திருமந்திரம் சிவபெருமானால் உபதேசிக்கப்பட்டது

தத்துவ ஞானம் உரைத்தது தாழ்வரை
முத்திக்கு இருந்த முனிவரும் தேவரும்
இத்துடன் வேறா இருந்து துதிசெயும்
பத்திமை யால்இப் பயனறி யாரே.   –  (திருமந்திரம் – 98)

விளக்கம்:
இந்த திருமந்திரத்தில் உள்ள தத்துவ ஞானங்கள் எல்லாம் சிவபெருமானால் கயிலாய மலையடிவாரத்தில் உபதேசிக்கப்பட்டவை. இதை உணர்ந்து கொள்ளாமல், இந்த திருமந்திரத்தை ஓதுபவர்கள்  (அவர்கள் முக்தி வேண்டி தவம் செய்யும் முனிவரானாலும், தேவரானாலும்)  இந்த நூலைப் படிப்பதனால் கிடைக்கக் கூடிய முழு பலனைப் பெறமாட்டார்கள்.

திருமந்திரம் படிப்பவர்கள், இதில் உள்ள தத்துவ ஞானங்கள் சிவபெருமானால் உபதேசிக்கப்பட்டவை என்பதை உணர்ந்து, பக்தியோடு படிக்க வேண்டும்.

(தாழ்வரை – மலை அடிவாரம்,   பத்திமை – பக்தி உடைமை)

 


திருமந்திரம் பாடுவதால் ஈசனை உணரலாம்

மன்னிய வாய்மொழி யாலும் மதித்தவர்
இன்னிசை உள்ளே எழுகின்ற ஈசனைப்
பின்னை உலகம் படைத்த பிரமனும்
உன்னும் அவனை உணரலு மாமே.   – (திருமந்திரம் – 97)

விளக்கம்:
தன்னையே நினைத்து பாடுபவரின் இன்னிசையின் உள்ளே ஈசன் எழுந்தருள்வான். பின்னால் மீண்டும் உலகைப் படைத்த பிரமனும் சிவபெருமானின் திருவடி பெறவே தியானித்து முயல்கிறான். இந்த திருமந்திரம் என்னும் ஆகமத்தைப் பாடுவதால் அந்த ஈசனை உணரலாம்.

(மன்னிய – நிலை பெற்ற, உன்னும் – முயற்சி)


அண்ணலின் பெருமை!

ஆரறி வார் எங்கள் அண்ணல் பெருமையை
யாரறி வார்இந்த அகலமும் நீளமும்
பேரறி யாத பெருஞ்சுடர் ஒன்றதின்
வேரறி யாமை விளம்புகின் றேனே.   – (திருமந்திரம் – 95)

விளக்கம்:
யாருக்குத் தெரியும் எங்கள் சிவபெருமானின் பெருமை முழுவதும் ? அந்த பெருமானின் பரப்பை அறிந்தவர் யாரும் இல்லை! தனக்கென பெயரும் உருவமும் இல்லாத பெருஞ்சுடர் எங்கள் சிவபெருமான். அந்த பெருஞ்சுடரின் வேர் யாராலும் அறிய முடியாதது.


இயல்பான சோதி வடிவம்

பிதற்றுகின் றேனென்றும் பேர்நந்தி தன்னை
இயற்றுவன் நெஞ்சத்து இரவும் பகலும்
முயற்றுவன் ஓங்கொளி வண்ணன்எம் மானை
இயற்றிகழ் சோதி இறைவனு மாமே.  – (திருமந்திரம் – 94)

விளக்கம்:
நான் தினமும் நந்தி என்னும் பெயருடைய இறைவனின் புகழை சொல்லிக் கொண்டே இருக்கிறேன். இரவும் பகலும் அப்பெருமானை என் மனத்தில் வைத்து தியானிக்கிறேன். உயர்ந்த ஒளி வடிவமான அந்த இறைவனை அடைய தொடர்ந்து முயல்கிறேன். சிவபெருமானின் அந்த சோதி வடிவம் இயல்பாகவே திகழ்வதாகும்.

(ஓங்கொளி – ஓங்கு + ஒளி,  இயற்றிகழ் – இயல் + திகழ்)


சூரியகலை மற்றும் சந்திரகலை

இருக்கில் இருக்கும் எண்ணிலி கோடி
அருக்கின்ற மூலத்துள் அங்கே இருக்கும்
அருக்கனும் சோமனும் ஆரழல் வீச
உருக்கிய ரோமம் ஒளிவிடுந் தானே.  – (திருமந்திரம் – 93)

விளக்கம்:
வேதத்தில் எண்ணில்லாத மந்திரங்கள் உள்ளன.  சூரியகலை மற்றும் சந்திரகலை ஆகியவற்றை சரியான முறையில் கட்டுப்படுத்தி பயிற்சி செய்யும் போது, மூலாதாரத்தில் உள்ள குண்டலினி என்னும் அரிய நெருப்பு மூண்டு வளரும். அப்போது வேதத்தில் உள்ள அந்த எண்ணில்லாத மந்திரங்கள் வெளிப்படும். அந்நிலையில் உச்சியில் பொன்னொளி போன்ற கிரணங்கள் ஒளி வீசுவதை உணரலாம்.

(இருக்கு – வேதம்,  அருக்கின்ற – சுருங்கி இருக்கின்ற,  அருக்கன் – சூரியன்,  சோமன் – சந்திரன்)


எல்லாம் நந்தி அருளாலே!

நந்தி அருளாலே மூலனை நாடிப்பின்
நந்தி அருளாலே சதாசிவன் ஆயினேன்
நந்தி அருளால் மெய்ஞானத்துள் நண்ணினேன்
நந்தி அருளாலே நானிருந் தேனே.  – (திருமந்திரம் – 92)

விளக்கம்:
நந்தி அருளாலே மூலனின் உடலைப் பற்றி நின்றேன். நந்தி அருளாலே ஆகமத்தை பாடும் நிலையை அடைந்தேன். நந்தி அருளாலே மெய்ஞ்ஞானம் கிடைக்கப் பெற்றேன். நந்தி அருளாலே மெஞ்ஞானத்தில் நிலையாக இருந்தேனே.


திருமந்திரம் – சிவபெருமானின் உபதேசம்

விளக்கிப் பரமாகும் மெய்ஞ்ஞானச் சோதி
அளப்பில் பெருமையன் ஆனந்த நந்தி
துளக்கறும் ஆனந்தக் கூத்தன்சொற் போந்து
வளப்பில் கயிலை வழியில்வந் தேனே.   – (திருமந்திரம் – 91)

விளக்கம்:
இதற்கு முந்தைய பாடலில் திருமூலர், திருமந்திரத்தில் விளக்கப்பட்ட பொருட்களைப் பற்றிச் சொல்லியிருந்தார். இந்தப் பாடலில் அவர் சொல்வது “இந்தத் திருமந்திர நூலில் உள்ள பொருளெல்லாம் மேலான மெய்ஞ்ஞானச் சோதியாகிய சிவபெருமானின் உபதேசங்களாகும். அந்த ஆனந்த நந்தி பெருமான் அளவில்லாத பெருமைகளை உடையவன். தன் நிலையில் அசையாதிருக்கும் அந்த ஆனந்தக் கூத்தனின் ஆணையின்படி, அந்த சிறந்த திருக்கயிலாய மலையில் இருந்து நான் இங்கு வந்தேன்”.

(பரம் – மேலான,  அளப்பில் – அளவற்ற, துளக்கறும் – அசைவு இல்லாத)


திருமந்திரத்தில் விளக்கப்படும் பொருட்கள்

ஞேயத்தை ஞானத்தை ஞாதுரு வத்தினை
மாயத்தை மாமாயை தன்னில் வரும்பரை
ஆயத்தை யச்சிவன் தன்னை யாகோசர
வீயத்தை முற்றும் விளக்கியிட் டேனே.  – (திருமந்திரம் – 90)

விளக்கம்:
திருமந்திரம் என்னும் இந்நூலில் விளக்கப்படுபவை – அறியப்படும் பொருள் (பரம்பொருள்), அறிந்து கொள்ள உதவும் ஞானம், அறிந்து கொள்பவனின் தன்மை (ஜீவாத்மா), மாயை, மாயையில் விளங்கும் சக்திகளின் கூட்டம், அந்த சக்திகளில் விளங்கும் சிவன், வாக்கு மனம் ஆகியவற்றிற்கு எட்டாத அந்த சிவபெருமானே அனைத்துக்கும் வித்தாக இருக்கும் தன்மை ஆகியவையாகும்.

(ஞேயம் – அறியப்படும் பொருள், ஞாதுருவம் – அறிபவன்,  பரை ஆயம் – சக்திகளின் கூட்டம்,  அகோசர வீயம் – புலன்களுக்கு எட்டாத விதை)


தற்பரனின் கற்பனை இந்த உலகம்

பெற்றமும் மானும் மழுவும் பிரிவற்ற
தற்பரன் கற்பனை யாகும் சராசரத்து
அற்றமும் நல்கி அடியேன் சிரத்தினில்
நற்பத முமளித் தானெங்கள் நந்தியே.  – (திருமந்திரம் – 89)

காளை, மான், மழு ஆகியவற்றை தன்னுடன் எப்போதும் கொண்டிருக்கும் சிவபெருமானின் கற்பனையாக அமைந்தது இந்த உலகம். அந்த சிவபெருமான் எனக்கு இந்த கற்பனையான உலகத்தின் மீதுள்ள பற்றினை நீக்கி, என் தலையின் மீது தன் திருவடியை வைத்து அருளினான்.

(பெற்றம் – காளை,  மழு – சிவனின் கையில் உள்ள ஆயுதம், தற்பரன் – பரம்பொருள், சராசரம் – பிரபஞ்சம், அற்றம் – நீக்கம்)

கையில் மானும் மழுவும் கொண்டுள்ள சிவன்.

மான்_மழு


பொய் சொன்ன பிரமன்

அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்
படிகண் டிலர்மீண்டும் பார்மிசைக் கூடி
அடிகண் டிலேன் என்று அச்சுதன் சொல்ல
முடிகண்டேன் என்று அயன் பொய்மொழிந் தானே.  – (திருமந்திரம் – 88)

பிரமனும் திருமாலும் சிவபெருமானின் திருவடியையும் திருமுடியையும் காண முயன்றனர். சிவனின் தன்மையை அவர்களால் அறிய முடியவில்லை. வானுலகில் இருவரும் மீண்டும் சந்தித்தனர், திருமால் ‘என்னால் சிவபெருமானின் திருவடியைக் காண முடியவில்லை’ என்று சொன்னார்.  பிரமன் ‘நான் சிவபெருமானின் திருமுடியைக் கண்டேன்’ என்று பொய் சொன்னார்.

(படி – தன்மை,   பார் – பூமி,   மிசை – வானம்)