நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை

வரையிடை நின்றிழி வான்நீர் அருவி
உரையில்லை உள்ளத் தகத்துநின் றூறும்
நுரையில்லை மாசில்லை நுண்ணிய தெண்ணீர்
கரையில்லை எந்தை கழுமணி யாறே.  – (திருமந்திரம் – 249)

விளக்கம்:
மலைப்பகுதிகளில் நின்று பெய்யும் அருவி போன்ற மழையைப் பற்றிச் சொல்ல வார்த்தைகள் இல்லை. மழையைப் பார்த்தால் உள்ளத்திலும் உற்சாக மழை ஊறும். மழை நீரில் நுரையில்லை, அழுக்கு இல்லை. அது தெளிவான நீர் ஆகும். மழைக்கு கரை கிடையாது, அது பெய்யும் பரப்பு அவ்வளவு அகன்றதாகும். மழை என்பது நம் தலைவனாம் சிவபெருமான் நமக்குத் தரும் சுத்தமான இரத்தினம் ஆகும்.


மழையே வருக! வளமெல்லாம் தருக!

அமுதூறு மாமழை நீரத னாலே
அமுதூறும் பன்மரம் பார்மிசை தோற்றும்
கமுகூறு தெங்கு கரும்பொடு வாழை
அமுதூறுங் காஞ்சிரை ஆங்கது வாமே.  – (திருமந்திரம் – 248)

விளக்கம்:
மாமழை நீரினாலே உணவுப் பொருட்கள் பெருகும். உலகமெங்கும் இனிமையான பல மரங்கள்  உண்டாகும். பாக்கு, தென்னை, கரும்பு மற்றும் வாழை மரங்கள் செழிக்கும். இவற்றோடு மருத்துவ குணம் கொண்ட எட்டி மரங்களும் அங்கே உருவாகும்.

அமுது என்னும் சொல்லுக்கு முதல் வரியில் உணவு என்னும் பொருளும், அடுத்த வரியில் இனிமை என்னும் பொருளும், கடைசி வரியில் மருந்து என்னும் பொருளும் பொருத்தமாய் அமைகிறது. வானச் சிறப்பு சொல்லும் இப்பாடலைப் பாடி மழை வேண்டுவோம்.

(கமுகு – பாக்கு,  தெங்கு – தென்னை,  காஞ்சிரை – எட்டி)