கல்வியினால் மயக்கம் தெளியும்

நூலொன்று பற்றி நுனியேற மாட்டாதார்
பாலொன்று பற்றினால் பண்பின் பயங்கெடும்
கோலொன்று பற்றினால் கூடாப் பறவைகள்
மாலொன்று பற்றி மயங்குகின் றார்க்களே. – (திருமந்திரம் –295)

விளக்கம்:
சாஸ்திரங்களைக் கற்று அறிவு நுன்மை அடையப் பெறாதவர்கள், காமத்தைப் பற்றிக் கொண்டு, தம்மிடம் உள்ள மற்ற நல்ல பண்பினால் கிடைக்கக் கூடிய பயன்களையும் கெடுத்துக்கொள்கிறார்கள். கம்பு ஒன்றைக் கையில் எடுத்தாலே கூடியிருக்கும் பறவைகள் தன்னாலே ஓடி விடுவதை போல, சாஸ்திரங்களைக் கற்றுத் தெளிந்து ஞானம் அடைந்தால் காமம் போன்ற மயக்கங்கள் தன்னாலே ஓடி விடும். ஆனாலும் மக்கள் ஆசையை பற்றிக் கொண்டு மனம் மயங்குகிறார்களே!


நல்வாழ்விற்கு வழித்துணையாய் வருபவை

துணையது வாய்வரும் தூயநற் சோதி
துணையது வாய்வரும் தூயநற் சொல்லாம்
துணையது வாய்வரும் தூயநற் கந்தம்
துணையது வாய்வரும் தூயநற் கல்வியே. – (திருமந்திரம் – 294)

விளக்கம்:
நல்வாழ்விற்கு வழித் துணையாய் வரும் விஷயங்கள் இவை.

  • தூய நற்சோதி (சோதி வடிவான சிவபெருமான்).
  • தூய நல் சொற்கள் (இனிய சொற்களை மட்டும் பேசுதல்).
  • தூய நல் சுக்கிலம் (சுக்கிலம் கெடாமல் காத்தல்).
  • தூய நல் கல்வியினால் மேல் சொன்ன மூன்று துணைகளையும் பெறலாம்.

(கந்தம் – சுக்கிலம்)


கல்வியின் வேரைக் காண்போம்

கல்வி யுடையார் கழிந்தோடிப் போகின்றார்
பல்லி யுடையார் பாம்பரிந்து உண்கின்றார்
எல்லியும் காலையும் ஏத்தும் இறைவனை
வல்லியுள் வாதித்த காயமும் ஆமே. – (திருமந்திரம் – 293)

விளக்கம்:
கல்வி கற்றவர்கள் கூட எல்லாருமே இறை வழிபாட்டில் ஆர்வம் கொள்வதில்லை. கல்வியின் வேரைக் கண்டவர்கள் தான் இறை வழிபாட்டின் அவசியத்தை உணர்கிறார்கள். அவர்கள் பாம்பு போல நீளும் குண்டலினியைப் பற்றி, அதன் ஆற்றலை மேம்படுத்துகிறார்கள். நாம் இரவும் பகலும் நம் இறைவனை நினைத்து வழிபடுவோம். அவ்வாறு வழிபட்டால் அந்த இறைவனின் சக்தி வலிமையாக உள்நின்று நம் உடலினைக் காக்கும்.

(பல்லி – வேர்,  எல்லி – இரவு,  வல்லி – வலிமை,  காயம் – உடல்)


கல்வியால் பாவம் தொலையும்

நிற்கின்ற போதே நிலையுடை யான்கழல்
கற்கின்ற செய்மின் கழிந்தறும் பாவங்கள்
சொற்குன்றல் இன்றித் தொழுமின் தொழுதபின்
மற்றொன்று இலாத மணிவிளக் காமே. – (திருமந்திரம் – 292)

விளக்கம்:
நிலைத்து நிற்கும் பரம்பொருளான சிவபெருமானின் திருவடிச் சிறப்பைச் சொல்லும் கல்வியை இளமையிலேயே கற்போம். அக்கல்வியால் நம் பாவங்கள் தொலைந்து போகும். சொல் குற்றம் இல்லாது அந்த இறைவனை தொழுவோம், ஒப்பீடு செய்ய முடியாத மணிவிளக்காய் அந்த இறைவன் தோன்றி அருள்வான்.

(செய்மின் – செய்யுங்கள், கழிந்தறும் – கழிந்து போகும்)


கற்றறிவாளர் சொல்வதைக் கேட்போம்

கற்றறி வாளர் கருதிய காலத்துக்
கற்றறி வாளர் கருத்திலோர் கண்ணுண்டு
கற்றறி வாளர் கருதி உரைசெய்யுங்
கற்றறி காட்டக் கயல்உள வாக்குமே. – (திருமந்திரம் – 291)

விளக்கம்:
உண்மையான கல்வி கற்ற அறிவாளர்கள் சொல்லும் கருத்தை நாம் எண்ணிப் பார்த்தால், அந்தக் கருத்தினில் ஞானம் இருக்கும். கற்றறிந்த அறிவாளர்கள் நமக்காகத் தரும் உரைகளை நாம் கற்று அறிவோம். அந்த உரைகள் நம் அறிவுக் கண்ணைத் திறக்கும்.


கற்க வேண்டிய உண்மையான கல்வி!

குறிப்பறிந் தேன்உடல் உயிரது கூடிச்
செறிப்பறிந் தேன்மிகு தேவர் பிரானை
மறிப்பறி யாதுவந்துஉள்ளம் புகுந்தான்
கறிப்பறி யாமிகுங் கல்விகற் றேனே. – (திருமந்திரம் – 290)

விளக்கம்:
மனம் ஒருமைப் படும் விதம் அறிந்தேன்.  இணைந்திருக்கும் உடலுக்கும் உயிருக்கும் இடையே உள்ள உறவை அறிந்தேன். உள்ளத்தினுள் புகுந்த தேவர்பிரான் சிவபெருமானை மறுக்காமல் ஏற்க கற்றேன். உவர்ப்பு ஏற்படுத்தாத இந்த வகையான கல்வியை நிறைய கற்றேன்.

மனத்தை ஒருமைப் படுத்தலும்  உடல், உயிருக்கு இடையேயான உறவை அறிந்து கொள்ளுதலும், கற்க வேண்டிய முக்கிய  கல்வியாகும்.

(குறிப்பு – மன ஒருமை, செறிப்பு – உறவு, கறிப்பு – உவர்ப்பு)


தொட்டுத் தொடர்வோம் ஈசனை

விட்டுப் பிடிப்பதென் மேதகு சோதியைத்
தொட்டுத் தொடர்வன் தொலையாப் பெருமையை
எட்டும்என் ஆருயி ராய்நின்ற ஈசனை
மட்டுக் கலப்பது மஞ்சனம் ஆமே.  –  (திருமந்திரம் – 289)

விளக்கம்:
மேலான சோதி வடிவாய் இருக்கும் சிவபெருமானை நாம் ஏன்  நினைப்பதும் மறப்பதுமாய் இருக்கிறோம்? அவன் நினைவை உறுதியாகத் தொட்டுத் தொடர்ந்து அவனது முடிவில்லாத பெருமையை உணர்வோம். நம் ஆருயிராய் நிற்கும் அந்த ஈசனின் நினைவில் எப்போதும் கலந்திருப்பதே நாம் அவனுக்குச் செய்யும் திருமஞ்சனமாகும்.

ஈசனின் நினைவை பற்றுவதும் விடுவதுமாய் இல்லாமல், தொடர்ந்து அவனை நினைத்திருப்போம்.

(மேதகு – மேலான,  மஞ்சனம் – நீராடல்)


நம் அன்பை ஈசன் அறிவான்

ஈசன் அறியும் இராப்பக லுந்தன்னைப்
பாசத்துள் வைத்துப் பரிவுசெய் வார்களைத்
தேசுற்று இருந்து செயலற் றிருந்திடில்
ஈசன்வந்து எம்மிடை ஈட்டிநின் றானே.   – (திருமந்திரம் – 288)

விளக்கம்:
இரவும் பகலும் தன் மேல் அன்பு கொண்டு பக்தி செய்பவர்களை அந்த சிவபெருமான் நன்றாக அறிவான்.  நாம் ஞானம் பெற்று நமக்கென ஒரு செயல் இல்லாமல் இருந்தால், அந்த ஈசன் வந்து நம் மனத்தில் எழுந்தருளி நிற்பான்.

(பரிவு – பக்தி,  தேசு – ஞானம்)


அன்பினால் இறைவனை அறிவோம்

முன்பு பிறப்பும் இறப்பும் அறியாதார்
அன்பில் இறைவனை யாம்அறி வோம்என்பர்
இன்பப் பிறப்பும் இறப்பும் இலான்நந்தி
அன்பில் அவனை அறியகி லாரே.  – (திருமந்திரம் – 287)

விளக்கம்:
இந்தப் பிறவிக்கு முன்பு நாம் கொண்ட பிறப்பும் இறப்பும் பற்றி நம்மால் அறிய முடியாது. ஆனால் மனத்தில் அன்பு இருந்தால் நாம் இறைவனை அறிந்து கொள்ளலாம். அந்த நந்தியம்பெருமான் பிறப்பும் இறப்பும் இல்லாதவன். அன்பினால் அவனை உணரும் எண்ணம் இல்லாதவராய் இருக்கிறோமே!

நம்முடைய பிறப்பையும் இறப்பையும் ஆராய்வதை விட்டு, பிறப்பும் இறப்பும் இல்லாத நந்தியை அன்பினால் அறிந்து கொள்வோம்.


இன்பத்தின் தித்திப்பு அவன்

நம்பனை நானா விதப்பொரு ளாகுமென்று
உம்பரில் வானவர் ஓதுந் தலைவனை
இன்பனை இன்பத் திடைநின்று இரதிக்கும்
அன்பனை யாரும் அறியகி லாரே.  – (திருமந்திரம் – 286)

விளக்கம்:
சிவபெருமான் அனைவராலும் நம்பப்படுபவன். அவன் எல்லாவிதப் பொருளாகவும் இருக்கிறான். தேவலோகத்தில் உள்ள வானவர்கள் எல்லாம் சிவனைத் தான் போற்றி வணங்குகிறார்கள். நமக்கெல்லாம் இன்பம் தருபவன் அந்த இறைவனே! நமது இன்பத்தில் நின்று தித்திக்கும் பொருளாக இருப்பவன் அவனே! அந்த அன்பு வடிவான சிவனை நாம் இன்னும் அறிந்து கொள்ளவில்லை.

(இரதிக்கும் – தித்திக்கும்)