கொலை செய்பவர்க்கு துர்மரணம் தான்!

கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை
வல்லடிக் காரர் வலிக்கயிற் றாற்கட்டிச்
செல்லிடு நில்லென்று தீவாய் நரகிடை
நில்லிடும் என்று நிறுத்துவர் தாமே. – (திருமந்திரம் – 198)

விளக்கம்:
எப்போது பார்த்தாலும் கொல்லு, குத்து என்று சொல்லிக் கொண்டிருக்கும் கொலைத் தொழில் புரிபவர்களுக்கு ஒருநாள் துர்மரணம் தான் ஏற்படும். அவர்களை யமதூதர்கள் வலிய கயிற்றால் கட்டி தீயினால் ஆன நரகத்திற்கு இழுத்துச் சென்று “இங்கேயே இரு” என்பார்கள். அங்கே அவர்களை நெடுங்காலம் வைத்திருந்து நட என்றும் நில் என்றும் ஆணையிட்டு வதைப்பார்கள்.

வல்லடி – துர்மரணம்


இறைவனுக்கேற்ற சிறந்த மலர் – கொல்லாமை

பற்றாய நற்குரு பூசைக்கும் பன்மலர்
மற்றோர் அணுக்களைக் கொல்லாமை ஒண்மலர்
நற்றார் நடுக்கற்ற தீபமும் சித்தமும்
உற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே.  – (திருமந்திரம் – 197)

விளக்கம்:
பற்றுக்களில் இருந்து நாம் விடுபட நம் குருநாதனாகிய சிவபெருமானுக்கு பலவிதமான மலர்களைக் கொண்டு பூஜை செய்கிறோம். ஆனால் நம் சிவனுக்கு பிடித்த மலர், பிற உயிர்களைக் கொல்லாமை என்கிற விஷயமாகும். நம்முடைய நடுங்காத திட மனமே, நாம் அவனுக்கு ஏற்றும் சிறந்த தீபமாகும். நம் குருநாதனை வைத்து வழிபடச் சிறந்த இடம் நம்முடைய இருதயமே!