தமிழ்ச் சாத்திரம்

அங்கிமி காமைவைத் தானுடல் வைத்தான்
எங்குமி காமைவைத் தான்உலகு ஏழையும்
தங்கிமி காமைவைத் தான் தமிழ்ச் சாத்திரம்
பொங்கிமி காமைவைத் தான்பொருள் தானுமே. – (திருமந்திரம் – 87)

இறைவன் இந்த உடலில் அக்னியை அளவோடு வைத்தான். கடலினுள் அக்னியை வைத்து, கடல் நீர் பொங்கி உலகை அழித்து விடாமல் காத்தான். மூவாயிரம் பாடல்களுக்குள் இந்த திருமந்திரம் என்னும் தமிழ்ச் சாத்திரத்தை வைத்தான். எல்லா பொருளும் இந்த சாத்திரத்தில் அடங்கும்படிச் செய்தான்.


மந்திரமாலை!

பிறப்பிலி நாதனைப் பேர்நந்தி தன்னைச்
சிறப்பொடு வானவர் சென்றுகை கூப்பி
மறப்பிலர் நெஞ்சினுள் மந்திர மாலை
உறைப்பொடுங் கூடிநின்று ஓதலு மாமே. – (திருமந்திரம் – 86

இந்த உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் பிறப்பு என்று உண்டு, பிறந்து விட்டால் இறப்பு என்பதும் ஒரு நாள் உறுதி. சிவபெருமான் இந்த பிறப்பு, இறப்புக்கெல்லாம் அப்பாற்பட்டவன்.  நந்தி என்ற திருப்பெயர் கொண்ட அந்த சிவபெருமானை வானுலகில் உள்ள தேவர்களெல்லாம் வணங்கி, இந்த மந்திரமாலையை மனப்பாடமாகச் சொல்வார்கள். நீங்களும் கூடியிருந்து திருமந்திரம் என்று அழைக்கப்படும் இந்த மந்திரமாலையை அதன் சுவையறிந்து படித்துப் பயன் பெறுங்கள்.


யான் பெற்ற இன்பம்!

யான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே. – (திருமந்திரம் – 85)

திருமூலர் சொல்கிறார் “ஆன்மிக அனுபவத்தில் நான் பெற்ற இன்பமெல்லாம் இந்த உலகத்தில் உள்ள எல்லா மக்களும் பெறட்டும். விண்ணைத் தாங்கி நிற்கிற வேதப்பொருளான சிவபெருமானைப் பற்றிச் சொல்கிறேன் கேளுங்கள். அந்த சிவபெருமான் நம் உடலைத் தாங்கி நிற்கிறார், உணர்வுமிக்க மந்திர வடிவில். நாம் அதை உணர முயலும் போது அவர் வெளிப்பட்டு அருள்வார் ”.

விண்ணைத் தாங்கி நிற்பதும் சிவன்தான், இந்த உடலைத் தாங்கி நிற்பதும்சிவன் தான்.


வேதத்தின் சொல்லும் பொருளும்

சித்தத்தின் உள்ளே சிறக்கின்ற நூல்களில்
உத்தம மாகவே ஓதிய வேதத்தின்
ஒத்த உடலையும் உள்நின்ற உற்பத்தி
அத்தன் எனக்குஇங்கு அருளால் அளித்ததே. – (திருமந்திரம் – 84)

திருமூலர் சொல்கிறார் “நம் உள்ளத்தில் சிறந்து விளங்கும் நூல்களில் மிகச் சிறந்தது சிவபெருமான் அருளிய வேதமாகும். அந்த சிவபெருமான், வேதத்தின் உடலாக இருக்கும் சொற்களையும், அந்த சொற்களுக்குள் உற்பத்தியாகும் பொருளையும் எனக்கு உணர்த்தி அருள் செய்தான்”.


சிவமுனி!

செல்கின்ற வாறறி சிவமுனி சித்தசன்
வெல்கின்ற ஞானத்து மிக்கோர் முனிவராய்ப்
பல்கின்ற தேவர் அசுரர்நரர் தம்பால்
ஒல்கின்ற வான்வழி யூடுவந் தேனே. – (திருமந்திரம் – 83)

சிவமுனியாகிய நான் யோகவழியில் செல்கின்ற போது பார்த்த காட்சி இது –  மிகுதியான எண்ணிக்கையில்  தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள் எல்லாம் காமனை வென்ற ஞானம் மிக்க முனிவர்களாக மாறினார்கள். அவர்களை எல்லாம் வானுலகம் நெருங்கி வருவதைப் பார்த்து வந்தேன். அதாவது அந்த யோகநிலையில் இருந்து மீண்டு வந்தேன்.

இவ்வாறு திருமூலர் சொல்கிறார்.


ஞானத் தலைவி

ஞானத் தலைவிதன் நந்தி நகர்புக்கு
ஊனமில் ஒன்பது கோடி யுகந்தனுள்
ஞானப்பா லாட்டி நாதனை அர்ச்சித்து
நானும் இருந்தேன்நற் போதியின் கீழே. – (திருமந்திரம் – 82)

ஞானத் தலைவியாம் சக்தியுடன் சிவபெருமான் வசிக்கும் ஊருக்குச் சென்றேன். அங்கே ஒன்பது கோடி யுகங்கள் தீமை எதுவும் ஏற்படாத நிலையில் இருந்தேன். ஞானப் பாலூட்டும் அந்த சிவபெருமானை வணங்கி அந்த அறிவு நிழலில் நான் தங்கி இருந்தேன்.

இவ்வாறாக திருமூலர் தன்னைப் பற்றிச் சொல்கிறார்.


என்னை நன்றாக இறைவன் படைத்தனன்

பின்னைநின் றென்னே பிறவி பெறுவது
முன்னைநன் றாக முயல்தவம் செய்திலர்
என்னைநன் றாக இறைவன் படைத்தனன்
தன்னைநன் றாகத் தமிழ்செய்யு மாறே. . – (திருமந்திரம் – 81)

திருமூலர் நம்மைக் கேட்கிறார் “முந்தைய பிறவிகளில் நன்றாக முயன்று தவம் செய்திருந்தால் இப்படி பிறவிகள் எடுத்திருக்க வேண்டியதில்லையே?” தன்னுடைய பிறவி பற்றிச் சொல்கிறார் “என்னை நன்றாக இறைவன் படைத்திருக்கிறான், தான் அருளிய ஆகமங்களை தமிழில் திருமந்திரமாகத் தரும் அளவில். என் பிறவி வீண் போகவில்லை”.


நந்தியின் திருவடி நிழல்

இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி
இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே
இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே
இருந்தேன் என்நந்தி இணையடிக் கீழே. – (திருமந்திரம் – 80)

காயம் என்பதற்கு ஒரே நிலையில் இருத்தல் என்றும் ஒரு பொருள் உண்டு, அது இங்கே பொருத்தமாக அமைகிறது.

திருமூலர் சொல்கிறார் “நான் இந்த யோக  நிலையில் எண்ணில்லாத கோடி வருடங்கள் இருக்கிறேன். இரவும் பகலும் இல்லாத பிரகாச வெளியிலே இருக்கிறேன். தேவர்கள் எல்லாம் துதிக்கும் இடத்தில் இருக்கிறேன். என் நந்தியம்பெருமானின் திருவடி நிழலில் எப்போதும் இருக்கிறேன்.”


திருவாவடுதுறை

சேர்ந்திருந் தேன்சிவ மங்கைதன் பங்கனைச்
சேர்ந்திருந் தேன்சிவன் ஆவடு தண்துறை
சேர்ந்திருந் தேன்சிவ போதியின் நீழலில்
சேர்ந்திருந் தேன்சிவன் நாமங்கள் ஓதியே. – (திருமந்திரம் – 79)

சக்தியை தனதொரு பாகமாகக் கொண்டுள்ள சிவபெருமானைச் சேர்ந்து வழிபட்டிருந்தேன். சிவபெருமானை நான் சேர்ந்த இடம் திருவாவடுதுறை. அங்கே சிவ அறிவு எனும் நிழலில் தங்கியிருந்தேன், சிவ நாமங்கள் ஓதியபடியே!


திருமூலர் தென்னகத்துக்குக் வந்த காரணம்

மாலாங்க னேஇங்கு யான்வந்த காரணம்
நீலாங்க மேனியள் நேரிழை யாளொடு
மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின்
சீலாங்க வேதத்தைச் செப்பவந் தேனே. – (திருமந்திரம் – 77)

திருமூலர் தன் மாணவர்களில் ஒருவரான மாலங்கனைப் பார்த்து சொல்கிறார் – “மாலாங்கனே! நான் இந்த தென்திசைக்கு வந்த காரணம், நீல நிற மேனியும் சிறந்த அணிகளையும் உடைய உமையம்மைக்கு சிவபெருமான் முதன்முதலாக சொன்ன ஒழுக்கத்தை போதிக்கும் சிவாகமத்தை எடுத்து சொல்ல வந்தேன்”.