உடலில் வலு இருக்கும் போதே யோகம் பயில்வோம்

முடிந்தது அறியார் முயல்கின்ற மூர்க்கர்
இடிஞ்சில் இருக்க விளக்குஎரி கொண்டு
கடிந்துஅனல் மூளக் கதுவவல் லார்க்கு
நடந்திடும் பாரினில் நண்ணலும் ஆமே – 749

விளக்கம்:
யோக வழியில் நிற்பவர்கள், தமது கவனத்தைக் குண்டலினியில் நிறுத்திப் பயிற்சி செய்ய வேண்டும். அகலில் எண்ணெய் இருக்கும் போதே திரியைத் தூண்டி விளக்கை எரிய வைப்பதைப் போல, நமது உடலில் வலு இருக்கும் போதே மூலாதாரம் என்னும் அக்கினியைத் தூண்டி விட்டு குண்டலினி சகசிரதளத்தை அடையச் செய்யவேண்டும். அப்படிச் செய்ய வல்லவர்கள் காலச்சக்கரத்தின் சுழற்சியில் சிக்காமல், நிலைபெற்று வாழ்வார்கள்.

முடிந்தது அறியார் – தமது கவனத்தைக் குண்டலினியின் இயக்கத்தோடு முடிச்சு போட்டவாறு வைத்திருக்கத் தெரியாதவர்.


ஆலம் கடந்த சிவபெருமானை நினைப்போம்

நாலும் கடந்தது நால்வரும் நால்அஞ்சு
பாலம் கடந்தது பத்துப்பதின் அஞ்சு
கோலம் கடந்த குணத்துஆண்டு மூவிரண்டு
ஆலம் கடந்தது ஒன்றுஆர் ஆரறிவாரே – 745

விளக்கம்:
இதுவும் காலச்சக்கரம் பற்றிய பாடல். காலம் ஓடிக் கொண்டே இருக்கிறது, நாம் அதை உணர்ந்து யோக வழியில் செல்லாமல், இன்னும் நிறைய காலம் மீதம் இருப்பதாக நினைத்து காலம் கடத்துகிறோம்.

நான்கு வயதைக் கடந்தோம், அதைச் சிறு வயது என்று விட்டு விடலாம். பாலன் எனச் சொல்லப்படும் பத்துப் பதினைந்து வயதைக் கடந்தோம், அப்போதும் நாம் யோகத்தைத் தொடங்கவில்லை. அழகிய கோலம் கொண்ட இளமைக் காலத்தையும் கடந்து விட்டோம், இன்னும் நாம் ஆலம் கடந்த அந்த சிவபெருமானை உணர்ந்து அறியவில்லை.


நாள் தவறாமல் யோகம் செய்வோம்

மனைபுகு வீரும் அகத்திடை நாடி
என இருபத்தஞ்சும் ஈராறு அதனால்
தனை அறிந்து ஏறட்டு தற்குறி ஆறு
வினைஅறி ஆறும் விளங்கிய நாலே – 744

விளக்கம்:
நம் மனம் புற உலகில் அலைவதை நிறுத்தி, அகத்தை நாடி, மனத்தை உள்ளே செலுத்தி யோகப்பயிற்சி செய்வோம். வருடத்தின் பன்னிரெண்டு மாதங்களும், மாதத்தின் 30 நாட்களும், அதாவது நாள் தவறாமல் யோகப்பயிற்சி செய்து வந்தால், தன்னை அறியலாம். தன்னை அறிவதால் ஆறு ஆதாரங்களிலும் யோகநிலையில் பொருந்தி இருந்து சிவம், சக்தி, நாதம், விந்து ஆகியவற்றைப் பற்றி விளங்கிக் கொள்ளலாம்.

இருபத்தஞ்சு – இரு + பத்தஞ்சு (முப்பது நாட்கள் – 1 மாதம்),  ஈராறு – ஈர் + ஆறு (பன்னிரெண்டு மாதங்கள்), ஏற அட்டுதல் – கூடச் சேர்த்தல், தற்குறி ஆறு – ஆறு ஆதாரங்கள்


பயிற்சி தொடங்க ஆகாத நாட்கள்

திருந்து தினம் அத் தினத்தினொடு நின்று
இருந்து அறி நாள் ஒன்று இரண்டு எட்டு மூன்று
பொருந்திய நாளொடு புக்கு அறிந்து ஓங்கி
வருந்துதல் இன்றி மனை புகல் ஆமே – 743

விளக்கம்:
யோகப்பயிற்சி தொடங்க கீழ்கண்ட நாட்களைத் தவிர்த்தல் நலம்.

பிறந்த நட்சத்திரம் வரும் நாள் மற்றும் பிறந்த நட்சத்திரத்தில் இருந்து ஒன்று, இரண்டு, மூன்று மற்றும் எட்டாவது நட்சத்திரம் வரும் நாட்கள். மற்ற நாட்களில் இருந்து சிறந்த ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து யோகப்பயிற்சியைத் தொடங்கலாம்.


வயது என்பதே இல்லாமல் இருக்கலாம்

அழிகின்ற ஆண்டு அவை ஐயைஞ்சு மூன்று
மொழிகின்ற முப்பத்து மூன்றுஎன்ப தாகும்
கழிகின்ற கால்அறு பத்திரண்டு என்பது
எழுகின்ற ஈரைம்பது எண்அற்று இருந்தே – 742

விளக்கம்:
நம்முடைய வாழ்நாளை நான்கு பகுதிகளாகப் பிரிக்கலாம். இருபத்து எட்டு வயது வரைக்கும் முதல் பகுதி, முப்பத்து மூன்று வயது வரைக்கும் இரண்டாம் பகுதி, அறுபத்து இரண்டு வயது வரைக்கும் மூன்றாம் பகுதி, நூறு வயது வரைக்கும் நான்காம் பகுதியாகும். யோகத்தில் நின்று சகசிரதளத்தில் சிவபெருமானைக் கண்டவர்கள், மேற்கண்ட நான்கு பகுதிகள் எதிலும் அடங்க மாட்டார்கள். அவர்கள் காலச்சக்கரத்துக்கு அப்பாற்பட்டவர்கள், அவர்கள் தங்களுக்கு வயது ஆவதையே உணர மாட்டார்கள்.

ஐயைஞ்சு மூன்று – இருபத்து எட்டு
ஈரைம்பது  – நூறு


காலம் கழிந்து கொண்டே இருக்கிறது

உற்றறிவு ஐந்தும் உணர்ந்தறிவு ஆறு ஏழும்
கற்றறிவு எட்டும் கலந்தறிவு ஒன்பதும்
பற்றிய பத்தும் பலவகை நாழிகை
அற்ற தறியாது அழிகின்ற வாறே – 741

விளக்கம்:
உற்றறிவு ஐந்து – சுவை, ஒளி, ஊறு, நாற்றம், ஓசை ஆகியவற்றால் அறியும் அறிவு
ஆறாவது அறிவு – மனம், அறிவு ஆகியவற்றால் எதையும் பாகுபடுத்தி அறியும் அறிவு
ஏழாவது அறிவு – பாகுபடுத்துவதால் வரும் முடிவைச் சார்ந்து இருத்தல்
எட்டாவது அறிவு – நூல்களைக் கற்று அறியும் அறிவு
ஒன்பதாவது அறிவு – நூல்களில் கற்றவற்றை அனுபவமாக அறியும் அறிவு
பத்தாவது அறிவு – அனுபவமாக உணர்ந்தவற்றைக் பற்றிக் கடைபிடிக்கும் அறிவு

இந்த அறிவுநிலைகளால் பல உலக விஷயங்களில் ஈடுபட்டு, நம்முடைய கால அளவு கழிந்து வீணாவதை உணராமல் இருக்கிறோம்.


காலத்தைக் கடந்து நிற்கலாம்

மதிவட்டம் ஆக வரைஐந்து நாடி
இதுவிட்டு இங்கு ஈராறு அமர்ந்த அதனால்
பதிவட்டத் துள்நின்று பாலிக்கு மாறும்
அதுவிட்டுப் போமாறும் ஆயலுற் றேனே – 740

விளக்கம்:
மதிவட்டம் எனப்படும் சகசிரதளத்தில் வியாபினி முதலான ஐந்து கலைகளை உணர்ந்து, பிறகு அதை விட்டு சிரசில் இருந்து பன்னிரெண்டு அங்குல அளவுக்கு மேல் வசிக்கும் சிவபெருமானை உணர்ந்து யோகம் செய்வோம். ஆராய்ந்து பார்த்தால், சகசிரதளத்துக்கு மேல் கவனம் செலுத்தி யோகம் செய்யும் போது, சிவபெருமானின் அருள் பெற்று, நாம் காலத்தைக் கடந்து நிற்பதை உணரலாம்.

மதிவட்டம் – சகசிரதளம்
வரை ஐந்து – வியாபினி, வியோமரூபை, அநந்தை, அநாசிருதி, உன்மனி
பதிவட்டம் – சிவன் இருக்கும் இடம்