பொறுமை பயில்வது அவசியம்

வல்வகை யானும் மனையிலும் மன்றிலும்
பல்வகை யானும் பயிற்றி பதஞ்செய்யும்
கொல்லையி னின்று குதிகொள்ளும் கூத்தனுக்கு
எல்லையி லாத இலயம்உண் டாமே. –  (திருமந்திரம் – 542)

விளக்கம்:
காட்டில் நின்று குதித்து ஆடும் கூத்தனுக்கு எல்லை இல்லாத பொறுமை உண்டு. அதனால் தான் அவன் லயத்தோடு ஆடுகிறான். நாம் வீட்டிலும் வெளியே பொது இடங்களிலும் உறுதியோடு பொறுமை காக்க வேண்டும். அதற்காக பல வகையிலும் நமது மனத்தை பக்குவப்படுத்தி பயிற்றுவிக்க வேண்டும்.


ஞானியை மன்னனும் வணங்குவான்

ஞானம் விளைந்தவர் நம்மிட மன்னவர்
சேனை வளைந்து திசைதொறும் கைதொழ
ஊனை விளைத்திடும் உம்பர்தம் ஆதியை
ஏனை விளைந்தருள் எட்டலு மாமே. –  (திருமந்திரம் – 541)

விளக்கம்:
ஞானம் விளைந்த பொறுமை மிக்க ஞானிகள் அனைவராலும் வணங்கப்படுவார்கள். அந்நாட்டின் மன்னனும் தனது சேனைகளுடன் அந்த ஞானி இருக்கும் திசை நோக்கி பணிந்து வணங்குவான். இவ்வளவு பெருமை படைத்த ஞானிகள் நம்மையெல்லாம் படைத்த ஆதிக்கடவுளான சிவபெருமானை அடைவார்கள். மற்றவர்கள் எல்லாம் தமது பொறுமையினாலே ஞானத்தைப் பெறும் போது சிவபெருமானை அடைவார்கள்.


பொறுமை உடைய ஞானி!

ஓலக்கம் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள்
பாலொத்த மேனியன் பாதம் பணிந்துய்ய
மாலுக்கும் ஆதி பிரமற்கும் .மன்னவன்.
ஞாலத் திவன்மிக நல்லன்என் றாரே. –  (திருமந்திரம் – 540)

விளக்கம்:
தேவலோகத்தின் கொலுமண்டபத்தில் சூழ்ந்திருக்கும் தேவர்கள் எல்லாம் பாலைப் போன்ற தூய்மையான மேனியைக் கொண்ட சிவனின் பாதம் பணிந்தார்கள். அவர்களிடம் சிவபெருமான் சொல்கிறான் – “பொறுமை உடைய ஞானி உலகத்திலேயே மிக நல்லவன் ஆவான். பொறுமை உடையவன் திருமாலையும் பிரமனையும் விட மேலானவன் ஆகிறான்”.