கருத்து ஊன்றி தியானம் செய்வோம்

காக்கலு மாகுங் கரணங்கள் நான்கையும்
காக்கலு மாகுங் கலைபதி னாறையும்
காக்கலு மாகுங் கலந்தநல் வாயுவும்
காக்கலு மாகுங் கருத்துற நில்லே – 713

விளக்கம்:
நாம் யோக வழியில் கருத்து ஊன்றி நிற்போம். கருத்துடன் தொடர்ந்து தியானம் செய்து வந்தால்,  அந்தக் கரணங்களான மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகியன உலக விஷயங்களில் செல்லாமல் அருள் வழியிலே நிற்கும்படியாக சிவன் அருள்வான். சித்தம் அருள் வழியில் நின்றால், பிராணாயாமத்தில் நாம் சுவாசிக்கும் மூச்சுக்காற்று அருள் வெளியில் கலப்பதை உணரலாம். அந்நிலையிலே சந்திரகலைகள் பதினாறும் பரந்து நின்று நம்மைக் காக்கும்.


அன்பு ஒன்றே சிவனைக் காணும் வழி

காதல் வழிசெய்த கண்ணுதல் அண்ணலைக்
காதல் வழிசெய்து கண்ணுற நோக்கிடிற்
காதல் வழிசெய்து கங்கை வழிதரும்
காதல் வழிசெய்து காக்கலு மாமே – 712

விளக்கம்:
நம் அண்ணலான நெற்றிக்கண் கொண்ட சிவபெருமானைக் கண்டடையும் வழியை அப்பெருமானே நமக்கு வகுத்துக் கொடுத்துள்ளான். அன்பு என்பதே அவ்வழி! அனைத்தையும் நாம் அன்பெனும் கண்ணோட்டத்திலே காண்போம். அப்படி அன்பு வழியில் நின்று தொடர்ந்து தியானம் செய்து வந்தால், சிவ அருள் வெள்ளமெனப் பெருகி வரும். அவ்வருள் நம்மை என்றென்றும் காத்து நிற்கும்.