பிறர் மனைவியை விரும்பினால் வம்சம் இல்லாமல் போகும்

திருத்தி வளர்த்ததோர் தேமாங் கனியை
அருத்தமென் றெண்ணி அறையில் புதைத்துப்
பொருத்தம் இலாத புளிமாங் கொம்பேறிக்
கருத்தறி யாதவர் காலற்ற வாறே. – (திருமந்திரம் – 202)

விளக்கம்:
ஒருவன் தன்னிடம் உள்ள கனிந்த மாம்பழத்தை, இதை வைத்திருந்து பிறகு சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று நினைத்தான். பக்கத்தில் இருந்த ஒரு புளியமரத்துக் கிளையில் ஏறி புளியம்பழத்தை பறித்து சாப்பிட்டான். புளிப்புச் சுவை அவனுக்கு ஒத்துக்கொள்ளவில்லை, வைத்திருந்த மாம்பழமும் கெட்டு விட்டது. அது போலவே சிலர், தன் மனைவி எங்கே போய் விடப் போகிறாள் என்று நினைத்து பிறர் வீட்டுப் பெண்ணைத் தேடிப் போகிறார்கள். எங்கே போனாலும் அவர்கள் சுகப்பட மாட்டார்கள், வம்சம் இல்லாதவர்களாகவும் ஆவார்கள்.


அடுத்தவர் மனைவியை பாக்காதீங்க!

ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே
காத்த மனையாளைக் காமுறுங் காளையர்
காய்ச்ச பலாவின் கனியுண்ண மாட்டாமல்
ஈச்சம் பழத்துக்கு இடருற்ற வாறே. – (திருமந்திரம் – 201)

விளக்கம்:
அன்புடைய மனைவி ஒருத்தி வீட்டில் இருக்கும் போது, பிறரின் மனைவி மேல் தகாத ஆசை கொள்ளும் ஆண்களின் செயல் எப்படி இருக்கிறது என்றால், நன்கு காய்த்து பழுத்த பலாப்பழம் ஒன்று வீட்டில் இருக்கும் போது, அதைச் சாப்பிடாமல் காட்டில் உள்ள ஈச்சம் பழத்திற்காக துன்பப்படுவது போன்றதாகும்.