுள் ஆமைபோல் உள்ஐந்து அடக்கி
இருமையுங் கேட்டிருந் தார்புரை அற்றே. – (திருமந்திரம் – 133)

விளக்கம்:
சிவபெருமான் பக்தர்களாகிய நம் பெருமைகளையும், சிறுமைகளையும் அறிந்து கொள்வதில் வல்லவர். பெருமை உடையர்க்கு எளிதாகக் காட்சி தருகிறார், சிறுமை உடையவர்க்கு அரிதாகக் காட்சி தருகிறார். உடல் உறுப்புக்களை  தனது ஓட்டிற்குள் அடக்கிக் கொள்ளும் ஆமை போல, ஐந்து புலன்களையும் உள்ளடக்கி இருப்பவர்கள், இந்த உலகிலும், மறு உலகிலும் இன்பம் அடைந்து, குற்றமற்றவர்களாக இருப்பார்கள்.


சிவயோகியர் அடையும் பேறு

பெற்றார் உலகிற் பிரியாப் பெருநெறி
பெற்றார் உலகிற் பிறவாப் பெரும்பயன்
பெற்றார் அம்மன்றில் பிரியாப் பெரும்பேறு
பெற்றார் உலகுடன் பேசாப் பெருமையே. – (திருமந்திரம் – 132)

விளக்கம்:
சிவயோகியர் சிவ உலகை விட்டு நீங்காத மன நிலையை அடைவார்கள். அதனால் அவர்களுக்கு பிறவாமை என்கிற பெரும் பயன் வந்து சேரும். அந்த யோகியர் சிவபெருமான் திருக்கூத்தாடும் அம்பலத்தை விட்டு பிரியாத பெரும்பேறு அடைவார்கள். சிவ உலகில் திளைத்திருக்கும் அவர்கள் உலக விஷயங்களைப் பற்றி பேச மாட்டார்கள்.


மாணிக்கத்துள்ளே மரகத சோதி

மாணிக்கத் துள்ளே மரகதச் சோதியாய்
மாணிக்கத் துள்ளே மரகத மாடமாய்
ஆணிப்பொன் மன்றில் ஆடுந் திருக்கூத்தைப்
பேணித் தொழுதென்ன பேறுபெற் றாரே. – (திருமந்திரம் – 131)

விளக்கம்:
சுத்தமான தங்கத்தினால் ஆன அம்பலத்தில் உமையம்மையுடன் சிவபெருமான் ஆடுகிற கூத்து, மாணிக்கம் போன்ற சிவந்த ஒளியினுள் மரகதம் போன்ற பச்சை ஒளி கலந்தது போலவும், மாணிக்க மாளிகைக்குள்ளே மரகத மாடம் காணப்படுவது போலவும் இருக்கிறது. அப்படிப்பட்ட திருக்கூத்தைக் கண்டு வணங்கும் வரத்தை  பெற்றவர்கள் சிவ யோகியர்.

சிவனின் நிறம் செம்மையானதாகவும், சக்தியின் நிறம் பசுமையாகவும் இருப்பதால், மாணிக்கத்துள்ளே மரகத சோதியாய் என திருமூலர் பாடியுள்ளார்.


சிவனைக் காண விஷேச ஆன்ம அறிவு தேவையில்லை!

எவ்வாறு காண்பான் அறிவு தனக்கெல்லை
அவ்வாறு அருட்செய்வன் ஆதிஅரன் தானும்
ஒவ்வாத மன்றுள் உமைகாண ஆடிடும்
செவ்வானிற் செய்ய செழுஞ்சுடர் மாணிக்கமே. – (திருமந்திரம் – 130)

விளக்கம்:
பக்தர்கள் ஒவ்வொருவரும், தமது அறிவின் எல்லைக்கேற்ப தனக்குத் தெரிந்த முறையில் சிவபெருமானை அணுகுகிறார்கள். அந்தச் சிவபெருமானும் பக்தர்கள் தன்னை எப்படி அணுகுகிறார்களோ, அந்த வழியிலேயே அவர்களுக்கு அருள் செய்கிறான். அந்தப் பழமையான சிவன் ஒப்பில்லாத சபையிலே உமையம்மை காண நடனம் செய்பவன். அந்த நடனத்தின் போது, சிவபெருமான் செவ்வானத்தை விடச் சிவந்த ஒளி வீசும் மாணிக்கமாகத் திகழ்கிறான்.

சிவனை அணுகுவதற்கென்று விஷேசமான அறிவெல்லாம் தேவையில்லை. அவரவர் அறிவின் எல்லை அறிந்து, சிவன் அதற்கேற்றபடி தன்னைக் காட்டிக் கொள்வான்.